வியாழன், 29 செப்டம்பர், 2011

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்..-2

சித்திரை எப்படி ஆண்டின் தொடக்கமாயிற்று என்பது ஒருபுறம் இருக்க , தமிழர்களின் காலப் பகுப்பின்படி, சித்திரையும் வைகாசியும்  இளவேனிற் காலமாகும்.வறட்சியும் கதிரவனும் வாட்டி எடுக்கும் காலம வளம் குன்றிய காலம். வாழ்வில் மகிழ்ச்சி எப்படி இருக்கும்?.இந்நிலையில் புத்தாண்டு பிறந்தால் கொண்டாட முடியுமா? அதனாலன்றோ  - மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு, சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு, என்னும் பழமொழி தோன்றிற்று. தை பொறந்தா வழி பொறக்கும்  என்று தமிழ் உழவன் வகுத்த விதி உலகப்..பொது விதியாகத் திகழ்கின்றது, உழவனே உலகை அளந்தவன், அறிந்தவன். அவன் வகுத்த அளவைகள் கணக்கியலை ஆளுகின்றன. 6, 12, 24, 60, 360 . நாழிகை (படி) 60. அல்லும் பகலும் 60 நாழிகை.. ஒரு மணிக்கு 2 1/2 நாழிகை கணக்கு இன்றும் சரியாக இருக்கிறதே.உழவின் வயது 9,000 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள்.. உலகம் முழுதும் அறுவடை நாள் தான் ஆண்டின் தொடக்கமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது.உலகின் தொல் வரலாறு குறித்துப் பேசும் இரஷ்ய அறிஞர் “ How time was measured in ancient times- Land tillers knew that summer, the harvest time, occurred regularly. They counted time by periods from one harvest to the next.That was how time began to be counted by years. என்று கூறுகின்றார். அறுவடைத் திங்களை ஆண்டின் தொடக்கமாகக் கொள்வது பொருத்தம் தானே.

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்..

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆவணியா, சித்திரையா, ,தையா..?தொல்காப்பியர் காலத்தில் ஆவணித் திங்களே ஆண்டின் தொடக்கமாக இருந்தது.இது குறித்து அறிஞர் சாமி.சிதம்பரனார் “ ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், தொல்காப்பியர் கார்காலத்தையே முதலில் கூறியுள்ளார்.
காரும் மாலையும் முல்லை-குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்.பொரு.அகம்.6)
ஒரு காலத்திலே ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும் இறுதி மாதம் ஆடியாகவும் வைத்து எண்ணப்பட்டு வந்தது இதனை “ காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரையீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப்படுத்த இரண்டு திங்கள் ஒரு கால மாக்கினர்” என்று நச்சினார்க்கினியர் மேலே காட்டிய சூத்திரத்தின் உரையிலே குறிப்பிட்டுள்ளார். சிங்க ஓரை- ஆவணி மாதம். கற்கடக ஓரை - ஆடி மாதம்.
பிற்காலத்திலேதான்  சித்திரையை முதல் மாதமாக வைத்து எண்ணினர். ஆவணி முதல் மாதமாக இருந்த காலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாகும். இவ்வாறு வானநூல் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்
தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருக்கின்றது ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.... தொடரும்

என்ன கொடுமையடா இது..

சென்னை மட்டுமன்று தமிழ் நாடே  தண்ணியில்லாத காடாகி விட்டது
நீர் நிலைகளைக் காக்கத் தவறிய அரசு இருந்தால் என்ன அழிந்தால் என்ன..?
கூத்தாடிகளால் குட்டிச் சுவராகி விட்டதே தமிழ் நாடு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -4

பசுமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே
                கழார்க் கீரன் எயிற்றி, குறுந்.261:3-8
உரை: தோழி, என் நெஞ்சம் புண்பட்ட  துயரத்தால் எனக்கு உறக்கம் வரவில்லை.முன்பு பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாத மழை பின்பு பெய்ததால் எள் பயிர்கள் உள்ளீடு இல்லாத வெறுங் காய்களைப் பெற்றன.சிறிதாக மழை பெய்யும் கார்ப் பருவக் கடைசி நாட்களில் சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களுடைய எருமை, இருள் செறிந்த நடுச் சாமத்தில் ஐ எனக் கத்துகின்ற அச்சம்தரும் வேளையிலும் நாழிகைக் கணக்கர் இரவு முழுவதும் உறங்காது விழித்துக் காலக் கணக்கை ஆராய்ந்து அறிவிக்கும் காலத்திலும் என் கண்கள் உறங்கவில்லை.

திங்கள், 26 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -3

தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாஅது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
............................................ (ப.பாலை:209-212
வணிகர்கள், தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒப்பவே கருதி வாங்கிக் கொள்வதையும் அதிகமாகக் கொள்ளாமல் கொடுப்பதையும் குறைத்துக் கொடுக்காமல் பல பண்டங்களையும்  நேர்மையாக விலை கூறி விற்பர்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி அற்றே பசலை 
 பரணர், குறுந்.399: 1,2
உரை: ஊருணியில் படர்ந்திருக்கும் பாசி போன்றது,  மேனியில் படர்ந்திருக்கும் பசலை

வியாழன், 22 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

நில்லாமையே  நிலையிற்று....
உரை: நிலையாமையே நிலையானது
மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்,குறுந். 143

தமிழே

தமிழுக்குக் கேடு செய்தால்  தலைமுறை தழைக்காது
மானுட சக்திக்கு மேலொரு சக்தி இல்லை

சங்க இலக்கியச் செய்திகள்

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகுமென்று ஆள்மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே
----- மிளைப் பெருங் கந்தன்,குறுந்.136 
உரை:  காமம் காமம் என்று இழிவுடைய பொருள் போல் பேசுவர். காமம் வருத்தும் நோய் அன்று , சிறுத்தும் பெருத்தும்  தணிந்தும் அமைவதும் இல்லை. யானை குளகு என்னும் தழை உணவை உண்டு மதத்தை ஆள்கின்ற  தன்மையும் உண்டு. அதைக் காட்சியால் அறிகின்றவர்கள் அறிவர்.

குளகு என்ன வகை இலை / மூலிகை / தழை, உங்களுக்குத் தெரியுமா ?