சனி, 30 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -7

மெய்ப்பொருள் காண்பது அறிவு -7
பொற்காலம்
இரும்புக் காலத்திற்குமுன் பொற்காலம் ஒன்று இருந்ததோ என ஐயம் எழுகின்றது.—பாவாணர்.
தமிழர் வாழ்வில் பொன் சிறப்பிடம் பெறுகிறது ; பொன் இன்றிச் சடங்குகள் இல்லை. இங்கே பொன் விளைந்ததா..? பொன்பரப்பி, பொன்மலை, பொன்விளைந்த களத்தூர் இப்படிப் பொன் சுமந்த ஊர்கள் பல உள.
தமிழில் பொன் என்பது  செம்பொன், கரும்பொன், வெண்பொன் எனப் பொதுப்பெயராக வழங்கக் காணலாம். இன்று தென் அமெரிக்கா, ஆத்ரேலியா முதலியன பொன் விளையும் இடங்களாக இருக்கின்றன. இவையாவும் கடல் கொள்ளப்பட்ட தமிழ் நிலப் பகுதி என்பார் பாவாணர். குமரி நாட்டிலும் ஏராளமாய்ப் பொன் கிடைத்திருக்க வேண்டும். குமரிக்கண்டம் மூழ்கிய பின்பும் கொங்கு நாட்டில் மிகுதியாய்ப் பொன் கிடைத்தது. அது கொங்குப்பொன், கோலார் குளாலபுரம் கொங்கு நாட்டைச் சேர்ந்ததே. காவிரிப் பொன் மணலைக் கொழித்ததனால் பொன்னி எனப் பெயர் பெற்றது. இங்கு முற்காலத்தில் ஏராளமாய்ப் பொன் கிடைத்தது.-  எனினும் சங்க இலக்கியத்தின்வழி, கடல்வணிகத்தில் வெளிநாட்டினர் குறிப்பாக ரோமானியர் பெருமளவில் பொன் கொடுத்து ’மிளகு’ கொள்முதல் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. மன்னர்கள் பொற்றாமரை, பொற்காசு, அணிகலன்களைப்  பரிசாக அளித்துள்ளனர். 

திருக்குறள் -சிறப்புரை :922


திருக்குறள் -சிறப்புரை :922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சன்றோரான்
எண்ணப் படவேண்டா தார். --- ௯௨௨
கள் உண்ணாதே. நல்லவர்கள் உன்னை  மதிக்கப்படவேண்டாம் என்று எண்ணினால் குடித்து விட்டுப் ( மடிந்து ) போ.
“ கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் – தள்ளியும்
வாயிற் பொய் கூறார் வடுவரு காட்சியார்
சாயில் பரிவது இலர்.” --- நாலடியார்.
குற்றமற்ற அறிவுள்ளவர்கள் திருடார், கள் குடியார், தள்ளத்தக்கவைகளைத் தள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார், வாய்தவறியும் பொய் கூறார், வறுமை வந்துற்றபோதும் வருந்தும் தன்மை இல்லாதவராவர்.

வெள்ளி, 29 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -6

மெய்ப்பொருள் காண்பது அறிவு -6
”உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
 அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை.” –மணிமேகலை.
 பேரறிவு உடையவனும் மெய்ப்பொருள் அனைத்தையும் வழுவின்றி உணர்ந்தவனும் ஆகிய ஒருவன், இந்த உலகத்தினரை உய்யக் கொள்ளுதல் பொருட்டுத் தோன்றி அருள்வான். அந்நாளிலே அவன் உரைக்கும் அறவுரைகளைக் கேட்டோர் அல்லாமல் பிறர் இன்னாதாகிய தம் பிறவியினின்றும் தப்புவோர் அல்லர். 

திருக்குறள் -சிறப்புரை :921


93. கள்ளுண்ணாமை
திருக்குறள் -சிறப்புரை :921
உடகப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்----- ௯௨௧
(கள் காதல்)
கள்(மது) குடித்தலில் அதிக விருப்பம் (வெறி) கொண்டவர்கள் தன்மானத்தை இழந்து நிற்பர் ; எக்காலத்தும் அவர்களை எவரும் மதிக்க மாட்டார்கள்.
“ கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின். –சிலப்பதிகாரம்.
கள் உண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய் உரைத்தலையும் பயனில பேசுவோர் நட்பையும் உறுதியுடன் கைவிடுங்கள்.

வியாழன், 28 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -5

மெய்ப்பொருள் காண்பது அறிவு -5
”நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.” –ஒளவையார்.
”12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பாண்டவர்கள். அவர்களை அறிய வேண்டி துரியோதனன் பல்வேறு நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பி ஆராய்கின்றான். ஒற்றர்கள், எங்கும் பாண்டவர்களைக் காணவில்லை என்று கூறுகின்றனர். உடனே வீடுமர் பாண்டவர்கள் வாழ்கின்ற நாட்டில் மழை தவறாமல் பெய்யும் அதனால் விளைச்சல் மிகுதியாக இருக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர், சென்று தேடிப்பாருங்கள் என்றார். அவ்வாறே தேடினர், ஒற்றன் ஒருவன் ‘விராட நாட்டில் நல்ல மழை பெய்து வளம் கொழிக்கிறது, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்’ என்று கூறினான். பாண்டவர்கள் விராட நாட்டில் இருப்பதை அறிந்து கொள்கிறான் துரியோதனன்.”

திருக்குறள் -சிறப்புரை :920


திருக்குறள் -சிறப்புரை :920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ---- ௯௨0
இருவகைப்பட்ட மனமுடையவராகிய பொதுமகளிரும் கள்குடித்தலும் சூதாடுதலும் ஆகிய இம்மூன்றும் திருமகளால் நீக்கப்பட்டவர்களின் தொடர்பு ஆகும்.
நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து. –நாலடியார்.
 தொன்மைச் சிறப்புடைய நாமகளாகிய கலைமகள் அறிவுடையார் நாவிலே உறைவதால்,  செல்வமகளாகிய திருமகள் வெறுப்புற்று அவர் பக்கம் .சேரமாட்டாள்.

புதன், 27 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -4

மெய்ப்பொருள் காண்பது அறிவு -4
“பொங்கரின் நுழைந்து வாவி
            புகுந்து பங்கயம் துழாவி
பைங்கடி மயிலை முல்லை
        மல்லிகைப் பந்தர் தாவி
கொங்கலர் மணம் கூட்டுண்டு
               குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும்
              அறிவன்போல இயங்கும் அன்றே.”
பரஞ்சோதியார், தென்றலோடு அறிஞரை ஒப்புமைப்படுத்தி… எங்கெங்கே சென்றாலும் அங்கங்கே கலைகளை ஆராய்கின்ற அறிஞரைப்போலத்
தென்றல் சோலைக்குள் புகுந்து ; தாமரைதடாகத்தில் படிந்து ; பூப்பந்தர்தோறும் நுழைந்து ; தேனும் மணமும் நுகர்ந்து ; குளிர்ந்து மெல்லென்று வீசுகிறது.

திருக்குறள் -சிறப்புரை :919


திருக்குறள் -சிறப்புரை :919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.---- ௯௧௯
பொருள் கொடுப்பார் யாவரையும் முயங்கும் ஒழுக்கமற்ற விலைமகளிரின் மெல்லிய தோள்கள் தம் குற்றத்தையும் உணராத அறிவற்ற கீழ்மக்கள் சென்று மூழ்கி அழுந்தும் நரகமாகும்.
“ வண்டு என மொழிப மகன் என்னாரே.” –நற்றிணை.
மலர் விட்டு மலர் தாவும் வண்டுபோல், மகளிரை நாடும் குணமுடையோரை நல்ல ஆண் மகன் என்று யாரும் கூறார்.

செவ்வாய், 26 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -3

மெய்ப்பொருள் காண்பது அறிவு -3
“வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்.” –சிலப்பதிகாரம்.
வாய்மையினின்று வழுவாது உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ? இல்லை என்பதாம்.

திருக்குறள் -சிறப்புரை :918


திருக்குறள் -சிறப்புரை :918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.--- ௯௧௮
உயிரென ஓம்பும் ஒழுக்கத்தை ஆராய்ந்து அறியும் இல்லாதவர்களை உரு, சொல், செயல் ஆகியவற்றால் மாயம் பல செய்து மயக்கும் பொதுமகளிரின் பொய்முயக்கம் அணங்கு தாக்குதல் என்பர்.
அணங்கு தாக்குதல் – காமநெறியால் உயிர் கொல்லும் தெய்வமகள்; காமப் பித்துப் பிடித்து ஆட்டுதல் என்பர்.)
“உள்ளம் ஒருவன் உழையது ஆ ஒள் நுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் –தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பின் அவர்.” –நாலடியார்.
மனம் ஒருவர்மேல் நிற்க, மற்றொருவர் மேல் காமுற்றது போல் நடித்துக் காட்டும் வேசியர் கள்ளக் கருத்தை நன்றாய் அறிந்தபோதும் அறியாத மூடராய் இருப்பவர் யார்  எனில் பாவிகள் என்பதேயாம்.

திங்கள், 25 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -2

மெய்ப்பொருள் காண்பது அறிவு -2
”நிலம்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”----புறநானூறு.
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச்செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக்கூட்டியோர், தம் பெயரை உலகுள்ளவரை நிலைநிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம் பெயரைச் சேர்த்த புகழை அடையார்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு -1


மெய்ப்பொருள் காண்பது அறிவு -1
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே.”—புறநானூறு.
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் கூட்டியோர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டி படைத்தவராவர்,

திருக்குறள் -சிறப்புரை :917


திருக்குறள் -சிறப்புரை :917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்.---- ௯௧௭
நிறைந்த ஒழுக்கம் இல்லாதவர்கள், பொருள் வேட்கையால்  தன் உடலை விலை பொருளாக்கிப் பிறரைச் சேரும் பொதுமகளிரின் தோள் தோய்வர்.
“பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகார்.”---மணிமேகலை.
கற்பொழுக்கம் இல்லாத பெண்டிர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும் உயர்ந்தோர் உலகம் புகமாட்டார்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :916


திருக்குறள் -சிறப்புரை :916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். ---- ௯௧௬
யாவரையும் ஈர்க்கவிரும்பி ஆடல், பாடல், அழகு என்ற மூன்றினாலும் தன் உடலை விலைகூறி விற்கும் பொதுமகளிரின் தோளினை, நல்லொழுக்கத்தைப் பேணும் சிறந்த அறிவுடையோர் விரும்பார்.
“இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு”---பழமொழி.
ஒழுக்கம் இல்லாததைக் காட்டிலும் மிக்கதோர் இழிவும் இல்லை ; ஒழுக்கத்தைவிட மிக்கதோர் உயர்வும் இல்லை.

சனி, 23 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :915


திருக்குறள் -சிறப்புரை :915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். ----- ௯௧௫
உலகியலின் உண்மையறிந்த அறிவிற் சிறந்தவர்கள், பொருள் வேட்கைகொண்ட பொதுமகளிரின் இழிந்த உறவைத் தேடமாட்டார்கள்.
“கற்புடைய பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து.” ---சிறுபஞ்சமூலம்.
கற்புடைய பெண் தன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள் ; அறிவு நூல்களைக் கற்று அவற்றின்வழி அடங்கி நடப்பவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன்.

வெள்ளி, 22 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :914


திருக்குறள் -சிறப்புரை :914
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். ----- ௯௧௪
பொருளைத் தன் வாழ்க்கைப் பொருளாகக்கொண்ட விலைமகளிரின் பொய்முயக்கத்தை, அருளைத் தன் வாழ்க்கைப் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் அறிவுடையார் விரும்பார்.
“ கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை.” –மணிமேகலை.
கள் குடித்தல், பொய்கூறல், தகாத காமம்கொள்ளல், கொலை செய்தல், களவாடல் ஆகிய ஐவகைக் குற்றங்களும் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.


வியாழன், 21 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :913


திருக்குறள் -சிறப்புரை :913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.---- ௯௧௩
பொருள் ஒன்றையே விரும்பும் விலைமகளிர்தம் மனம் ஒப்பாத, பொய்யான காமத்தழுவல், இருட்டறையில் கிடக்கும் பிணத்தைக் காமவெறியில் தழுவியது போன்றதாகும்.
” மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்
விலங்கு அன்ன வெள்ளறிவினார்.” –நாலடியார்.
மலங்கு மீனைப்போல் ஏமாற்றும் செய்கை உடைய வேசை மகளிரின் தோள்களைத் தழுவுவோர், விலங்குபோல் அறிவற்றவராவர்.(மலங்கு – விலாங்கு மீன்)

புதன், 20 ஜூன், 2018


உலக ஓக நாள் -World Yoga Day
தொல்தமிழர்தம் அறிவாற்றலில் விளைந்த அற்புதக்கலை ஓகம். இக்கலை மிகவும் தொன்மையானது. சிவனை முதன்மையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்துகிறது. சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கலை ஆரியர்கள் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.
                       “The History of Yoga may go back anywhere from five to eight thousand years, depending on the perspective of the historians. It  evolved wholly in the land of India and while it is supposed by some scholars  that yogic practices  were originally the domain of the indigenous, non-Aryan ( and pre-vedic) peoples . It was clearly expounded in the great vedic shastras.( Religious texts).”
                       “Pre-vedic findings are taken, by ome commentators, to show that ‘Yoga’ existed in some form well before the establishment of Aryan culture in the north Indian subcontinent.”
                   “ A triangular amulet seal  uncovered at the Mohenjo-daro archeological excavation site depicts a male, seated on a low platform in a cross-legged position, with arms outstretched.”
( Govind Rawat, Yoga:The Health Mantra. …. P. 30)

திருக்குறள் -சிறப்புரை :912


திருக்குறள் -சிறப்புரை :912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். --- ௯௧௨
தமக்குக் கிடைக்கும் பொருளின் அளவறிந்து அதற்கேற்ப இனிய சொற்களைக்கூறி மயக்கும் பண்பற்ற விலைமகளிரின் தரம் அறிந்து அவர்களுடன் உறவு கொள்ளாது விலகிவிட வேண்டும்.
“ புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றையவர்.” –நாலடியார்.
விலைமகளிர் புது வெள்ளம் போலத் தமது அழகைக்காட்டிப் பிறரை மயக்கி, அவர்தம் செல்வத்தைக் கவர்ந்துகொண்டு பிரிந்து சென்றுவிடுவார்கள்.

செவ்வாய், 19 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :911


திருக்குறள் -சிறப்புரை :911
92. வரைவின் மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். --- ௯௧௧
ஒருவன் மீது அன்புகொண்டு ஒழுகாது பொருள் விரும்பிப் பழகும் பொதுமகளிரின் இனிய சொற்கள் துன்பத்தையே தரும்.
“ விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வேறல்ல – விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.” –நாலடியார்.
விளக்கினது ஒளியும் பொதுமகளிரது அன்பும் இரண்டும் வேறுவகைப்பட்டன அல்ல ; விளக்கில்  எண்ணெய் வற்றிப்போனால் ஒளி நீங்கிவிடும் அதுபோல, கொண்டவனின் கைப்பொருள் குறைந்து போகுமானால் அவ்வேசையர் அன்பும் அற்றுப்போகும்.


திங்கள், 18 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :910


திருக்குறள் -சிறப்புரை :910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.--- ௯௧0
சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் உடையார்க்கு, எக்காலத்தும் பெண்ஏவல் வழிநின்று நடக்கவேண்டிய அறியாமை இருப்பதில்லை.
“ இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
 உரை சுடும் ஒண்மை இலாரை…” –நான்மணிக்கடிகை.
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்.

ஞாயிறு, 17 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :909


திருக்குறள் -சிறப்புரை :909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.--- ௯0௯
அறச் செயல்கள் ஆற்றலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டலும் பொதுத் தொண்டாகிய பிற நற்செயல்கள் செய்தலும் பெண் ஏவல் செய்பவர்களிடத்தில் இல்லை.
“ முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
 வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.” ---பட்டினப்பாலை.
நெஞ்சே…! அரிய பெரிய சிறப்பு வாய்ந்த காவிரிப் பூம்பட்டினத்தைப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியைவிட்டுப் பிரிந்து பொருள் தேடச் செல்ல மாட்டேன்……வாழிய என் நெஞ்சே.-தலைவன்.

சனி, 16 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :908


திருக்குறள் -சிறப்புரை :908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.---- ௯0௮
(நன்று ஆற்றார்; நல் நுதலாள்)
மனைவியின் விருப்பப்படியே நடக்கின்றவர்கள் நண்பருக்கு நேர்ந்த குறையை நீக்க இயலாதவர்களாகவும் அறவழியில் நல்லன செய்ய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
“ செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
 உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல்….” –அகநானூறு.
தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஊறு (துன்பம்) நேர்ந்தவிடத்து உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.


வெள்ளி, 15 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :907


திருக்குறள் -சிறப்புரை :907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. ---- ௯0௭
( பெண் ஏவல் )
பெண்டிர் இடும் கட்டளைக்கு இணங்கிச் செயல்படும் (இழிந்த) ஆண்மையைவிட நாணத்தை நற்குணமாகக் கொண்ட பெண்மையே பெருமை உடையது.
“ மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.” ---கலித்தொகை.
மெல்லியல்புகள் மிக்க ஆயமகளே..! தயிர்க் குடத்தின் மத்தைச் சுற்றிய கயிறுபோல், நின் அழகைச் சூழ்ந்து சுற்றுகின்றது என் நெஞ்சு.---தலைவன்.

வியாழன், 14 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :906


திருக்குறள் -சிறப்புரை :906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். ---- ௯0௬
  மனைவியைத் தழுவி இன்புறும் காம விருப்பினால் அவளுக்கு அஞ்சி நடப்பவர்கள், இந்திரர் போன்று குறைவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாராயினும் அவர்கள் பெருமைக்கு உரியவர் அல்லர்.
“முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாக எண்ணி விடும்.” –நாலடியார்.
முந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின், கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.


புதன், 13 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :905


திருக்குறள் -சிறப்புரை :905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். ---- ௯0௫
மனைவிக்கு அஞ்சி அடங்கி நடப்பவன்  எக்காலத்தும்  நல்லவர்களுக்குக்கூட நன்மையானவற்றைச் செய்ய அஞ்சுவான்.
இவன், நல்லவர்கள் போற்ற வாழும் தகுதியற்றவனாவான்.
“ பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ.” –மணிமேகலை.
பொய்யான நெறியில் ஒழுகும் ஒழுக்கத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் துன்பத்தினின்று நீங்கித் தப்பித்தார் என்பதும் உண்டோ..? இல்லையே.

செவ்வாய், 12 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :904


திருக்குறள் -சிறப்புரை :904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.--- ௯0௪
( மறுமை இலாளன் ; வீறு எய்தல்)
மனைவிக்கு அஞ்சி ஒடுங்கி நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவன் செய்யும்  எந்த ஒரு செயலும் வெற்றி பெறாது.
வாழும் போதே பெருமையுடன் வாழாதவன் இறந்தபின் பெருமை பெறுவானோ.. அவனே -- மறுமைப் பயன் இல்லாதவன்.
மனைவிக்கு அஞ்சி நடப்பவன் பிறர் போற்றும்படியான செயல் எதனையும் செய்ய இயலாதவன் ஆம்.
“ நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர்…” அகநானூறு.
நெஞ்சே…! காம இன்ப நுகர்ச்சியைவிட்டு நீங்காத நெஞ்சினால் பொருள் ஈட்டாது சோம்பி இருப்போர், நண்பரும் சுற்றத்தாரும் துன்புறுதலையும் பகைவர் பெருமையுடன் வாழ்தலையும் கண்டபிறகும் அவர்களோடு ஓரிடத்திலே வாழ்தலைப் பொறுத்திருப்பர். –தலைவன்.



திங்கள், 11 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :903


திருக்குறள் -சிறப்புரை :903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.----- ௯0௩
ஆண்மகனுக்குரிய இயல்புக்கு மாறாக மனைவியிடத்து அஞ்சி நடக்கும் தன்மை ஒருவனிடத்தில் இருக்குமானால் அவன் நல்லவர்கள் முன் தோன்றுவதற்கே வெட்கப்படுவான்.
“ மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு.” –நாலடியார்.
விரும்பத்தக்க பண்புகளை உடைய நல்ல மனைவியைப் பெறாதவன் வீடு, கண்கொண்டு பார்க்க முடியாத ஒரு பாழும் காடாகும்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :902


திருக்குறள் -சிறப்புரை :902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். ----- ௯0௨
ஒருவன், தனக்குரிய கடமைகளைப் பேணாது, மனைவியின் பெண்மை இன்பத்தினையே விரும்பியிருப்பவன் நிலைமை,  அவனுக்குத் தலை குனிவை ஏற்படுத்தும் ; பிற ஆடவர்க்கும் வெட்கத்தைத் தரும்..
“பெண்டிரும் உண்டியும் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்.” –சிலப்பதிகாரம்.
இவ்வுலகில் பெண்டிரும் உணவும் என்ற இரண்டு மட்டுமே இன்பம் என்று வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தினையே அடைவார்கள்.


சனி, 9 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :901


91. பெண்வழிச் சேறல்
திருக்குறள் -சிறப்புரை :901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. – ௯0௧
மனைவியிடத்து மிகுந்த காம இச்சைகொண்டு, அவள் விருப்பத்திற்கிணங்க நடக்கின்றவர் வாழ்வில் பெருமை அடைய மாட்டார். கடமையிற் சிறந்தோர் விரும்பாத பொருளும் அதுவே.
“ நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன உரன் அவித்தன்றே.” ---குறுந்தொகை.
தலைவியின் நீரை ஒத்த சாயல், என்னுடைய தீயை ஒத்த மன வலிமையை அவித்து விட்டது. –தலைவன்.

வெள்ளி, 8 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :900


திருக்குறள் -சிறப்புரை :900
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.---- ௯00
மனிதருள் யாவரும் போற்றத்தக்க சிறப்புகள் உடைய சான்றோரின் சீற்றத்திற்கு ஆட்பட்டவர், எவ்வளவு பெரிய படை வலிமை பொருந்தியவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
“மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.”—புறநானூறு.
 தலைவனே…! மக்களைக் காக்கும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.


வியாழன், 7 ஜூன், 2018


திருக்குறள் -சிறப்புரை :899


திருக்குறள் -சிறப்புரை :899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.---- ௮௯௯
போற்றிப் புகழத்தக்க அறிவுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால் நாட்டை ஆளும் அரசனாயினும் அப்பொழுதே அவன் மணிமுடி இழந்து ;அரசையும் இழந்து அழிவான்.
“ பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடு இன்று பெருகிய திருவின்
பாடு இல் மன்னரைப் பாடன்மார் எமரே.” –புறநானூறு.
பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பார்களாக.

புதன், 6 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :898


திருக்குறள் -சிறப்புரை :898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. ------ ௮௯௮
நல்லொழுக்கத்தால் மலைபோல் உயர்ந்த சான்றோர்கள், தம்மை இகழ்வாரை அழிக்க நினைத்துவிட்டால் . உலகில் வளம்பல பெற்று, நிலைத்து நிற்பாராயினும் அவர்கள் கூடக் கெட்டு  அழிந்துபடுவார்கள்.
“கல்வியான் ஆய கழி நுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீய ஆம்…” –பழமொழி.
கற்றறிந்த சான்றோர், கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம்.

செவ்வாய், 5 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :897


திருக்குறள் -சிறப்புரை :897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.---- ௮௯௭
அறிவிற்சிறந்த நல்லொழுக்கமுடைய சான்றோர்,      தீயோரைச் சினந்து நோக்கின் ,  எல்லாவகையானும் சிறப்புடைய வாழ்க்கையும் அளவற்ற செல்வமும்    அவர் பெற்றிருந்தாலும் அவற்றால் யாதொரு பயனும் இல்லையாம்.
“ ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல்லறிவினார்…” ---நாலடியார்.
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணே கழிப்பர்.

திங்கள், 4 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :896


திருக்குறள் -சிறப்புரை :896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். ---- ௮௯௬
தீயால் சுடப்படினும் ஒருவேளை உயிர் பிழைத்தல் கூடும் ஆனால் நல்லொழுக்கமுள்ள பெரியோர்களுக்குத் தீமை செய்பவர்கள் ஒருகாலும் உயிர் பிழைத்தல் முடியாததாகும்.
” இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார்…” – திணைமாலை நூற்றைம்பது.
ஒருவன், இப்பிறப்பின்கண் செய்த தீவினை இப்பிறப்பிலேயே அவனை அடைந்து வினைப்பயன் கொடுக்கும் ; இதனை நன்கு ஆராயாத அறிவிலிகளே மறுபிறப்பில்தான் அத்தீவினைப் பயன் கொடுக்கும் என்று கூறுவார்கள்.


ஞாயிறு, 3 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :895


திருக்குறள் -சிறப்புரை :895
யாண்டுச்சென்று  யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். ---- ௮௯௫
(உளர் ஆகார் ; வெந் துப்பின் )
மிக்க வலிமையுடைய அரசனின் சினத்திற்கு ஆட்பட்டவர்கள் எங்கு சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிப் பிழைக்க மாட்டார்கள்.
“ துஞ்சு புலி இடறிய சிதடன் போல
 உய்ந்தனன் பெயர்தலோ அரிதே…” --- புறநானூறு.
சோழன் நலங்கிள்ளியை எதிர்ப்போர், உறங்கும் புலியைக் காலால் இடறிய பார்வையற்றவன் போல, உயிர் பிழைத்தல் அரிது.

சனி, 2 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :894


திருக்குறள் -சிறப்புரை :894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். ---- ௮௯௪
ஆற்றல் இல்லாதார் சான்றோரை இழித்தும் பழித்தும் துன்புறுத்துவது,  இறுதிக்காலத்தில் தானேவரும் இயமனை முன்னதாகவே கை தட்டி அழைப்பது போன்றதாகும்.
“ அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்
  பெருமை உடையார் செறின்.” ----நாலடியார்.
பெருமை உடைய சான்றோர் சினந்தால், பிழை செய்தவர் புகுதற்கு அரிய கோட்டைக்குள் புகுந்தாலும் தப்பிப் பிழைத்தல் இயலாது.