ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் - வறுமையும் புலமையும்

அறியீரோ அருந்தமிழ்ப் புலவர் வாழ்க்கை
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்க இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண் ஆள் செல்வம் எய்திய
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே
                                                                                  கோவூர் கிழார்,புறம்.47
உரை: இரவலர், பழுத்த மரம் தேர்ந்து செல்லும் பறவை போலக் கொடைக்குரியவரைக் கருதிச் செல்வர். நீண்டவழி எனக் கருதாது கடத்தற்கரிய பல பகுதிகளையும் கடந்து செல்வர், குற்றமில்லாத தெளிந்த சொற்களால் தமக்கியன்றவாறு பாடிப் பரிசில் பெறுவர்: அப்பரிசிலைத் தம் சுற்றத்தினர்க்குத் தந்தும் தம்மிடம் மறைத்துக் கொள்ளாது தாமும் உண்டு தம் உள்ளம் மலரப் பிறர்க்கு வழங்கியும் வாழ்வர். தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பின் பொருட்டு வருந்தும் பரிசில் வாழ்க்கையை உடையவர், இத்தகைய வாழ்க்கை, பிறர்க்குத் தீமை புரிய அறியுமா எனில் அறியாது. பல நுட்பம் அமைந்த கல்வியின் சிறப்பால் தம்மை எதிர்ந்தோர் நாணும்படி பெருமையுடன் தலையுயர்த்திச் சென்றவிடத்தும் இனிதாக நடக்கும் இயல்புடையது, அதுவேயன்றி உயர்ந்த புகழுடைய நிலம் ஆளும் செல்வத்தை அடைந்த உம்மைப் போன்ற மன்னர்களின் தலைமையையும் உடையது.