தமிழமுது –238– தொல்தமிழர் இசை மரபு:98.
பேரியாழ் - யாழ் நூலின் கூறுபாடுகள்.
பத்துப்பாட்டு-
10. மலைபடுகடாம்: உரைப்பகுதி - தொடர்ச்சி.......!
மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார். பத்துப்பாட்டுள் இறுதிப் பாட்டு, 580 அடிகளைக் கொண்டது. புறப்பொருள் பற்றியது. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் இதன் பாட்டுடைத் தலைவன். திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் தான் அன்றைய செங்கண்மா என்ற ஊராகும் . இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாழிசை வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அதன் தோற்றம் அதற்கு முன்பு எத்தனை ஆண்டுக் காலம் யாழ், பல்வேறு வடிவங்களைப்பெற்றிருக்குமல்லவா ..?தொல்தமிழரின் இசை என்று தோன்றியதோ..!
’ தொடித் திரிவுஅன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்த்தன்ன நுண் துளை இரீஇ
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடிக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன்போல் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்த அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண்நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேிரியாழ்.--21 – 37.
யாழின் நரம்புகள் பத்தரின் மேற்பகுதியில் செல்லுமிடத்தில் தொய்வின்றி வலிமைபெற நிற்குமாறு குறுக்கே யானைக் கொம்பினால் புதியதாய்ச் செய்யப்பட்ட யாப்புப் பொருந்தும்படி அமைக்கப்படும். ஒலியைத் தன்னிடத்தே வாங்கி வெளிப்படுத்தும் யாழ்ப் பத்தரின் பசையிட்டுச் சேர்த்திப் புதிதாகப் போர்க்கப்படும் பொன் போன்ற நிறமுடைய தோலினை உடையது. வண்டு, மணம் கூடிய மகளிரின் மணம் நாறுதற்குக் காரணமாகிய மயிரினையுடைய அழகு, கட்புலனாக விளங்கும் மடந்தையின் மார்பிடத்துச் சென்று பின்பு இல்லையாகும் மயிர் ஒழுங்குடைய அழகிய வயிற்றைப்போலப் ‘பொல்லம் பொத்துதல்’ நடுவே அமைந்து, கண்ணுக்கு இனிதாக விளங்கும் , தனக்குக் கூறப்படும் அளவில் வேறுபடாமல், பகுத்தல் உண்டாக அகத்திட்ட உயர்ந்த வளைந்த உந்தியை உடையது. நுண்ணிய அரத்தால் அராவப்பெற்றதும் நுண்ணிய நீர்மையுடைய கரிய நிறத்தால், களம் பழத்தின் நிறத்தையுடையதும், கடுகித் தோன்றும் நிறத்தியுடையதும் ஆகிய வளைந்து ஏந்திய கோட்டினை உடையது ; பெரிய ஓசையை உடையது.
பேரியாழ் - மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்ற யாழின் வகைகளில் ஒன்று ; இது பெருங்கலம் என்றும் கூறப்படும்.
சொற் பொருள்:
தொடி- வளையல் ; தொண்டு - ஒன்பது ; திவவு -வார்க்கட்டு முறுக்காணி ; கடிப்பகை - வெண்சிறு கடுகு; கேள்வி - இசைநூலின் நுட்பம் ; அரலை - கொடும்பு, கொடிமுறுக்கு ; சுகிர் - வடித்தல் ; வரகின் குரல் - வரகின் கதிர் ; பத்தல் - அகௌ, வயிறு ; சிலம்பு - ஒலித்தல் ; பசை - பற்று, பிசின் ; வெண்கை - யானௌத் தந்தம் ; யாப்பு - பத்தரின் குறுக்கே அமைக்கப்பட்ட சட்டம் ; பச்சை - தோல் ; வதுவை - மணம் ; ஐம்பால் - கூந்தல் (குழல், அளகம், பனிச்சை, கொண்டை, துஞ்சை என ஐவகை கூந்தல் ஒப்பனை ) ஆகம் - மார்பு ; கவடு - பிளத்தல் ; உந்தி - யாழ்ப் பத்தர்த் துளை ; நுவறிய - அராவிய ; மாமை - கரு நிறம் ; உரு - நிறம் ; வணர்ந்து - வளைந்து ; உயிர் - ஒலி )
.................................................................................தொடரும்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக