திங்கள், 10 நவம்பர், 2025

தமிழமுது –168 – தொல்தமிழர் இசை மரபு:...........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –168 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 28.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

இராமன் வனம் புகுவான் என்ற சொல்லைக்கேட்ட அளவில் அயோத்தி மாநகரம் எய்திய துயரத்தைக் கம்பர் வருணித்திருக்கும்  பாடலில் இரண்டை நோக்குவோம் .

 

 “ ஆவும் அழுத அதன் கன்றழுத அன்றலர்ந்த

பூவும் அழுத புனற் புள்ளழுத கள்ளொழுகும்

காவும் அழுத களிறு அழுத கால் வாய்ப்போர்

மாவும் அழுத அம்மன்னவனை மானவே.” – 98.

 

“ கையால் நிலந்தடவிக் கண்ணீர் மெழுகுவர்

உய்யாள் பொற் கோசலையென்று ஓயாது வெய்துயிர்ப்பார்

ஐய இளங்கோவே ஆற்றுதியோ நீயென்பார்

நெய் ஆர் அழலுற்றது உற்றார் அந்நீணகரார்.” - 104

 

அவலச்சுவை என்னும் சோகரசம் இவற்றில் எவ்வளவு ததும்புகின்றது பாருங்கள்.

 

 “செல்லும் சொல வல்லானெதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்

“சொல்லுஞ் சுமந்தேன் இருதோள் எனச் சூம்பியேங்கும்

கல்லுஞ் சுமந்தேன் கணைப் புட்டிலும் கட்டமைந்த

வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டு என்னையென்றான்”- 135.

 

சீற்றம் தணியுமாறு கூறிய இராமருக்கு எதிராக எனது சீற்றத்தால் என்ன பயன் என்று இலக்குமனன் கூறும் மாற்றத்திலும், அவனது கோப உணர்ச்சி பொங்கித் ததும்புதலை அங்கை நெல்லிக்கனி எஅனக் காட்டும் இச்செய்யுளின் அருமையை நோக்குங்கள்.

 

 இனி, சுந்தரமூர்த்திகள் பரவை நாச்சியாரைக் கண்டதனைத் தெரிவிக்கும் பெரியபுராணம்…..

 

“ கற்பகத்தின் பூங்கொம்போ காமந்தன் பெருவாழ்வோ

பொற்புடை புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ

அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்.” – 140.

 

என்னும் அருமைத் தெய்வப் பாடலில் விளங்கும் உவகை வியப்பு, என்னும் சிருங்காரா,அற்புத உணர்ச்சிகளை எங்ஙனம் அளவிட்டு உரைக்க வல்லேம்.

இங்ஙனம் இவ்விசை மயமாக இருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பாற்கடல் போல் பரந்துள்ளன. அவற்றை எல்லாம் படித்தறிந்து இன்புற வேண்டுவது தமிழ் மக்கள் கடனேயாகும்.

………… …தொடரும்……………………

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக