செவ்வாய், 29 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - உங்களுக்குத் தெரியுமா ?

கூம்பிப் பற்று விடு விரலில் பயறு காய் ஊழ்ப்ப -என்று அகநானூறு 339ஆம் பாடல் கூறுவது குவிந்து பற்று நீங்கின விரல்கள் போல் பயற்றுச்செடியில் காய்கள் முற்றவும் என்பதாம் இதில் பற்று நீங்கிய என்பது எதைக் குறிக்கிறது ?

சங்க இலக்கியச் செய்திகள் - பாக்கு

பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ..... .. மதுரைத் தத்தங் கண்ணனார், அகம். 335 :23,24

கமுகின் முற்றாத பசுங்காயின் நீர் இனிமை மிக்குடையது.
                           அங்கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப்பட்ட
                  செங்களி விராய காயும் செம்பழுக் காயும் தீந்தேன்
             எங்கணும் குளிர்ந்த இன்னீர் இளம் பசுங்காயும் மூன்றும்
                 தங்களி செய்யக் கூட்டித் தையலார் கை செய்தாரே
   இச் செய்யுளில் கூறிய பாக்கின் மூன்று நிலையும் மூவேறு பொழுதிற்கு உரியனவாம்  என்பது


                   பைங் கருங்காலிச் செங்கனி அளைஇ
                   நன்பகற்கு அமைந்த அந்துவர்க் காயும்
                   இருங்கண் மாலைக்குப் பெரும் பழுக் காயும்
                   வைகறைக்கு அமையக் கை புனைந்து இயற்றிய
                   இன் தேன் அளைஇய இளம் பசுங்காயும்
என்னும் பெருங்கதைப் பகுதியாற் பெறப்படும் 

திங்கள், 28 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

களவில் களித்தலும் உண்டு.

அம்ம வாழி தோழி காதலர்
வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக வளர்ந்தன்று.......
                          மாமூலனார்,அகம்.325:1-4
உரை: தோழி, நான் கூறுவதனைக் கேட்பாயாக, நம் காதலர் வெள்ளிய மணல் உயர்ந்த,பொலிவு பெற்ற  வாயிலையுடைய பெரிய மனையின்கண் , இருள் செறிந்த நீண்ட இரவில்  புணரும் குறி அமைந்த களவு ஒழுக்கம் வரம்பிகந்து நீண்டது....

சங்க இலக்கியச் செய்திகள்

பருவம் உற்றனள்..
கூழையும் குறுநெறி கொண்டன முலையும்
சூழி மென்முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள்  இவள் எனப் பன்மாண்
கண் துணையாக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையிற் செறியேன் யானே
                       குடவாயிற் கீரத்தனார்,அகம்.315:1-6
உரை:- தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன.முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள். -என்று- என் கண்களேபலமுறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது.அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை  இற்செறியாது ஒழிந்தேன்  (வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என்பதாம்)

புதன், 23 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

காதல் மரம்
அகநானூறு-273, ஒளவையார்
தலை வரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.-   (10- -17)
உரை; முடிவு எல்லை இதுவென அறியப் பெறாத தன்மையொடு வருதலையுடைய வாடைக் காற்றோடு கூடி, முலையின் கண்ணே தோன்றிய  வேட்கை நோயாகிய வளரும் இளைய முளை, தளர்ச்சியை உடைய நெஞ்சினிடத்தே வருத்தமாகிய திரண்ட அடியாய் நீண்டு, ஊரார் எழுப்பிய அம்பலாகிய அழகிய கிளைகளைக்கொண்டு, ஆராக் காதல் என்னும் தளிர்களைப் பரப்பி, புலவரால் புகழப் பெற்ற நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி, நிலத்தின் எல்லை எல்லாம் கவிந்து, அலர் ஆகிய மலர்களைச் சொரியவும் (தலைவர்) வாராராயினர்.
சிறப்பு:- இங்ஙனம் உருவகங்களைக் காரணகாரிய முறையால் அமைத்திருப்பது ஒளவையாரது நல்லிசைப் புலமையின் எல்லையில் பெருமைக்குச் சான்றாகுமாறு அறிக.

திங்கள், 21 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

கள்ளூர் என்னும் ஊரின் கண் நடந்த நிகழ்ச்சி.....
தொல்புகழ் நிறைந்த பல்பூங்கழனிக்
கரும்பமல் படப்பைப் பெரும் பெயர்க் கள்ளூர்த்
திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய 
அறன் இலாளன் அறியேன் என்ற 
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறி ஆர்பெருங் கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
                        மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்,அகம். 256:14-21
அழகு விளங்கும் பழைமையான புகழ்மிக்க, பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு நிறைந்த தோட்டங்களையும்  உடைய மிக்க சிறப்பு வாய்ந்த கள்ளூர் என்னும் ஊரின் கண், அழகிய நெற்றியினை உடைய இளையாள் ஒருத்தியின்  அழகிய நலத்தினைக் கவர்ந்துண்ட அறநெறி நில்லான் ஒருவன் பின் அவளைக் கை விடுத்து அவளை அறியேன் என்று கூறிய நீதியில்லாத கொடிய சூளினை, அவர்தம் கூட்டம் உணர்ந்த சான்றாவாரை (சாட்சியர்) வினவி உணர்ந்து, அவனை த் தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையில் இறுகப் பிணித்து நீற்றினை அவன் தலையில் பெய்த காலத்தே சிறப்பு மிக்க அவையின்கண் ஆரவாரம் பெரிதாயிற்று.
மூன்று கவராய  கிளைகளின் நடுவே வைத்துப் பிணித்தலும் நீறு தலைப்பெய்தலும் அஞ்ஞான்று குற்றத்திற்கு விதிக்கும் தண்டகளாம் என்க.

புதன், 16 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

பாடல் கிடைக்கவில்லையே...
தமிழகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெரு நாளிருக்கைத்
தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
                                   - நக்கீரர்,அகம். 227:14-20
உரை-
 தழும்பனின் வீரமும் வண்மையும் தமிழ்நாடு  முழுதும் பரந்திருந்தமையின் தமிழகப்படுத்த இசை முரசு என்றார். வாளினையும் முரசினையும் இருக்கையினையும் உடைய தழும்பன் எனவும் தூங்கல் பாடிய நல்லிசைத் தழும்பன் எனவும் கூட்டுக. தூங்கல் - தூங்கல் ஓரியார் என்னும் புலவர். அவர் தழும்பனைப் பாடிய பாட்டுக் கிடைத்திலது

சங்க இலக்கியச் செய்திகள் -

கணவனும் மனைவியும்....
அன்பும் மடனும் சாயுலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி ...  ..
                      -எயினந்தை மகனார் இளங்கீரனார்,அகம்.225: 1-4
அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும்  ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க இவ்விடத்தே இருந்தோம். 
அன்பு- ஒருவரையொருவர் இன்றியமையாமைக்கேதுவாகிய காதல்.
மடன் - ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமை.
சாயல் - மென்மைத் தன்மை
இயல்பு - ஒழுக்கம்
பிற என்றது செறிவு, நிறை, அறிவு முதலாயினவற்றை. ஒன்றுபடு கொள்கை என்றமையால் இவையெல்லாம் தலைவனுக்கும் தலைவிக்கும் ஒத்திருத்தல் வேண்டும் என்றவாறாயிற்று.

புதன், 9 நவம்பர், 2011

India`s Health Drink


Drink….Drink
Health Drink… 14 Minerals…..24 Vitamins…. 34 Salts…..44 Carbohydrates..Drink
You can play Cricket…..
  BUT
You Cannot Play Foot Ball

வெள்ளி, 4 நவம்பர், 2011

கற்றவர்க்குத் தெரியும் கல்வியின் அருமை

சென்னை: உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மணியரசன் விடுத்துள்ள விரிவான அறிக்கை:

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.

முதலில் சமச்சீர் கல்வியை தடை செய்தார்

கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.

செம்மொழி ஆய்வு மையத்தை சிறுமைப்படுத்தினார்

இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.

தமிழக அரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை

தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்

இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.

அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.

அறிவு தாகத்தின் மீதான தாக்குதல்

தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

புதன், 2 நவம்பர், 2011

அழிக்கப்படும் நூலகங்கள்

அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் கட்டிக் காத்த (லைசியம் ) நூலகம் ரோமனிய படையெடுப்பில் அழிக்கப்பட்டது இனவெறிக்கு இலக்கான யாழ் நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. தமிழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நூலகம் ஆய்வுக்குப் பயனின்றி அள்ளி எறியப்பட்டது.அண்ணா நூற்றாண்டு நுலகத்தையும் அழிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது.ஒருநாட்டிற்குப் பெருமை தருவன கல்விக்கூடங்களா ? மருத்துவமனைகளா?.
உலகின் மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கிய மாமேதை லெனினை நினத்துப்பாருங்கள். 
கல்வியின் அருமை பெருமைகளைத் தமிழும் காமராசரும் பிறந்தமண்ணில்  பேசவேண்டிய நிலை ஏற்பட்டதே.
தமிழை அழிக்க நினைத்தால்... தலைமுறை தழைக்காது
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் -குறள் 448

செவ்வாய், 1 நவம்பர், 2011

தரையில் நடக்காத தலைவர்கள்

தமிழ்நாட்டில், தரையில் நடக்காத தலைவர்கள் இப்பொழுது தண்ணீரில் நடக்கப்போகிறார்கள் பத்திரிகையில் படம் வரும் தொலைக் காட்சி நேரடி ஒளிபரப்பு நடத்தும்.
தலைநகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளத் திட்டம் இல்லை வடிகாலில் வானளாவிய கட்டடங்கள் நகரெங்கும் ஆழ குழி தோண்டி அதில் சென்னையைப் புதைக்கத் திட்டம் உள்ளது.
ஒழுங்காக ஒரு குடும்ப அட்டை வழங்கத்தெரியாதவர்க:ள் நாட்டை ஆளவந்துவிட்டார்கள்
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் வானளாவிய ஊழலுக்கு வழி வகுக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எடுபிடிகள்.
காவல் துறையே கெட்டுக் கிடக்கும்போது சட்டம் ஒழுங்கு ச்றப்பாக இருக்கிறதா ?

சங்க இலக்கியச் செய்திகள் - பங்குனி உத்தர விழா

வென்று எறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
வருபுனல் நெரிதரும் இருகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே.......( உறையூர் முதுகூத்தனார்,அகம். 137::4-12)
உரை:- உறையூர், பகைவர்களை வென்று அடிக்கின்ற வீர முரசினையும் போர் வெற்றியையும்  இனிய கள்ளினையுடைய கரும்பு மிக்கதும் உடையது சோழரது ஊராகும்.அவ்வூரிடத்தே பெருகிவரும் நீர் உடைத்திட , இடிந்து விழும் கரைகளையுடைய காவிரிப் பேரியாற்றின் அழகிய வெண்மையான மணலையுடைய மணங் கமழுகின்ற குளிர்ச்சி பொருந்திய சோலையில் உத்தரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில், பங்குனி உத்தர விழா நடைபெறும்.
அவ்விழாவின் மறுநாளில் பூக்களும் சிலைகளும் நெருங்கின மரங்கள் அடர்ந்த குறுங்காட்டின் நடுவேயுள்ள நெருப்பில்லாத வெற்றுஅடுப்புகளையுடைய (திரு) அரங்கம் போல, உன்னுடைய நெற்றியானது அழகு இழந்து....
குறிப்பு:- இப்பாடலாசிரியர் காலத்துத் திருவரங்கம் ஓர் ஊராகக் கருதப்படாது அகன்ற பொழில் சூழ்ந்த ஆற்றிடைக்குறையாகக் கருதப்பட்டது (இருந்தது) எனலாம். குறுங்காடு மண்டிய அவ்வாற்றிடைக்குறையில் உறையூர் மக்கள் பங்குனி உத்தர விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவர்.மக்கள் ஒன்றுகூடி விடியுமளவும் விழாக்கோலம் பூணுவர், யாண்டும் அடுப்புகள் அமைத்துத் தீமூட்டி உணவு சமைத்து உண்டு களித்து இன்பம் எய்துவர், மறுநாள் மக்கள் நடமாட்டம் இன்றி, அடுப்புகளிலும் தீயின்றி அவ்வரங்கம் அழகிழந்து பொலிவற்று வறிதே வெறிச்சோடி காணப்படும்.

சங்க இலக்கியச் செய்திகள் -9

நெடுவேள் மார்பின் ஆரம் போல
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பி குடவயின்
கல் சேர்ந்தன்றே பல்கதிர் ஞாயிறு- நக்கீரனார்,அகம்.120:1-5
உரை:-முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவரென்பது சேய், செவ்வேள் என்னும் பெயர்களாலும்  பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு,. பவழத் தன்ன  மேனி என்பவற்றானும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும் உவமமாயின.