தமிழமுது
–164 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 24.
முத்தமிழிசை.
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து, செவிப்புலனைக்
குளிர்வித்து, உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும்.
தும்பி, வண்டு, குயில், பூவை முதலிய உயிர்களிடத்து
இவ்வின்னோசை இயற்கையாகவே அமைந்து இன்பம் செய்கின்றது. மக்கள், தம் நுன்ணறிவு மாட்சியால்,
பற்பல வகையாகிய இன்னிசைகளைத் தம் மிடற்றிலிருந்தும், கருவிகளிலிருந்தும் எழுப்புகின்றனர்.
இசை இயல்புகளையும் வேறுபாடுகளையும் சிறப்பாக அறியாவிடினும் பொது வகையில் இசையை விரும்பாதவர்கள்
யாருமில்லை.
பச்சிளங்குழவியும் இசையை விழைகின்றது. ஆவினங்கள், இசையைக் கேட்டு அசையிடாதிருக்கின்றன.
யானை முதலிய வனவிலங்குகளும், பாம்பு முதலியனவும் இசைக்கு வசமாகின்றன. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை
விரும்புகின்றான். அவன் இசை வடிவமாக இருக்கின்றான் என்றும் இசையின் பயனாக உள்ளான் என்றும் இசை பாடுகின்றான்
என்றும் ஆன்றோர் கூறுவர். “ஏழிசையாய் இசைப் பயனாய்” என்று சுந்தரரும், “எம்மிறை நல்வீணை
வரிசங்குமே” என்று அப்பரும் கூறுதல் காண்க. கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகள் கையில்
வீணையை அமைத்துள்ள நம் முன்னோர்கள் இசைக் கலையை எவ்வளவு சிறந்தாதாகப் போற்றியிருத்தல்
வேண்டும்.?.
இனி, தமிழ்மக்கள் பண்டுதொட்டு இசையை எவ்வாறு போற்றி
வந்தனர் என்பதனைத் தமிழ் நூல்களின் ஆதரவைக்கொண்டு நோக்குவோம்.
தமிழ்மொழியானது மிகப்பழைய காலத்தில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று
பெரும் பிரிவுடையதாக இருந்தது. அதனால் முத்தமிழ்
என்ற வழக்கு உண்டாயிற்று. பழைய சங்க காலங்களில் முத்தமிழுக்கும் இலக்கண இலக்கியங்கள்
பற்பல இருந்தன. ஆசிரியர் அகத்தியனார் இயற்றிய
அகத்தியம் என்பது முத்தமிழ் இலக்கணமே. தலைச் சங்கப் புலவர்கள் இயற்றிய ’பெருநாரை’,
பெருங்குருகு’ என்பனவும் நாரதர் இயற்றிய ‘பஞ்ச பாரதீயம்’, அகத்தியர் மாணாக்கராகிய சிகண்டி
என்பவர் இயற்றிய ‘இசை நுணுக்கம்’ முதலியனவும் பழைய இசைத்தமிழ் நூல்களாம்.
ஏறக்குறைய
நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோன்றிய……….
………………தொடரும்………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக