வெள்ளி, 30 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1062


திருக்குறள் -சிறப்புரை :1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.------- ௧0௬௨

இவ்வுலகைப் படைத்தவன், இரந்து வாழவேண்டிய அவல நிலைக்குச் சிலரையும் படைத்திருப்பானாயின் அவனும் அப்பிச்சைக்காரர்களைப் போல நாளும் அலைந்து, திரிந்து அல்லல் பட்டுக் கெடுவானாக.

”ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே
……  ……  ……  ………
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இனநிரை வெளவும்
கானம் திண்ணிய மலை  போன்றிசினே.”  ---நற்றிணை.

வெயிலால் வெப்பமுற்ற பரற்கற்கள் நிறைந்த பள்ளத்தின் ஒரு புறத்தில் குந்தாலியால் கிணறு தோண்டப்பட்டிருக்கும். அங்கு, பசுக்கூட்டங்களைப் பாதுகாக்கும் ஆயர்கள் சென்று, அருகில் பறித்த சிறுகுழியில் ஊறிய நீரை யானைக் கூட்டம் சென்று உண்ணும். இத்தகைய வறட்சி உடைய கொடிய காட்டுப் பகுதி, திண்ணிய மலை போல நிலைத்த அச்சத்தைச் செய்கின்றது. இத்தகைய காட்டுப் பகுதியில் இவ்வுலகைப் படைத்தவனும் சென்று மெலிவானாக.

வியாழன், 29 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1061


திருக்குறள் -சிறப்புரை :1061

107. இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். ---- ௧0௬௧

தம்மிடம் இருப்பதை ஒளிக்காமல் இரந்து வருவர்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் அனையாரிடத்தும் பொருள் வேண்டி இரவாது தம் வறுமையைப் போற்றி நிற்றல் கோடி மடங்கு பெருமை உடையதாகும்.

“கரவாத திண் அன்பின்  கண் அன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை…….” ----நாலடியார்.

தம்மிடம் இருப்பதை மறைக்காத, உறுதியான அன்பிலே கண் போன்றவரிடத்தும் சென்று இரவாது வாழும் வாழ்க்கையே நல்ல வாழ்வாகும்.

புதன், 28 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1060


திருக்குறள் -சிறப்புரை :1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. ---- ௧0௬0

இரந்து வாழ்பவர் சினங்கொள்ளக்கூடாது, வேண்டியது கிடைக்கும்வரை பொறுமை காத்தல் வேண்டும். இரந்து வாழும் இழிநிலைக்குத் தம் வறுமை நிலையே போதிய சான்று என்று உணரவேண்டும்.

“யாங்கு அறிந்தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென் பேணித்
தினை அனைத்தாயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே” –புறநானூறு.

வேந்தன், என்னுடைய எத்தன்மையை அறிந்தான்..? என்னை அழைத்துக் காணாமல் தந்த இப்பொருளுக்கு யான் பொன் பொருளை மட்டுமே கருதும் பரிசிலன் இல்லை. பரிசில் வேண்டுவாரின் கல்வி முதலிய தகுதியின் அளவு அறிந்து விருப்பத்தோடு தினை அளவு கொடுத்தாலும் போதுமெனக் கொள்வேன்.

செவ்வாய், 27 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1059


திருக்குறள் -சிறப்புரை :1059

ஈர்வார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.----- ௧0

  வறுமையால் வாடி,  இரந்து பொருள் கேட்பார் உலகில் இல்லையானால் கொடுப்போர்க்குப் பெருமை எப்படிக் கிடைக்கும்..? இரப்பார்க்குக் கொடுப்போரே பெருமை பெறுவர் என்பதாம்.

” ……………. இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரிலும்
உள்ளி வருநர் நசை இழப்போரே.
அனையையும் அல்லை நீயே…” ---புறநானூறு.

இயற்றப்பட்ட தேரை உடைய அண்ணலே..! தம் இல்லாமையைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பொருளைத் தேடி அடைய முடியாத இரப்போரைவிட, அவரால் பரிசிலுக்காக நினைந்து எய்தப்பெறும் கொடையாளிகள், அவ்விரப்போரால் விரும்பப்படும் புகழை இழந்துவிடுவர். நீ அவ்வாறு இரப்போரால் விரும்பப்படாத தன்மையை அடைபவன் அல்லன்.

திங்கள், 26 நவம்பர், 2018

பிழை திருத்தம்-- குறள்-1057


வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழிநி.” –மலைபடுகடாம்.
பிழை : பழிநி—திருத்தம்: பழுநி. (குறள் : - 1057).

திருக்குறள் -சிறப்புரை :1058


திருக்குறள் -சிறப்புரை :1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.---- ௧0


         இரப்பவர்கள் இல்லாது போனால், ஈரம் செறிந்த இந்நிலவுலகில்வாழும் மக்கள், உயிரற்ற மரப்பாவை போல, ஈரமற்ற நெஞ்சினராய், உணர்ச்சியற்ற உடல் சுமந்து போவதும் வருவதுமாய்த் திரிவர்.

“ எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.” ---இனியவை நாற்பது.

எள் அளவாயினும் பிறர் இரவாது, தானே முன்வந்து ஈதல் எல்லாவகையிலும் மிக இனிது.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1057


திருக்குறள் -சிறப்புரை :1057

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. ------ ௧0
(இகழ்ந்து எள்ளாது)

தம்முன் இரந்து நிற்பாரை இகழாது, எள்ளி நகையாடாது கொடுத்து மகிழ்வாரைக் கண்டால் இரப்பவரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவக்கும்.

“இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழிநி.” –மலைபடுகடாம்.

நன்னனே..! இல்லாமையால் வருந்தும் புலவர்தம் ஏந்தும் கைகள் நிறையும்படியாக உன் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ்செல்வம், கெடுதல் இல்லாது, வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.

சனி, 24 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1056


திருக்குறள் -சிறப்புரை :1056

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.---- ௧0

பிறருக்கு வழங்கும் அளவுக்கு மிகுபொருள் கொண்டோர், தம் பொருளை மறைத்து வைக்கும் குற்றம் இல்லாரைக் கண்டால், இரந்து வாழ்வோரின் வறுமைநோய் எல்லாம் ஒருங்கே அழிந்துபோகும். பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாகும் என்பதாம்.

“ இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்…….” ----புறநானூறு.

தலைவனே…! இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயும் அல்லை ; பொருள்தந்து பாதுகாக்கும் புரப்போர் இரப்போர்க்கு இல்லாமல் போய்விடவில்லை ; இனி இரப்போர் இருத்தலையும் காண்பாயாக ; இனி இரப்போர்க்குக் கொடுப்போர் உண்டாதலையும் காண்பாயாக.

வெள்ளி, 23 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1055


திருக்குறள் -சிறப்புரை :1055

கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. --- ௧0௫௫

கைப்பொருளை மறைத்து வைத்து இல்லையென்று கூறாது இல்லாதார்க்கு வழங்குபவர் உலகில் இருப்பதால்தான் இரந்து  வாழ்வோரும் அவர்களை நாடிச் செல்கின்றனர்.

“மழை அணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றதுமன் எம் கண்ணுளங் கடும்பே.” ---புறநானூறு.

முகில் சூழ்ந்த மலைகளுக்குத் தலைவன் ; நாள்தோறும் பட்டம் முதலாகிய பூண்களை அணிந்த யானைய இரப்போர்க்கு வழங்குபவன் ; சுடர் விடுகின்ற பசும்பொன்னால் செய்த பூணினையும் கடகம் அணிந்த முன்கையினையும் உடையவன் ; கொல்லும் போரைச் செய்யும் தலைவன் ; அத்தகைய ஆதன் ஓரியின் மழைபோலும் வண்கொடையைக் காண்பதற்காக எம்முடைய கூத்தச் சுற்றம் சென்றது.

வியாழன், 22 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1054


திருக்குறள் -சிறப்புரை :1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.---- ௧0

தம்மிடம் இருப்பதைக் கனவிலும் மறைத்தறியாரிடம் சென்று இரத்தலும் பிறருக்குக் கொடுத்து மகிழும் வாய்ப்பினைப் பெற்றதாகவே கருதுவர்.

“இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி …” ----அகநானூறு.

தோழி..! பொருள் வேண்டி வருவாரது ஏந்திய கை நிறைந்திட, வள்ளல்கள் வருத்தம் இல்லாத உள்ளத்துடன் விரைந்து வந்து புதிய பொருள்களைத் தந்து மகிழ்வதற்குரிய அரிய பொருள் ஈட்டிவர விரும்பிச் சென்றாரே தலைவர்.

புதன், 21 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1053


திருக்குறள் -சிறப்புரை :1053

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. --- ௧0
(இரப்பும் ஓர் ஏஎர்)

இருப்பதை மறைத்தல் அறியாத இரக்கம் நிறைந்த நெஞ்சினை  உடையவராகி, ஈதலாகிய கடமை உணர்வுடையார் முன் நின்று, வறுமையுற்றார் இரத்தலும் ஓர் அழகுடையதாம்.

“ எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
 பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே ……..” -----புறநானூறு.

ஏழு வள்ளல்களும் இறந்தபின்பு கண்டார்க்கு இரக்கம் வரப் பாடி வருவாரும் பிறரும் கூடி,  இரந்தோரது துன்பத்தைத் தீர்ப்பவன் ‘யானென்று’ நீ இருத்தலால், விரைந்து இவ்விடத்துப் பரிசுபெற நினைந்து வந்தேன் யான்.


செவ்வாய், 20 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1052


திருக்குறள் -சிறப்புரை :1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். ---- ௧0

இல்லாதார் இயலாதார் ஒருவரிடம் சென்று இரந்து கேட்கும் பொருள் இன்முகத்துடன் எளிதில் கிடைத்துவிடுமானால் இரத்தலும்கூட இன்பம் தருவதாகும்.

“ எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்.” –பதிற்றுப்பத்து.

பரிசில் வேண்டிவரும் எம்மைப் போன்றவர்களுக்கும் பிறர்க்கும் பரிசில்பெற வருபவர்கள் புலமை உடையவர்கள் இல்லையென்றாலும் கொடுத்தலாகிய கடமையை நோக்கி, யாவர்க்கும் கொடை அளிக்கும் ஒருபாற்கோடாத நெஞ்சினை உடையவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.



திங்கள், 19 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1051


திருக்குறள் -சிறப்புரை :1051
106. இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று. ----௧0௧.
இரந்துண்டு வாழ்வோர் செல்வ வளமுடையோரிடம் வேண்டியதைக்  கேட்டுப் பெறவேண்டும். செல்வர்களும் இரப்பவர்க்கு ஒன்று வழங்கமறுத்து மறைத்து வைத்துக் கொள்வார்களானால், அது அச்செல்வர்களுக்குப் பழியாகுமேயன்றி ; இரப்பவர் பழியன்று.
”நிற்பாடிய அலங்கு செந்நாப்
பின்பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம்கோ.” ---புறநானூறு.
வேந்தே.. நின்னைப் (இரும்பொறை) பாடிப் பரவிய சிவந்த நாக்கு, பிறருடைய புகழைப் பாடாதவாறு பெருஞ் செல்வத்தை வழங்கும் எம் அரசனே..!.

புதன், 14 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1050


திருக்குறள் -சிறப்புரை :1050

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. --   ௧00

வாழ்க்கையில் துய்ப்பதற்கு ஒன்றும் இல்லாத வறியவர்கள் ஆசைகளை முற்றாகத் துறந்து துறவறத்தை மேற்கொள்ளாமைக்குக் காரணம் பிறர் வீட்டு உப்புக்கும் கஞ்சிக்கும் தாங்கள் இயமனாக இருக்கவேண்டும் என்று நினப்பதால்தான்.

“அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும்
பத்து எட்டு உடைமை பலர் உள்ளும் பாடு எய்தும்
ஒத்த குடிப் பிறந்தார்க் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை.” ---நாலடியார்.

காவி ஆடையை இடுப்பில் அணிந்து பத்தாயினும் எட்டாயினும் பொருள் உடையவராய் இருந்தால், அவர் மக்களிடையே பெருமை பெறுவர். உலகில் உயர்குடியில் பிறந்தவராய் இருந்தாலும் ஒரு பொருளும் இல்லாதார் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாகவே கருதப்படுவர்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1049


திருக்குறள் -சிறப்புரை :1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.---- ௧0௪௯

நெருப்பு சூழ்ந்திருந்த நிலையிலும் கூட, ஒருவனால் தூங்கவும் முடியும் ;ஆனால் வறுமையின் கொடுமையில் சிக்கித் தவிக்கும்போது எந்த ஒரு நிலையிலும் அவனால் கண்மூடி உறங்குவது என்பது அரிதான செயலேயாகும். 

” நாரும் போழும் செய்து உண்டு ஓராங்குப்
பசி தினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து.” ---புறநானூறு.

உணவு கிடைக்கப் பெறாமையின் மரங்களின் நாரினையும் பனங்குருத்தையும் உணவாகச் சுவைத்து உண்டு, ஒருதன்மைப்பட, பசி தின்னலால் வருத்தமுற்ற கரிந்த பெரிய சுற்றத்தார்க்கு , உண்ணும் உணவில் நாட்டம் இருப்பது அறிந்து, நான்கு திசைகளிலும் தேடி, மேனியில் வியர்வை ஒழுக அலைந்து புலர்ந்து, வயிறு ஒட்டி வாட வந்தெனன்.

திங்கள், 12 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1048


திருக்குறள் -சிறப்புரை :1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.----- ௧0௪௮

நேற்று எம்மைக் கொல்வது போல, வருத்திய வறுமைத் துன்பம்   இன்றும் வந்துசூழ்ந்து வருத்துமோ..? என்று கலங்குவர் வறுமையுற்றோர்.

“தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்…..” ---அகநானூறு.

வறுமையுற்றோர்,  தம்மை விரும்பி வாழ்வோரைப் பாதுகாத்துத் தாம் விரும்பிய இனிய சுற்றத்தோடு இன்பம் மிகும்படி மகிழ்ந்திருத்தல் இயலாது வருந்துவர்.


ஞாயிறு, 11 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1047


திருக்குறள் -சிறப்புரை :1047

குறள்.1046 –நகுணர்ந்து – பிழை ; நன்குணர்ந்து—திருத்தம்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். --- ௧0௪௭

நல்வழியில்(தீய ஒழுக்கத்தால்) பொருந்தாத வறுமை ஒருவனைச் சூழுமாயின் , ஈன்ற தாயும் வெறுப்பினால் அவனை அயாலான் ஒருவன் போலவே பார்ப்பாள்.

“இட்டாற்றுப் பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரை மனையில் கைநீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று. “ ----நாலடியார்.

தாழ்மையான வழியில் விழுந்து வறுமையுற்று ,பொருள் தேடி முட்டுப்பாடன வழியில் முயன்று தோல்வியுற்றுத் தம்மை நாடி வந்து இரந்தவர்க்கு ஒன்றும் கொடுக்க இயலாது உள்ளூரில் வாழ்வதைக் காட்டிலும் அயலூருக்குச் சென்று வீடுகள் நிறைந்த தெருவில் வீடுதோறும் கைநீட்டி இரந்து இழிவான வழியில் வாழ்வதே நன்றாம்.

சனி, 10 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1046


திருக்குறள் -சிறப்புரை :1046

நற்பொருள் நகுணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். ----- ௧0௪௬

நல்ல நூல்கள் பலவற்றைக் கற்று அவற்றின் நுண்பொருளை, வறுமையுற்றோர் எடுத்துச் சொல்லினும் அவை கேட்பாரின்றிப் பயனற்றுப் போகும்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.

“ பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடரகம் சிலம்ப முன்னி
பழனுடைப் பெருமரம் தீர்ந்தென கையற்று
பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
நசைதர வந்து நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லன்
நோய்இலை ஆகுமதி பெரும நம்முள்
குறுநணி காண்குவதாக ………” -----புறநானூறு.

 பல பழங்களையும் கொள்ளுதற்கு விரும்பித் தாம் வாழும் வானிடத்தே உயரப் பறக்கும் புள்ளினம் ; அப்புள்ளினம்பெரிய மலையின் முகையிடங்கள் எதிரொலிக்க முழங்கிச் சென்று, பழுத்த மரங்களை நாடும் போது, அம்மரங்கள் பழுத்து மாறிவிட்டமைக் கண்டு வருந்திப் பழம் பெறாமல் மீளுவதைப் போல, நீ என்னிடத்துக் கொண்ட விருப்பத்தை மனத்திற் கொண்டு உன் புகழைப் பாடும் பரிசிலன் ஒன்றுமில்லாமல் வறியேனாய் மீள்வதா..? நீ ஒரு பரிசிலும் கொடுக்கவில்லையாயினும் அதற்காக நான் வருந்த மாட்டேன். நீ நோய் இன்றி இருப்பாயாக..! உனது மகிழ்ச்சி மிக்க நாளவை நம்மிடத்து இருக்கும் நெருக்கத்தை இடைவெளியின்றி என்றும் காண்பதாக.

வெள்ளி, 9 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1045


திருக்குறள் -சிறப்புரை :1045

நல்குரவு  என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். --- ௧0௪

வறுமை என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்துள் , பசி, பிணி, இழிசொல், பழிச்சொல் போன்ற இன்னபிற துன்பங்களும் வந்துசேரும்.

” இல் உணாத் துறத்தலின் இல் மறைந்து உறையும்
 புல் உளைக் குடுமிப் புதல்வன் பல்மாண்
பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனளாகி……” -----புறநானூறு.

எனது இல்லம் உண்ணப் படுவனவற்றைக் கைவிடுதலால், அவ்வில்லத்தை இகழ்ந்து நினையாது உறைகின்றாள் ; புல்லிய உளை மயிர் போலும் குடுமியையையுடைய இளம் புதல்வன் பலபடியாகப் பால் இல்லாத வறிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி, உள்ளே ஒன்றிமில்லாத வறிய சோற்றடு கலத்தைத் திறந்து பார்த்து, அங்கே உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அதனைப் பார்த்து அவன் அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலாவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது மிகவும் வருந்தினாள் என் மனைவி.

வியாழன், 8 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1044


திருக்குறள் -சிறப்புரை :1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.--- ௧0௪௪

வறுமையானது இன்னார் இனியார் என்று பாராது. உயர்ந்த குடியில் பிறந்தாரிடத்தும்கூட வறுமை சூழ்ந்து, ஊரார் வாயில் இழி சொற்கள் பிறப்பதற்கும் காரணமாகி மிகுந்த துன்பத்தைத் தரும்.

“ செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர்
அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று
சொல்லுதல் உற்று உரைக்க அல்லாதவர்…..” –கலித்தொகை.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்து வறுமையுற்ற போது, தம்முடைய துன்பத்தைத் தீர்ப்பதற்குத் தக்க உறவினரிடத்தே  சென்று, தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை முழுதும் சொல்ல இயலாது தவிப்பர்.

புதன், 7 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1043


திருக்குறள் -சிறப்புரை :1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.---- ௧0௪௩

ஒருவன் பொருள் திரட்டும் பேராசையால் இருப்பதை எல்லாம் இழந்து வறுமையில் உழலும் நிலைமை வந்தால்  தொன்றுதொட்டுவந்த அவனுடைய குடிப்பெருமை,  புகழ் அனைத்தையும்  ஒரு சேர அழித்துவிடும்.

“விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கை[
பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே…” –அகநானூறு.

விரிந்த அலைகளை உடைய மண்திணிந்த இவ்வுலகம் முழுவதும் உருண்டோடிடும் செல்வமானது, யாவர்க்கும் பொதுமையாக இல்லையாதலால், அச்செல்வம் உண்மையாகவே கை கூடியதாயினும் அதன் போக்கு இரவில் தோன்றி மறையும் கனவைப் போன்றதாம்.


செவ்வாய், 6 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1042


திருக்குறள் -சிறப்புரை :1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.--- ௧0௪௨

வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி, ஒருவனுக்கு மறுமைப் புகழையும் இம்மை இன்பங்களையும் இல்லாது ஒழியுமாறு வந்து சேரும்.

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்..” –குறுந்தொகை.

இரவலர்க்குக் கொடுத்து மகிழ்தலால் பெறும் புகழும் ; வாழ்க்கையில் பொருளால் துய்க்கும் இன்பமும் வறுமையுற்றோர்க்கு இல்லை.