வியாழன், 31 மே, 2018

மடகாசுகர் – சல்லிக்கட்டு--3


மடகாசுகர் – சல்லிக்கட்டு--3

ஏறுதழுவல்
ஏறுதழுவல் என்பது காளையை அடக்குவதோ வீழ்த்துவதோ இல்லை…! காட்டாற்று வெள்ளமெனச் சீறிப்பாய்ந்துவரும் காளையைத் தழுவி அதன் கொம்பில். மஞ்சள் துணியில் முடிந்து வைக்கப்பட்ட சல்லிக்காசுகளை (பொற்காசுகள்) இளமையும் ஆண்மையும் பொருந்திய வீரன் ஒருவன் காற்றெனக் கடுகிச் சல்லிக்காசு முடிச்சை பறித்தெடுப்பது மட்டுமே. இஃது ஒரு வீரவிளையாட்டு..!.
சல்லிக்கட்டுத் திரைப்படக் குழுவினர் சல்லிக்கட்டுக் காளை இனம் குறித்து அரிய ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டுப் பழங்குடியனர் வளர்த்துவரும் காளையினம் தமிழ் நாட்டின் காங்கேயம் காளை இன வழித் தோன்றல்களே என்பதை அறிவியல் ஆய்வின்படி (டிஎன் ஏ – சோதனை) உறுதி செய்துள்ளதை அறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் இடம் பெயரும்பொழுது தம்முடன் கால்நடைகளையும் கொண்டு செல்வர்; தொல்பழந்தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இன்று கென்யா நாட்டில் பழங்குடியினராக வாழ்ந்து வருகின்றனர்.
சங்க இலக்கியச் சான்று
”கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்”
சோழன் நல்லுருத்திரன். கலித். 103:63 ~ 64
……………………………………………………
கொல்லும் இயல்புடைய காளையின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை இப்பிறப்பில் மட்டுமன்று மறு பிறப்பிலும் தழுவமாட்டாள் ஆயமகள்…
”கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம்வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே”
சோழன் நல்லுருத்திரன். கலித். 106:43 ~ 45
தோழி……! இவள் கணவன் கொல் ஏறு தழுவி இவளைக் கொண்டான் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே யான் மோர் விற்று வருகின்ற இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோ…?
மேற்குறித்துள்ள சான்றுகள் சல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு தமிழர்க்கே உரியது என்பது தெற்றென விளங்கக் காணலாம். இன்றும் உலகின் பல இடங்களில் தென் தமிழ்நாட்டைக் கடல்கொண்ட காலத்தில் இடம்பெயர்ந்து,  பழங்குடி இனத்தவராக வாழ்ந்துவரும் மக்களிடையே இவ்விளையாட்டு பல்வேறு வடிவங்களை, மாற்றங்களைப் பெற்றுவழக்கில் இருந்துவருவதை அறியலாம். இவ்வகையில் மடகாசுகர் பழங்குடியினரிடமும் சல்லிக்கட்டு உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
 …… தொடரும்

திருக்குறள் -சிறப்புரை :892


திருக்குறள் -சிறப்புரை :892
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். ---- ௮௯௨
பேரறிவாளர்களாகிய சான்றோரைப் போற்றி ஒழுகாமல் நடந்துகொண்டால் அது வாழ்வில் நீங்காத துன்பத்தைத் தரும்
“பொறுப்பார் என்று எண்ணி புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் …..” ---நாலடியார்.
நாம் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக்கொள்வர் என்று எண்ணி, அப்பழுக்கற்ற சான்றோர்கள் வெறுக்கும்படியான செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

புதன், 30 மே, 2018

மடகாசுகர் – சல்லிக்கட்டு--2


மடகாசுகர் – சல்லிக்கட்டு--2

கோண்டுவானா
மடகாசுகர் தீவும் தென் இந்தியாவும் பசிபிக் தீவுகளிற் பலவும் இலெமூரியாவின் மீந்த பகுதிகள் ஆகும்.
          அந்நாளில் நீர்மட்டத்திற்கு மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே. மற்ற இன்றைய கண்டங்களெல்லாம் நீருள் அமிழ்ந்தும் அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே. –கா. அப்பாத்துரை.
                   மடகாசுகர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானா கண்டத்திலிருந்து பிரிந்து விட்டதாகவும், எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாசுகர் தீவிலிருந்து இந்தியாவும் பிரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
                            கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாசுகர் தீவுக்கும் ஆத்ரேலியா கண்டத்துக்கும் இடையில் ஆசியா கண்டத்தின் வழியாக நிலத்தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்கின்றனர்.
தொல் பழங்குடி
                     தமிழர் வரலாறு கால எல்லைகளைக் கடந்து முன்னேறிச் செல்கிறது. தமிழ் மொழியும் பண்பாடும் உலகில் இன்னின்ன இடங்களில் இன்னின்னவாறு இருந்தன என்று கணிக்க இயலாத அளவுக்குத் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
மடகாசுகர் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தொல்பழங்குடியினர் பற்றிய ஆவணப் படம் ஒன்றை  25-05-18 அன்று டிஃச்கவரி-தமிழ் ஒளிபரப்பியது.
வாழ்க்கை முறை
மடகாசுகர் தீவில் பழங்குடியினர், நல்ல இயற்கைச் சூழலோடு பொருந்தி வாழ்ந்து வருகின்றனர். மூன்று வேளையும் அரிசி உண்வையே உண்டு வருகின்றனர். மாடுகள் செல்வமாக மட்டுமின்றித் தெய்வமாகவும் போற்றப்படுகின்றன. காளைகளில் அழகும் இளமையும் வலிமையும் உடைய காளைக்குத் தாம் வழிபடும் தெய்வத்தின் பெயரைச் சூட்டி வளர்க்கின்றனர்.
சல்லிக்கட்டு
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டாகிய சல்லிக்கட்டு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு  முந்தைய சிந்துசவெளி நாகரிகத்தோடு தொடர்புடையது என்பது யாவரும் அறிந்ததே.

Jallikattu–Bull Taming Sport in India

The history of Jallikattu can be traced back to the Indus Valley Civilization, more than 5000 years ago, making it one of the oldest surviving tradition in the world. A well-preserved seal was found at Mohenjodaro in the 1930s which depicts the bull fighting practice prevalent during the Indus Valley Civilization –தொடரும்..

திருக்குறள் -சிறப்புரை :891


90 – பெரியாரைப் பிழையாமை
திருக்குறள் -சிறப்புரை :891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றுலு ளெல்லாம் தலை. --- ௮௯௧
(போற்றலுள் எல்லாம்)
எடுத்த செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடைய சான்றோர்களை இகழாதிருத்தல், தமக்குத் தீங்கு வாராமல் பாதுகாத்துக்கொள்ளும் காப்புகள் எல்லாவற்றினும் தலையாயது ஆகும்.
“ ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க”—பழமொழி.
வலிமையால் தருக்கித் திரிந்து, சான்றோரை இகழ்ந்து பகைத்துக் கொள்ளா விரும்பாமல் இருப்பாயாக.


செவ்வாய், 29 மே, 2018

மடகாசுகர் – சல்லிக்கட்டு


மடகாசுகர் – சல்லிக்கட்டு
இலெமூர்
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவு. மக்கள் தொகை (2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி) 19,448815. மொழி, மலகாசி /பிரஞ்சு / ஆங்கிலம். உலகில் அரிய உயிரினங்கள் வாழும் இடம்.. ” முதனி” – எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த வரிவால் – நரிமுகக் குரங்குகள் – இலெமூர் “  உலகில் வேறெங்கும் காணமுடியாத உயிரினம்.
மலைப்பாம்பு
 மலைப்பாம்புகளில் “பைத்தானிடே “ என்றழைக்கப்படும் முட்டையிடும் மலைப்பாம்புகள் தொன்மையான இனமாகக் கருதப்படுகிறது. இதில் 26 இனங்கள் உள்ளன. இவ்வகைப்பாம்புகள் பழைய உலகம் எனேஉ அழைக்கப்படும் ஆப்பிரிக்கா, ஆத்ரேலியா, ஆசியா கண்டங்களிலும் இந்தோனீசியா, பிலிப்பைன்சு, பாப்புவா நியு கினியா தீவுகளிலும் காணப்படுகின்றன.-விக்கிப்பீடியா.
  மேற்குறித்துள்ள கண்டங்களும் தீவுகளும் தொல்தமிழகத்தோடு நெருங்கிய உறவுடையவை.
மாசுணம்
“மைந்துமலி சினத்த களிறு மதனழிக்கும்
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி”—மலைபடுகடாம்,(260-261)
வலிமிகும் சினங்கொண்ட யானையின் வலிமையைக் கெடுத்து, அதனை விழுங்கும் ஆற்றலுடைய, அகன்ற படத்தினையும் அழகிய கண்ணினையும் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களைப் போன்ற தோற்றத்தையும் கொண்ட பெரும் பாம்பு கிடக்கும் வழியை விலக்கிச் செல்க.
அகல்வாய் பாந்தள்—அகநானூறு, 68.
களிறு பாந்தள் பட்டென..—நற்றிணை, 14.
பாந்தள்-(Python)
        மாசுணம் – பெரும்பாம்பு --(Rock Snake, Phythonidae)
Anaconda –ஆனைகொண்டான், ஆனை கொன்றான்.
இத்தகைய பழந்தமிழ்ப்புலவர்களின் பதிவுகள் தொல் தமிழகத்தின் வரலாற்றை அறிய துணைபுரிகின்றன.-----தொடரும்….

திருக்குறள் -சிறப்புரை :890


திருக்குறள் -சிறப்புரை :890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. ---- ௮௯0
ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உடன்பட்டு வாழாதார் வாழ்க்கை ஒரு குடிசையுள் பாம்புடன் சேர்ந்துவாழ்வதை ஒக்கும்.
“ தன் உடம்பு தாரம் அடைக்கலம் தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினைப் போல் போற்றிக் காத்து உய்க்க..” –ஆசாரக்கோவை.
தன் உடம்பு, மனைவி, அடைக்கலமாக வைத்த பொருள், தானே முயன்று சேர்த்து வைத்த பொருள் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப்போல் போற்றிப் பாதுகாத்துக்கொள்க.

திங்கள், 28 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :889


திருக்குறள் -சிறப்புரை :889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.---- ௮௮௯
(எள் பகவு அன்ன)
உட்பகை, எள் முனை அளவு மிகச் சிறிதாக  இருந்தாலும் அது ஒரு குடும்பத்தை அழிக்கக் கூடிய ஆற்றல் உடையதாம்.
“ தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ.”—சிலப்பதிகாரம்.
பழைய ஊழ்வினை காரணமாகத் துயர் உற்றவளின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த மன்னர் மன்னன் பாண்டியன் வாழ்வானாக.

ஞாயிறு, 27 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :888



திருக்குறள் -சிறப்புரை :888

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை  உள்ள குடி.---- ௮௮௮
உட்பகை உண்டான குடும்பம், அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்பு தேய்ந்து இற்றுப்போய் விடுவதைப் போல, உறவுகள் சிதைந்து அழியும்.
இன்சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா
வன் சொல்லான் ஆகும் பகைமை…..”---சிறுபஞ்சமூலம்.
இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.



சனி, 26 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :887


திருக்குறள் -சிறப்புரை :887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.---- ௮௮௭
செம்பும் அதன் மூடியும் இணைந்திருந்தாலும் ஒன்றோடொன்று வேறுபட்டதே அதுபோல உட்பகை உண்டான இல்லத்தில் அனைவரும் ஒன்றுகூடி இருந்தாலும் மனத்தால் வேறுபட்டே நிற்பர்.
“உலகு அறிய தீரக் கலப்பினும் நில்லா
சில பகலாம் சிற்றினத்தார் கேண்மை…” ---நாலடியார்.
உலகத்தார் அறியும்படி, நெருக்கமாக இருந்தாலும் அற்பர்களுடைய உறவு மிகக் குறுகிய காலமே நிலைத்திருக்கும்.


When Chola ships of war anchored on the east coast


When Chola ships of war anchored on the east coast

Coast Was A Strategic Gateway For Powerful Navy Of Later Cholas For Trade & Invasion Of Southeast Asian Countries  

WATERWAYS OF ANCIENT TAMILS
Ø 
The eastern coast of India was a strategic location during the period  of the later Cholas (850 – 1279 AD )
Ø Nagapattinam was an important port that was used for commercial and defence purposes due to  its proximity to Thanjavur and Gangaikondacholapuram, capitals of the Cholas.
Ø List of countries conquered by the Cholas during the period : Cambodia, Indonesia, Myanmar, Malaysia, Sri Lanka, Singapore, Vietnam and Thailand.
Ø Popular kings in the Chola dynasty, who took expeditions overseas to conquer Southeast Asian countries: Raja Raja Chola, Rajendra Chola, and Kulothunga Chola.
Ø Inscriptions engraved  on the walls of Brihadeeswarar Temple, (Big Temple) in Thanjavur enumerate the list of 16 countries conquered by the Cholas.
Ø Ahead of this, Tamils had trade links with rest of the world since the ancient times ; references are available in Sangam-era works like Pattinappalai and Purananuru which are more than 2,000 years ago.  
TOI- 12/03/18

வெள்ளி, 25 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :886


திருக்குறள் -சிறப்புரை :886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.---- ௮௮௬
(கண்படின்)
ஒன்றிணைந்து வாழும் சுற்றத்தாரிடத்தே உட்பகை தோன்றிவிடின், அழியாமல் இருப்போம் என்பது எக்காலத்தும் அரிதாம்.
” முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண்பாரும் குறடுபோல் கைவிடுவர்.”—நாலடியார்.
தன்னை வெறுக்காமல் இருக்கும்படி,  சம்மட்டியைப்போலே அடிமேல் அடிவைத்துப் பிறரைத் தன்வயப்படுத்தி நாள்தோறும் உண்பவர்களும் காலம் வாய்த்தால் பற்றுக் குறடைப் போல் கைவிட்டு நீங்குவர். ( சம்மட்டி இரும்பை அடித்துப் பதமாக்குவதைப்போல் பிறரைத் தன் விருப்பத்திற்கு இசைந்து நடக்குமாறு செய்துவிடல்.)

வியாழன், 24 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :885


திருக்குறள் -சிறப்புரை :885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவுந் தரும்.--- ௮௮௫
உறவு முறைமை உடைய ஒருவனிடத்து உட்பகை தோன்றிவிடின் அஃது ஒருவன் இறப்பதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் தரும்.
“ தெரிவுடையார் தீஇனத்தார் ஆகுதல் நாகம்
  விரி பெடையோடு ஆடி விட்டற்று.” –நாலடியார்.
 தெளிந்த அறிவுடையவர்கள் தீமை செய்யும் சிற்றினத்தாரோடு உறவுடையவராய் இருப்பது, நாகப் பாம்பு, பெட்டை விரியன் பாம்பொடு புணர்ந்து நீங்கினது போலாம்.
(நாகம், பெண் விரியன் பாம்பொடு புணர்ந்தால் இறந்துபடும் என்பர். அறிவியல் நோக்கில் ஆய்க.)


செவ்வாய், 22 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :884


திருக்குறள் -சிறப்புரை :884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்.--- ௮௮௪
மனம் மாறாத உட்பகை ஒருவனுக்குத் தோன்றிவிட்டால் அது அவனுக்குச் சுற்றத்தார் விலகிச் செல்வதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
”கட்டு இலா மூதூர் உறைவு இன்னா”—இன்னாநாற்பது.
சுற்றமாகிய கட்டு இல்லாத பெருமையுடைய பழைய ஊரிலே வாழ்தல் துன்பமாம்.

திங்கள், 21 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :883


திருக்குறள் -சிறப்புரை :883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். --- ௮௮௩
(உலைவு இடத்து)
உட்பகைக்கு அஞ்சித் தக்க நேரத்தில் ஒருவன்  தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் குயவன் பசிய மண்கலத்தை அறுத்து எடுப்பதைப்போல் உட்பகை  அவனை அடியோடு அழித்துவிடும்.
“உள்ளத்தான் நள்ளாது உறுதித்  தொழிலர் ஆய்க்
கள்ளத்தான் நட்டார் கழி கேண்மை –தெள்ளிப்
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூங்குன்ற நாட
மனத்துக்கண் மாசாய் விடும். –நாலடியார்.
  சேற்றைப்போக்கித் தெளிவாய் நிற்கும் அருவி நீர் பொழியும்  அழகிய மலையுள்ள நாட்டை உடையவனே…!  மனத்தால் விரும்பாமல் உண்மையாக அன்புடையவர் என்று நம்பத்தக்க உறுதியான செயல்களைச் செய்யும் வஞ்சகமானவர்களுடைய நெருக்கமான உறவானது மனதில் குற்றம் உள்ளதாய் நிற்கும்; அதற்கு அஞ்ச வேண்டும்.

ஞாயிறு, 20 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :882


திருக்குறள் -சிறப்புரை :882
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.--- ௮௮௨
வாள் போல் நேருக்கு நேர் நின்று ஏதிர்க்கும் பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம் ; உறவினர்போல் உடனிருந்து கேடு செய்யும் உட்பகைக் கொண்டோரைக் கண்டு அஞ்சி ஒதுங்க வேண்டும்.
“ நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை….” –கலித்தொகை.
தம் நெஞ்சு அறியத் தாம் செய்த தீவினைகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும் செய்வர், ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சுக்கு மறைத்தல் இயலாது. நெஞ்சத்தைக் காட்டிலும் அணுக்கமான சான்று வேறில்லை.



சனி, 19 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :881


திருக்குறள் -சிறப்புரை :881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.----- ௮௮௧
ஒரு பருவத்தில் நிழலும் நீரும் இனிமை உடையனவாக இருந்தாலும் பின்னர் நோய் செய்வனவாகும் அதுபோல் சுற்றத்தார் இனியவரேயானாலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வாராயின் அவர்களும் விலக்கிவைக்க வேண்டிய தீயவர்களே.
“ சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன்.” –நான்மணிக்கடிகை.
பொன்னின் தரம் அரிய அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத் தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.




வெள்ளி, 18 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :880


திருக்குறள் -சிறப்புரை :880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். --- ௮௮0
(உளர் அல்லர்)
பகைவருடைய தலைமையை அழிக்க இயலாதவர்  மூச்சு உடையவராயினும் உயிரோடு இருக்கின்றவர் அல்லர்.
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப.” –தொல்காப்பியம்.
தும்பை என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறன் ஆகும். அத்திணை தன்னுடைய வலிமை பொருளாகக் கொண்டு எதிர்த்து வந்த வேந்தனை எதிர்த்துச் சென்று போரிட்டு அழிக்கும் சிறப்பினைக் கூறுவதாகும் என்பர் சான்றோர்.



வியாழன், 17 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :879


திருக்குறள் -சிறப்புரை :879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. --- ௮௭
முள் மரம் இளையதாக இருக்கும் பொழுதே வெட்டி விட வேண்டும்; அதுவே மரமாகிவிட்டால் வெட்ட வருவோரின் கையைத் தீண்டி வருத்தும். (பகையைமுற்ற விடக்கூடாது.)
“ தன் பகை  கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ.” –புறநானூறு.
நலங்கிள்ளி, தன்னை வருத்தக் கருதும் பகையைப் போக்குவதோடு, தன்னைச் சார்ந்தோரின் பசியாகிய பகையையும் போக்குவதில் வல்லவன்.

புதன், 16 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :878


திருக்குறள் -சிறப்புரை :878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.--- ௮௭௮
பகையை எதிர்கொள்ளும் வகையறிந்து,  காலம், இடம் அறிந்து தன்னை நிலைப்படுத்தி,  தற்காப்பு முறையறிந்து செயல்பட்டால், வெற்றிகொள்ள முயலும் பகைவர்தம் செருக்கு, தானே அழிந்துபடும்.
“ பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி.”  --பதிற்றுப்பத்து.
புலவர்கள் சிறப்பித்துப் பாடுதற்குரிய பயன் நல்கும் பகைவர் ஊர்கள் பலவும் நீ (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) சினந்து எடுத்த போரால் அவற்றின் அழகு அழிந்து அச்சம் தரத்தக்கனவாயின.


செவ்வாய், 15 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :877


திருக்குறள் -சிறப்புரை :877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து. --- ௮௭௭
(பகைவர் அகத்து)
ஒருவன்,  தான் துன்புற்றதை அறியாதவர்களிடத்துத் தானே சென்று தன் துன்பத்தைச் சொல்லக்கூடாது அதைப்போலத் தன்னுடைய இயலாமையை தானே பகைவர்களிடத்துச் சொல்லக்கூடாது.
“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க…”—நாலடியார்.
தான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே, உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத் தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.

திங்கள், 14 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :876


திருக்குறள் -சிறப்புரை :876
தேறுனும்  தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.----- ௮௭
பகைவனை முன்பே ஆராய்ந்து அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும் தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனிடத்துச் சேராமலும் அவனை நீக்கி வைக்காமலும் நடுநிலையுடன் வாளாயிருத்தல் வேண்டும்.
“ பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்..” –நாலடியார்.
பல நாள்களும் அருகில் இருப்பவரானாலும் தம் மனதில் சில நாள்கள்கூட ஒட்டாதவரோடு சேர மாட்டார்கள் அறிவாளிகள்.

ஞாயிறு, 13 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :875


திருக்குறள் -சிறப்புரை :875
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. ---- ௮௭
(கொள்க அவற்றின்)
தனக்குத் துணை என்று எவரும் இல்லாது தனித்து நிற்கும்  நிலையில், தன் மீதுவந்த பகை இரண்டனுள் ஒன்றினைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
” பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்” –மணிமேகலை.
பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.

சனி, 12 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :874


திருக்குறள் -சிறப்புரை :874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.----- ௮௭
பகைவரையும் நண்பராகக் கொள்ளும் பண்புடையாளனின் பெருந்தன்மையின் கீழ் இவ்வுலகமானது நிலைபெற்றுள்ளது.
“….பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே.” –பரிபாடல்.
இறைவா..! உன் இயல்பினை அறியும் அறிவர்க்கு உனக்கு யாவரும் சுற்றத்தார் என்று கூறமுடியுமே ஒழிய, இவர் பகைவர் , இவர் நண்பர் என்று கூற இயலாது.



வெள்ளி, 11 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :873


திருக்குறள் -சிறப்புரை :873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.---- ௮௭
தான், தனி ஒருவனாக இருந்துகொண்டு பலரிடமும் பகைமையைத் தேடிக்கொள்பவன் பித்துப் பிடித்தவர்களைவிட அறிவு கெட்டுப்போனவனாவான். (அஃதாவது புத்தி பேதலித்தவன்.)
“உடையார் இவர் என்று ஒரு தலையா பற்றிக்
கடையாயார் பின் சென்று வாழ்வர்….” –நாலடியார்.
பொருள் உடையவர் இவர் என்று நினைத்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, கீழ்மக்களின் பின்னே போய்ப் பிழைப்பர் சிலர்.

வியாழன், 10 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :872


திருக்குறள் -சிறப்புரை :872
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.--- ௮௭
(வில் ஏர் உழவர் ; சொல் ஏர் உழவர்)
ஒருவன், போர்க் களத்தில் வில்லை ஏராகக் கொண்டு வினையாற்றும் வீரர்களோடு பகை கொண்டாலும் , சொல்லாகிய ஏரைக்கொண்டு புலமைக்களத்தில் வினையாற்றும் சான்றோர்களுடன் பகை கொள்ளாதிருக்க வேண்டும்.
“நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர். ---நாலடியார்.
நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப்போலத்  தம்முடைய இனத்தாரின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.


புதன், 9 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :871


திருக்குறள் -சிறப்புரை :871
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.---- ௮௭௧
பகை என்னும் பண்பு இல்லாத அஃதாவது தீமை பயக்கும் ஒன்றினை , ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பக் கூடாது.
“ஓக்கிய ஒள்வாள் ஒன்னார் கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பது மெய்யாகும்…” நாலடியார்.
ஒருவன்  பகைவனைக் கொல்வதற்கு வீசிய வாள், தவறிப்போய் பகைவன் கையில் சேர்ந்தால் , வாள் வீசியவனின் துணிவு அழிந்துபோகும்

செவ்வாய், 8 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :870


திருக்குறள் -சிறப்புரை :870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.--- ௮௭0
அறநூல்களைத் தேர்ந்து கல்லாதவனைப் பகைத்துக்கொள்வதால் வரும் எளிய பொருளை(இழப்பினை) விரும்பி ஏற்றுக்கொள்ளாதவனை எக்காலத்தும் புகழ்,  விரும்பி வந்து சேராது .  
“எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.”—நாலடியார்.
கல்வியைப்போல் அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.



திங்கள், 7 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :869


திருக்குறள் -சிறப்புரை :869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.--- ௮௬௯
(சேண் இகவா)
அறிவற்ற, எதற்கும் அஞ்சும் இயல்புடைய ஒருவனின் பகையைப் பெற்றால் அப்பகையைப் பெற்றவர்க்கு இன்பம் வெகுதொலைவில் இல்லை.
“ ……  ……. ….. ……………. நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.” ---நாலடியார்.
நுட்பமான நூல்களைக் கற்று அறிவு பெறாத  பயனற்றவர்களுடன்  உறவாடல் நரகங்களுள் ஒன்று.
(அறிவற்றவர் நட்பு நரக வேதனையைத் தரும்.)



ஞாயிறு, 6 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :868


திருக்குறள் -சிறப்புரை :868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து. ---- ௮௬௮
(குணன் இலனாய் ; இனன் இலனாம்)
ஆறறிவுக்குரிய குணம் ஒரு சிறிதும் இல்லாதவனாய், செய்யும் குற்றங்கள் பல உடையவனாய் ஒருவன் இருந்தால் அவன் யாதொரு துணையுமின்றித் தனித்து,  தன்னை அழிக்கக் கருதும் பகைவைர்க்கு எளிய துணையாவான்.
“நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு.” –பழமொழி.
நற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வரித்தினாராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர்தம் கொள்கை இல்லை.

சனி, 5 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :867


திருக்குறள் -சிறப்புரை :867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.--- ௮௬௭
கூடவே இருந்து குழிபறிக்கும் அஃதாவது தன்னுடன் இருந்துகொண்டே  தனக்குக் கேடுதருவனவற்றைச் செய்பவனை ஏதாவது கொடுத்தாகிலும் அவனது பகையைக் கொள்ள வேண்டும்.
””கரப்புடை உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடைப் பட்ட பரல்”---பழமொழி.
பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர் செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.