வெள்ளி, 7 நவம்பர், 2025

தமிழமுது –165 – தொல்தமிழர் இசை மரபு:..........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –165 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 25.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

 

 ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோன்றிய பேரிலக்கணமாகிய தொல்காப்பியத்தில், இசை பற்றிய குறிப்புகளும், இசைபாடுதலையே தொழிலாகவுடைய பாணர் முத்லானவர்களைப்பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்நூலிலே முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்கட்கும் வெவ்வேறுவகையான யாழ் அல்லது பண் உண்டு என்று குறிப்பிடப்படுவதால், அக்காலத்தே தமிழகம் முழுவதும் இசைக்களை பரவியிருந்ததென்பதும் எவ்வக்க் குடிமக்களும் இசையுணர்ச்சி உடையராய் இருந்தனர் என்பதும் பெறப்படும்.

 இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் விளங்கிய தெய்வப்புலமைத் திருவள்ளுவர் குழல், யாழ் என்னும் இசைக் கருவிகளைப்பற்றியும் பண்ணைப்பற்றியும் திருக்குறளில் கூறியுள்ளார் மற்றும் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும்  அவை பற்றிய குறிப்புகள் உள்ளன.

 சிலப்பதிகாரக் காப்பியத்தில் இசைக்கருவிகளின் பெயர்களும் இலக்கணங்களும் கருவிகளிலும் கண்டத்திலும் இசைகள் பிறக்கும் முறைமையும் பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

 அக்காலத்திலே, பேரியாழ், மகரயாழ்,  சகோடயாழ், செங்கோட்டியாழ், என நால்வகை யாழ்கள் இருந்தன. பேரிகை, இடக்கை, உடுக்கை,   மத்தளம், திமிலை, குடமுழா, தண்ணுமை, தடாரி,  முதலிய (31) முப்பத்தொருவகைத் தோற்கருவிகள், வாசிக்கப்பட்டன. ஆயிரம் நரம்புடைய ’ஆதியாழ்’ என்பதொன்று இருந்ததென்றும், ஆதியிசை (11,991) பதினொராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்று என்றும் கூறினால், பெரும்பாலார் வியப்படையக்கூடும்.

“உயிருயிர் மெய்யன வுரைத் தைம்பாலினும்

உடறமி  ழயலிசை யேழுடன் பகுத்து

மூவேழ் பெய்தந்………………………..

தொண்டு மீண்ட பன்னீ ராயிரம்

கொண்டன ரியற்றல் கொளை வல்லோர் கடனே.” – சிலம்பு , உரை.

ஆனால் பழந்தமிழ் நூல்கள் அவற்றின் உண்மையைத் தெரிவிக்கின்றன.

 ஷட்ஜம் முதலிய ஏழிசைகளும் – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,  தாரம் என்னும் தமிழ்ப் பெயர்கள் வழங்கின. இப்பொழுது ஆலாபனம் என்பது ஆளத்தி என்னும் பெயரால் வழங்கிற்று. த,ந, ம,  என்னும் மூன்று மெய்யினங்களோடு குற்றெழுத்து ஐந்தும், நெட்டெழுத்து ஐந்தும் தென்னா, தெனா என்னும் அசைகளும் ஆளத்தி செய்தற்கு உரியவாயிருந்தன. மூலாதாரம் தொடங்கி, எழுத்தின் நாதம் ஆளத்தியாய், பின்பு இசையென்றும் பண் என்றும் பெயர் பெறலாயின.

ஜநத ராகங்கள் பண் என்றும் ஜந்ய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன………………………….

………………தொடரும்………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக