செவ்வாய், 31 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 696

திருக்குறள் – சிறப்புரை : 696
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில்
வேண்டுப வேட்பச் சொலல். ---- ௬௯௬
அரசனின் உளக்குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாத மனநிலை அறிந்து சொல்ல வேண்டிய செய்தியை அவன் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டும்.
“இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்சமூலம்.

மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.

திங்கள், 30 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 695

திருக்குறள் – சிறப்புரை : 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. ---- ௬௯௫
அரசன் பிறரோடு கமுக்க உரையாடும் பொழுது  ஒட்டுக் கேட்டலைச் செய்யாமலும் ஆவலால் தொடர்ந்து வினவி அறிந்துகொள்ள முயலாமலும் அமைதி காத்து  அரசனே மனம்விட்டுச் சொன்னால் மட்டுமே அறிந்துகொள்ள வேண்டும். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்.”
“ தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
 அதன் பயம் எய்திய அளவை மான.” –பொருநராற்றுப்படை.

தவம் செய்வோர் தவம் செய்த உடம்புடனே அத்தவத்தின் பயனைப் பெற்றார் போல்..! பண்புடைமையாகிய உயர்ந்த ஒழுக்கமும் தவமே.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 694

திருக்குறள் – சிறப்புரை : 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. ---- ௬௯௪
பெருமை பொருந்திய மன்னன் அருகே இருக்கும்போது அவர்முன்  ஒருவன் பிறரை நெருங்கி அவர் செவியில் சொல்வதையும் பிறர் முகம் பார்த்துச் சிரித்தலையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்; அமைதி காத்தல் அவைக்கு நன்றாம்.
“தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
 கொண்டு அடையான் ஆகல் இனிது.” ---இனியவைநாற்பது.
தந்தையே ஆனாலும் அடக்கம் இல்லாதவன் ஆயின் அவன் சொல்லைக்கேட்டு நடவாமல் இருப்பது நன்று.


சனி, 28 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 693

திருக்குறள் – சிறப்புரை : 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. --- ௬௯௩
மன்னரின் சுற்றத்தார் யாவரும் மன்னரோடு தமக்குள்ள உறவைப் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் தம்மீது குற்றம் குறைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் ; அரசனுக்கு எவர்மீதாவது ஐயம் ஏற்பட்டுவிடின் அதனைத் தீர்த்தல் என்பது யார்க்கும் எளிதன்று.
“ சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அறக்கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்.” –குறிஞ்சிப்பாட்டு.

சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையுமென்றால் அவற்றைக் குற்றமற நீக்கிப் புகழை நிலை நிறுத்தல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை என்று கூறுவர் சான்றோர்.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 692

திருக்குறள் – சிறப்புரை : 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.--- ௬௯௨
மன்னர்க்கு உரிய உயரிய  சிறப்புகளைத் தம் மன்னரும் விரும்பி ஏற்பனவற்றைத் தாமும் விரும்பாதிருத்தல் மன்னரைச் சூழ்ந்திருப்போர்க்கு நிலையான செல்வத்தைக் கொடுக்கும்.
“ வேய் உறழ் பணைத்தோள் இவளோடு
 ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே.” ---பதிற்றுப்பத்து.
வேந்தே…! பருத்த அழகிய தோள்களையுடைய நின் மனைவியோடு நீ. வெள்ளம் எனும் எண்ணிக்கை கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக.


புதன், 25 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 691

அண்புடையீர்
ஓய்வு – தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் – சிறப்புரை : 691
70.மன்னரைச் சேர்ந்தொழுகல்
அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.--- ௬௯௧
வெகுளும் இயல்புடைய வேந்தரைச் சார்ந்திருப்போர் தீயில் குளிர் காய்வாரைப் போல மிக நெருங்காமலும் மிக விலகாமலும் ஒழுகுதல் வேண்டும்.
“நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
 அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”’ –நாலடியார்.

நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர் நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 690

திருக்குறள் – சிறப்புரை : 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.--- ௬௯0
உயிருக்கு இறுதி பயக்கும் நிலை ஏற்படினும் பகையரசரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது தன் மன்னன் கூறிய செய்திகளை முழுமையாக எடுத்துரைக்கும் உள்ள உறுதி கொண்டவனே சிறந்த தூதனாவான்.
“நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வதுஉணர்வார்.” –பழமொழி.
செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எது வந்தாலும் அஞ்சார்.
அன்புடையீர்
கண் நலம் காக்க 21 நாட்கள் ஓய்வில் … மீண்டும் சந்திப்போம்.


திங்கள், 23 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 689

திருக்குறள் – சிறப்புரை : 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.--- ௬௮௯
தூதன். அரசன் சொல்லியவாறு வழுவின்றி அப்படியே பகையரசரிடம் சொல்லும் பொழுது தன் அரசரின் புகழுக்குக் கேடு தரும் சொற்களை வாய்தவறியும் சொல்லாத துணிவு உடையவனே சிறந்த தூதன் ஆவான்.
“ பேணுப பேணார் பெரியோர் என்பது
 நாணுத் தக்கன்று அது காணுங்காலை.” –நற்றிணை.
ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.


ஞாயிறு, 22 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 688

திருக்குறள் – சிறப்புரை : 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. ௬௮௮
 மனத்தூய்மை உடையவனாதல் ; அமைச்சர் முதலிய கற்றறிந்தார் துணையைப் பற்றி நிற்றல் ; எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் துணிவு  உடையவனாதல் ஆகிய இம்மூன்றும் நிறைவாகக் கொண்டு  தன் அரசர் ஆராய்ந்து கூறியவழி வாய்மைதவறாது அஃதாவது சொற்குற்றம் வாராது தூதுரைத்தல் தூது செல்வானுக்குரிய பண்புகளாம்.
“ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் …” –நற்றிணை.

ஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்.

சனி, 21 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 687

திருக்குறள் – சிறப்புரை : 687
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.௬௮௭
ஆற்றவேண்டிய கடமை அறிந்து ; செயல்படுத்த வேண்டிய காலம் அறிந்து ; தக்க இடத்தையும் தேர்ந்து ; சொல்லவந்த செய்தியைத் தொகுத்தும் வகுத்தும் தெளிவாக உரைக்க வல்லவனே சிறந்த தூதனாவான்.
“இன்சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா
வன்சொல்லான் ஆகும் பகைமை….” ---சிறுபஞ்சமூலம்.

இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 686

திருக்குறள் – சிறப்புரை : 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.--- ௬௮௬
கருத்தைப் புலப்படுத்தும் நுட்பங்களைக் கற்றுப் பகையரசர் மனம்கொளச் சொல்லவந்த செய்தியைச் சொல்லி; அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; கருதிய காலத்தோடு அறியவேண்டியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவனே தூதனாவான்.
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.” ---குறள்.637.
கல்வி அறிவால் ஒரு செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்தல் வேண்டும்.


வியாழன், 19 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 685

திருக்குறள் – சிறப்புரை : 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.--- ௬௮௫
பகையரசரிடம் தூதுரைப்பவன் அரசர் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்துரைத்தும் கடுகி உரைக்க வேண்டின் கடுஞ்சொற்களை நீக்கி அவர் மனம் மகிழுமாறு இனிய சொற்களால் எடுத்துரைத்தும்  தன் அரசனுக்கு நன்மை பயக்குமாறு கடமையாற்றும் அறிவுடையவனே சிறந்த தூதன் ஆவான்.
”சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலி ஆகிப் பின்னும் பயக்கும்….” –ஐந்திணை எழுபது.

நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.

புதன், 18 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 684

திருக்குறள் – சிறப்புரை : 684
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.—௬௮௪
மெய்ப்பொருள் அறியும் அறிவு; அரிதாகிய தோற்றப் பொலிவு; நூல்பல கற்று ஆராய்ந்து பெற்ற கல்வியறிவு என இம்மூன்றினும் நிறைவான தேர்ச்சிபெற்ற ஒருவனே தூது செல்லத் தகுதி உடையவனாவான்.
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல” –நற்றிணை.
கொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது தகுந்த மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன் போல…. (வினையாற்றுக)



செவ்வாய், 17 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 683

திருக்குறள் – சிறப்புரை : 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. --- ௬௮௩
வேல்படை வலிமையுடைய அரசனிடத்துத் தன் மன்னனுக்கு வெற்றியைத்தரும் படைவலிமையை எடுத்துரைக்க வல்ல தூதனின் பண்பாவது கற்றறிந்தார் எல்லாருள்ளும் தான் சிறந்து விளங்குதலாம்.
“கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர்….” ---திருமுருகாற்றுப்படை.

சான்றோர். கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள் ; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.

திங்கள், 16 அக்டோபர், 2017

கார்த்திகைத் திருநாள் திருவிழா

கார்த்திகைத் திருநாள் திருவிழா

உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம்கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம
                                           நக்கீரர், அகநா.141: 5-11
                 கலப்பைகள் மடிந்து கிடந்தன, உழுதலைச் செய்யவில்லை; மழை ஓய்ந்தது; வானில் சிறு முயலாகிய மறுவின் நிறம் விளங்க; மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற நள்ளிரவில், வீதிகளில் திருவிளக்குகள் ஏற்றப்பட்டன; மாலைகள் தொங்கவிடப்பட்டன; முதுமையான ஊரின்கண் ஊர் மக்கள் ஒன்றுகூட; கார்த்திகைத் திருவிழாவை நம்மோடு களித்துக் கொண்டாட நம் தலைவர் விரைந்து வருவாராக. 
        
                         கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றிக் கார்த்திகை விழாவைக் கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதை இலக்கியங்கள் வழி அறியலாம். அகநா. 11 : உரை.
                             அண்மைக்காலம் வரை கார்த்திகை விழா ஊர்ப்புறங்களில் கொண்டாடப்பட்டது. பனம்பூ சேகரித்து உமிக் கரியோடு கலந்து நன்றாகக் காயவைத்து கையளவு துணிப்பை தைத்து அதனுள் அந்தக் கலவையைத் திணித்து ஒரு ஓரத்தில் நெருப்பிட்டு ஒரு கயிற்றில் அந்தத் துணிப்பையைக் கட்டித் தலைக்குமேல் தூக்கிச் சுழற்ற கம்பி மத்தாப்பில் நெருப்புப் பூ உதிர்வதைப் போலப் பூ உதிரும்..
                    கோயில்களில் சொக்கப்பானை கொளுத்தப்படும். வீடுகளில் கார் நெல் வறுத்து உரலில் போட்டு இடித்து அவல் எடுத்து அதனைப் பொரித்து முற்றிய தேங்காய்ப்பல்லுடன் வெல்லப்பாகு இட்டுக் கிளறித் தின்று மகிழ்வோம்…. இன்று எல்லாம் கனவாகிப்போனது… தூய்மையான கார்த்திகைத் திருவிழா …  
                      இன்று தூய்மைக் கேடான தீபாவளி.. மக்களிடையே எத்தனை ஏற்றத் தாழ்வுகள்; எத்தனை மூடநம்பிக்கைகள்; எத்தனை வணிகக் கொள்ளைகள் ---இயற்கையோடியைந்து கொண்டாடிய கார்த்திகைத் திருவிழா ; இன்று இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் திருவிழாவாகிவிட்டதே; இது கலப்பினக் காலக் கேடு. 

திருக்குறள் – சிறப்புரை : 682

திருக்குறள் – சிறப்புரை : 682
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. --- ௬௮௨
அன்புடைமை அறிவுடைமை ஆராய்ந்தறிந்த செய்திகளை மனங்கொள எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆகிய இம்மூன்றும்  தூது உரைப்பானுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.
“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை…” --நான்மணிக்கடிகை.
தந்தையின் இயல்புகளை மகனின் நடத்தை வெளிப்படுத்தும்; மனத்தில் உள்ள எண்ணங்களை முகமே வெளிப்படுத்தும்.



ஞாயிறு, 15 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 681

 69. தூது
திருக்குறள் – சிறப்புரை : 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.--- ௬௮௧
வேந்தர்களுக்கிடையே செய்தி பரிமாறும் மிகப்பெரிய பொறுப்பைச் சுமந்து செல்பவன் ; எந்நிலையிலும் தன்னிலை தாழாமல் கடமையாற்ற வல்லவனாக விளங்க வேண்டியவன் தூதுரைப்பவனே. தூதுவனுக்கு உரிய  தகுதிகளாகத் திருவள்ளுவர் வரையறுத்துக் கூறுவன:-
யாவரிடத்தும் அன்புடையவனாகவும் ; உயர் குடியில் பிறந்தவனாகவும் அரசனால் விரும்பிப் போற்றப்படும் நற்குணங்களைக் கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும்.
“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க….” –நாலடியார்.
தான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே; உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத்தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.

சனி, 14 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 680

திருக்குறள் – சிறப்புரை : 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வார் பெரியார்ப் பணிந்து. --- ௬௮0
தாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னன்) பகைவரால் தம் மக்கள் நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு  அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.
”பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்.” –ஆசாரக்கோவை.

பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 679

திருக்குறள் – சிறப்புரை : 679
நாடார்க்கு நல்ல செயின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.---- ௬௭௯
ஒரு செயலைச் செய்ய விழைவான் தன் நண்பர்க்கு நன்மை செய்தலைவிட . தன்னோடு ஒட்டுறவு இல்லாதாரையும் விரைந்து நட்பாக்கிக்கொள்ள வேண்டும்.
“சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு. –நாலடியார்.

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை- அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக்கொள்ள வேண்டும்.

வியாழன், 12 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 678

திருக்குறள் – சிறப்புரை : 678
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. --- ௬௭௮
பழக்கிய யானையைக்கொண்டு காட்டு யானையைப் பிடிப்பது போல,   மன ஊக்கம் கொண்ட செயல் திறனோடு, ஒரு செயலைச் செய்கின்றபோது அதனோடு தொடர்புடைய இன்னொரு செயலையும் செய்து முடிக்க வேண்டும்.
“…………………………………. வழும்பில் சீர்
நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. ---நாலடியார்.

குற்றமில்லாத சிறப்புடைய நூல்களைக் கற்றாலும் நுட்பமான அறிவு இல்லாதவர், நூற்பொருளை அறியும் ஆற்றல் இல்லாதவரே.

புதன், 11 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 677

திருக்குறள் – சிறப்புரை : 677
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.--- ௬௭௭
 ஒரு செயலைச் செய்ய வேண்டிய வழிமுறையாவது, ஏற்கெனவே அச்செயலைச் செய்தவனுடைய பட்டறிவைக் கேட்டறிந்து, அதன்படி நடந்து கொள்ளவேண்டும்,
”உயர்குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.” –நாலடியார்.

தன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ் பெற மாட்டாதவன், உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 676

திருக்குறள் – சிறப்புரை : 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். --- ௬௭௬
ஒரு செயலைச் செய்ய முயலுங்கால் அதனை முடிக்கும் வழிமுறைகளையும் ஏற்படும் இடையூறுகளையும் மனங்கலங்காது முயன்று முடிக்கும் நிலையில் அதனால் விளையும் பயன்களையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும்.
“ நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
  இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்.” –புறநானூறு.

நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையன் ஆகாமல் விலகி இருப்பாயாக.

திங்கள், 9 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 675

திருக்குறள் – சிறப்புரை : 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். --- ௬௭௫
ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டிய அளவு பொருள், தேவையான கருவி, ஏற்ற இடம்  தகுந்த காலம், செயல் முடித்தற்குரிய மனவலிமை ஆகிய இவ்வைந்தினையும் மயக்கமின்றி எண்ணிச் செய்தல் வேண்டும்.
“ நுண் உணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
  பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் ..” –நாலடியார்.

 வறுமையாவது, நுட்பமான அறிவு இல்லாதிருப்பதே;  மிகவும் வளர்ந்த பெரும் செல்வம் என்பது, நுட்பமான அறிவு உடையவனாதலே. 

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 674

  திருக்குறள் – சிறப்புரை : 674
வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும்.--- ௬௭௪
செய்து முடிக்க வேண்டிய செயல், ஒழிக்க வேண்டிய பகை இவ்விரண்டையும் முழுதும் நிறைவேற்றாமல் மிச்சம் வைப்பது ; தீயை முழுதும் அணைக்காமல் எஞ்சிய சிறு தீயானது வளர்ந்து அழிப்பதைப் போல, வளர்ந்து கெடுக்கும்.
“ நன்றி விளைவும் தீதொடு வரும் ..” –நற்றிணை.

நன்மை கருதிச் செய்யும் செயல், தீமையாய் முடிவதும் உண்டு.

சனி, 7 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 673

திருக்குறள் – சிறப்புரை : 673
“ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். --- ௬௭௩
ஒரு செயலைச் செய்து முடிக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடனே  செய்து முடிப்பது நன்று. அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் ஏற்ற  வாய்ப்பு நோக்கிச் செய்யத் துணிய வேண்டும்.
“ அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
  உறுவது உலகு உவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
 துன்புற்று வாழ்தல் அரிது. –நாலடியார்.

அறிய வேண்டியவற்றை அறிந்து, பொறுமையுடன் இருந்து, அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்ய வேண்டிய செயலை உலகம் உவக்கும்படிசெய்து, பெற்ற பொருளால் மனம் மகிழ்ந்து வாழும் இயல்புடையார்க்கு எப்பொழுதும் துன்பமில்லை.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

எழுத்துடை நடுகல்

எழுத்துடை நடுகல்
விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் …….  
                                                      --- ஓ தலாந்தையார், ஐங். 352: 1-2
விழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல்…
(அக்காலத்துத் தமிழ் எழுத்துகள் பற்றிய வரலாறு  இதனாற் புலப்படும் ; மேலும் காண்க : அகநா. 53 ; புறநா. 264.)
 ……………………………… ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.  
                                            –மதுரை மருதனிளநாகனார், அகநா. 131: 9-11.
 ஆநிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும்  சிறப்பினைக் கொண்ட நடுகல்…
 குயில் எழுத்து
 இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்.
                                      --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 297: 5-10.
 அழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர் ; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப் பார்க்க இயலாதவராய், வழிநடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர். (குயில் எழுத்து – பொறித்த எழுத்து)
 மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
                                       --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 343: 4-8.
 வண்டியினைக்கொண்ட உப்பு வணிகனது, பெயர்ந்து செல்லும் உருளின் பொலிவில்லாத பூண், சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல்லின், இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில் கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுகள் மறைந்த எழுத்துகள், அவ்வழியிலே செல்லும் புதியவர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்.
 “ நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை ‘வீரக்கற்கள்’ என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் ’பெருங்கற்காலம்’  முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. ‘இந்தியாவிலும்’ வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், ’வீரச்சாவு’ அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
  நம் பண்டைய தமிழர்கள் வெட்சி, கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டுவந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர்.
  இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம், குசராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 202 நடுகற்களும் ஆந்திராவில் 126 நடுகற்களும் கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.
 சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப்பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.  நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன, ‘கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே’ என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.”—விக்கிபீடியா.
(In Tamil Nadu ) “The hero stones found were erected in memory of  heroes  who laid their life, defending  their territory or making some form of  supreme  sacrifice for the sake of the community  or the region. Usually these stones, now called by scholars as ‘Virakkal’ or Hero stones, shoe the figure of the hero carved with inscriptions, giving details of the hero, the battle, the king in whose time the battle took place and the person who erected the stone. Either they stand along or in groups and are usually found outside the village limits, nearby a tank or lake.
 Some of the hero stones with inscriptions were exactly in the form of Dolmens with three upright slabs and capping stone. The figure of the hero is generally carved on the back slab facing the entrance as if it is a temple shrine and the figure of the hero, an image of a god. Plain dolmens were also found without any figures or writings by the side of such hero stones, indicating that they were contemporary with the nearby hero stone. Such inscribed hero stones have been found from almost 3rd c.CE to the 16th c.CE attested by inscriptions. Obviously the tradition continued till very late.
 The ancient Sangam literature refers to a large number of hero stones and the circumstances under which those were erected. The Sangam works, mainly the Purananuru anthology, refer to the memorial stones as ‘nadukal’ or simply ‘kal’ in the context.” --- Tamil Nation.
பன்னெடுங்காலத்திற்கு முன்பே சங்கச் சான்றோர்  தமிழர்தம்  வீரமும் பெருமையும் விளங்கும்படியாக நடுகல் வழிபாடு குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் எழுத்து வரலாற்றை அறிய நடுகற்கள் பேருதவி புரிகின்றன.அண்மையில் நிகழ்த்தப்படும் (கீழடி, அழகன் குளம், அரிக்கமேடு) அகழாய்வுகளில் எழுத்துகள் பொறித்த சுடுமண் பானை ஓடுகளைக் கண்டெடுத்துள்ளனர். பானை ஓடுகளிலும் கல்கருவிகளிலும் காணப்படும் எழுத்துகள் யாவும் தொன்மைத் தமிழ் எழுத்துகளே, அவற்றைத்  தமிழி என்று கூறாது பிராமி  என்று கூறுவது ஏனோ..?
”The major problem with this model is the fact that horses played a very important role in all Indo-European cultures, being a people constantly on the move. "There is no escape from the fact that the horse played a central role in the Vedic and Iranian cultures..." (Parpola, 1986) Sidenote: "Vedic" means from the time of the Vedas, the earliest text in India, and the Vedic culture is from around 1500 to 500 BC. However, no depiction of horses on seals nor any remains of horses have been found so far before 2000 BC. They only appear after 2000 BC. Very likely there were no Aryan speakers present before 2000 BC in the Indus Valley.” -- Indus Valley.
மிகத் தொன்மைவாய்ந்த சிந்துசமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள் தமிழர்கள் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரிய நாகரிகத்தைக் கொண்ட தமிழ் மக்கள் பேசிய மொழி, வேதகால ஆரியத்திற்கு முற்பட்டதென்பதை அறிஞர் அசுகோல பர்போலா உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தமிழ் எழுத்துவரலாறு கணிக்க இயலாத கால எல்லையைக் கடந்து செல்கிறது.

Editorial
Hero Stone / Tombstone
 “ The hero stones are so called because of heroism shown by warriors ao the eve of fighting in battlefields. They are killed when the arrows pierce their bodies. References to such hero stones erected in memory of  warriors  are found in a number of poems in Sangam literature  such as Puurananooru, Akananooru and Kuruntogai.
 Members of warrior-clan known as Maravars sometimes  sharpen their arrows by scratching them on the wayside tombstones and hence the names of the warriors inscribed on the stones gets erased. This is what we understand from poem (297)  by MaruthanIlanaganar in Akananooru.

 Erection of hero stones establish the fact of not only a heroic death of the warriors but also the prevalence of literacy in ancient times. These tombstones  of heroes are found from Kashmir to Kanyakumari and even beyond up to Kerala. Dr.Kesavaraj has written in his research that in Karnataka there were 397 stones in TamilNadu 202, in Kerala only one stone. The Dept. of Archaeology Tamil Nadu has said that in Tamil Nadu a large number of of such stones are found in North and South Arcot districts. Many hero stones show the figure of the hero stones along with other details. They all indicate the ancienty of  Tamil culture.” –Editor.