சனி, 8 நவம்பர், 2025

தமிழமுது –166 – தொல்தமிழர் இசை மரபு:.............நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –166 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 26.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

ஜநத ராகங்கள் பண் என்றும் ஜந்ய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன. இசைப்பாட்டுக்கள் எல்லாம்  செந்துறை, வெண்டுறை, வரி, உரு முதலியவற்றில் எத்தனையோ பலவகைகள் உண்டு.  இப்பொழுது கீர்த்தனங்கள்  என்று கூறப்படுவன  உருக்களில் அடங்குவனவாகும். பல வகையான கூத்துக்களோடும் வரிப்பாடல்கள் பாடப்பட்டன.  கொற்றி, பிச்சி, சித்து, சிந்து, ஆண்டி, அம்மானை, பந்து, கழங்கு உந்தி, தோள்வீச்சு, சாழல், தெள்ளேணம்,  முதலிய எண்ணிறந்த கூத்துவகைகளும்  அவற்றிற்குரிய பாடல்களும் பயிற்சியில் இருந்தன.  அவை பெரும்பாலும் மகளிருடைய விளையாட்டுகளாக விளங்கின.

 

மற்றும் மகளிர் கிளியோட்டுவதும் பாட்டு,  சாந்து இடிப்பதும்  உழத்தியர் நாற்று நடுவதும் பாட்டு, களை பறிப்பதும்  பாட்டு, இவ்வாறு எல்லாச் செயல்களும் பாட்டுகளோடு நிகழ்ந்தன.  இவற்றால் முற்காலத்தில் தமிழகத்திருந்த ஆடவரும் மகளிரும் இசையும் கூத்தும் ஆகிய இன்ப விளையாட்டுகளால்  களி சிறந்து, உடம்பும் உள்ளமும் தளிர்ந்திருந்தனர்.  என்னும் உண்மை புலனாகும் என்க.

அம்மானை, பந்து, ஊசல், வள்ளை என்னும் வரிப்பாட்டுகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாகும். அன்பே வடிவாகிய மாணிக்கவாசகப் பெருமான் ஓதுவார் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்திலே தெள்ளேணம், சாழல், தோள்நோக்கம் உந்தி முதலிய வரிப்பாடல்களை அமைத்துள்ளார்.

தமிழிலே ஒப்பற்ற இசைப் பாக்களாக  சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை  என்னும் ஆறு காதைகளும் இசைப்பாக்களின் தொகுதியேயாகும்.

“ பவள வுலக்கை கையாற் பற்றித்

தவள முத்தங் குறுவாள் செய்கண்

தவள முத்தங் குறுவாள் செய்கண்

குவளை யல்ல கொடிய கொடிய” -  கானல் வரி.

“பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட

மின்னி லங்கு மேகலையா ளார்ப்ப வார்ப்ப வெங்கணும்

தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்தடித்துமே

தேவ ரார மார்பன் வாழ்க  வென்று பந்தடித்துமே.”- வாழ்த்துக்காதை.

 

 தேவாரம் , திருவாசகம்,  திருவிசைப்பா, திருவாய்மொழி, முதலியனவோ, வானோரும் அளவிடற்கரிய சிறப்புடைய இசைப் பெருஞ் செல்வக் களஞ்சியகளாகும்.

 

இயற்றமிழ் இசை : ……தொடரும்……………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக