ஞாயிறு, 31 மே, 2015

பழமொழி நானூறு – பொன்மொழிகள்

பழமொழி நானூறு – பொன்மொழிகள்
 முன்றுறை அரையனார் - - PAZAMOZINAANURU
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவேயாம் ...
                                                                                             4 : 1 – 3
ஆன்ற கல்வி அறிவுடையார் தம் சொல் செல்லாத நாடு நான்கு திசைகளிலும் இல்லை. அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; தம்முடைய நாடுகளேயாம்.
புலமிக்கவரைப் புலமை தெரிதல்
புலமிக்கவர்க்கே புலனாம்
                                                                                                            7 : 1, 2
அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்தறிதல் அறிவுமிக்கவர்க்கே உளதாம்.

கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீயவாம் ...
                                                                                                  14 : 1, 2
கல்வியறிவு மிக்கோர் கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம்.

இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு
                                                                                                      15 : 3, 4
இழுக்கத்தைவிட மிக்கதோர் இழிவும் இல்லை ; ஒழுக்கத்தைவிட மிக்கதோர் உயர்வும் இல்லை.

அறிவினால் மாட்சி ஒன்றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது  எவனாம்
                                                                                                               26 : 1, 2
அறிவினால் பெருமை  பெறாத ஒருவன்  பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.
                                                                                                   
எள்ளற்க யார் வாயின் நல்லுரையை ...
                                                                                                  35 : 3
கீழானவர் சொன்னாலும் நல்லுரையாயின் அதனை இகழாதே.

நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு
                                                                                                                    49 : 1, 2
நற்குணமும் நல்லறிவும் இல்லார் தம்மை வருத்தினாராயின்  அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர்க்குக் கோட்பாடன்று.

ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலை என்ப ...
                                                                                                             52 : 1, 2
ஆறாத கோபத்தை உடையவன் அறிவுகெட்டவன் ஆவான் , அவனோடு சேராது விலகி இருத்தல் நல்லது என்று நல்லார் சொல்வர்.

கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழ் ...
                                                                                                                 59 : 1, 2
 தமக்குத் தீமை செய்தாரையும்  பொறுத்து  அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாம்.

மடங்கிப் பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கிப் பிறர் உடைமை மேவார் ...
                                                                                                       78 : 1, 2
சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி  பசியால் வாடினும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.

ஒன்றாய் விடினும் உயர்ந்தார் படும் குற்றம்
குன்றின் மேல் இட்ட விளக்கு
                                        முன்றுறை அரையனார், பழ. 80 : 3, 4
உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியினும் அது குன்றின் மேல் இட்ட விளக்குப் போல் பல்லோர் பார்வையில் படும்.


இனநலம் நன்குடையவாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்
                                                                                                           90 : 3, 4
 கீழ் மக்கள், இனத்தின் நன்மை நன்கு உடையவராயினும்  மனத்தால் நல்லராக மாட்டார்.
 
கரப்புடை உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடைப்பட்ட பரல்
                                                                                                       120 : 3, 4
பிறரை வருத்தும் வஞ்சக மனம்கொண்டோர் செருப்பில் அகப்பட்ட  பருக்கைக் கல் ஒப்பர்.                                                                                                       

தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா
யார் நட்பே ஆயினும் நட்புக்கொளல் வேண்டும்
                                                                                                            128 : 1, 2
தாம் பிறரோடு நட்புக் கொள்வதற்கு ஒருவர் தக்கவரா என்று ஆராயவேண்டுவதில்லை ; எவராயினும் அவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

ஒருவர் பொறை இருவர் நட்பு
                                                                                                               132 : 4
ஒருவர்  பொறுமை இருவர்க்கும் நட்பாம்

கெட்டார்க்கு நட்டாரோ இல்
                                                                                                            134 : 4
வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.

கணையிலும் கூரியவாம் கண்
                                                                                                             143 : 4
மனத்துள் மறைத்தவற்றைக் கண்கள் அம்பினும் கூர்மையாய் உட்புகுந்து காணவல்லனவாம்.

மகன் அறிவு தந்தை அறிவு
                                                                                                          145 : 4
 மகன் அறிவு அவன் தந்தை அறிவு போன்றிருக்கும்.

முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினர் என்பது இனத்தால் அறிக
                                                                                                             148 : 1, 2
முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை அவர் கூடிய இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.

கற்றது ஒன்று இன்றி விடினும் கருமத்தை
அற்றி முடிப்பான் அறிவுடையான் ...
                                                                                                        150 : 1, 2
சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல்திறனில் சிறந்து விளங்குவான் அறிவுடையான்.

எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர்
தம் கண் அழிவு தாம் செய்யற்க ...
                                                                                                              156 : 1, 2
என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; எனக்கென்று உறவினர்களும் இல்லை; என்று ஒருவர் மனம் தளர்ந்து  தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும் செயலைச் செய்யாதிருக்க

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்த கண்ணே ஒழியுமோ அல்லல்
                                                                                                           160  : 1, 2
முதுலகத்தையும் முன்னே படைத்தவன் நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது முயற்சி இன்றி இருந்தால் அல்லல் நீங்குமோ ?

ஓடுக ஊர் ஓடும் ஆறு
                                                                                                           195  : 4
  ஊரோடு ஒத்து வாழ்.

அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை
                                                                                                     199 : 1, 2
அருளுடைய நல்லார் முதல்  அருள் அல்லாதார் வரை பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.

வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும்  ...
                                                                                                                 201 : 1, 2
வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே சேர்த்துவந்தால் செல்வம் பெரிதாய் மிகும்.

அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ ...
                                                                                                             213 : 1, 2
அடாதுசெய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும்  அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ ? விரும்பமாட்டார்.

அறிவினை ஊழே அடும்
                                                                                                                  228 : 4
நல்லறிவினை முன்செய்த வினயே  கெடுக்கும்

நனி அஞ்சத்தக்க அவை வந்தால் தம்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார் ...
                                                                                                           240 : 1, 2
செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார்  அஞ்சத்தக்க வினைகள்  வந்தாலும் அஞ்சார்.

ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்  குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்து விடல்
                                                                                                      255 : 3, 4
ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல் குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவை காட்டும் ...
                                                                                                                    258 : 1, 2
பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.

சீர்த்தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
நேர்த்து உரைத்து எள்ளார் நிலைநோக்கி ...
                                                                                                                 277 : 1, 2
சீர் மிகுந்த அரசர் தம் சீர்மைகள் எல்லாம் கெட்டவிடத்தும்  அவரை இகழ்ந்துரையார்.

ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க
                                                                                                                291 : 1
வலிமையால் தருக்கிச் சான்றோரைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் இருப்பாயாக..

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகாது உயிர் வாழ்க்கை ...
                                                                                                      327 : 1, 2
பெண்மை நாணம் என்னும் குணமின்றிச் சிறவாது ; உயிர் வாழ்க்கை சுவைமிக்க உணவின்றி அமையாது.

மிக்க சிறப்பினர் ஆயினும் தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு
                                                                                                         332 : 3, 4
தம் புதல்வர்கள் எல்லாரும் சிறந்தவர் என்றாலும் அவர்களிடத்துக் காட்டும் தாயின் அன்பில் வேறுபாடு உளதாம்.

மையார் இருங்கூந்தல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை
                                                                                                     351 : 2 – 4
கரிய அடர்ந்த கூந்தலையும் பொன் வளையலையும் உடையாய் ! மழை, பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும் அதுபோல  எப்பொழுதும்  எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உறவினரே தமக்குச் செய்ய வல்லார்.

தோற்றம் அரிதாய மக்கள் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க ...
                                                                                                  365 : 1, 2
அரிதாகிய மக்கள் பிறப்பைப் பெற்றதனால் இயன்றவரை அறம் செய்க.

ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை ...
                                                                                                       . 382 : 1, 2
தமது புகழ் உலகத்தில் நிலைத்திருக்கும்படி தம்மிடத்து உள்ள பொருள்களைஎல்லாம் இரந்து வந்தவர்க்கு இல்லையென்று கூறாமல் வழங்குவதே வள்ளன்மையாகும்.

                                                               முற்றும்

நாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -3

நாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -3


எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா
தென்னாட்டவரும் சுவர்கம் புகுதலால்
தன் அற்றான் ஆகும் மறுமை வடதிசையும்
கொன் ஆளர்  சாலப் பலர்
                                                                சமண முனிவர்கள், நாலடி. 243
எந்த நிலத்திலே எந்த விதையைப் போட்டாலும் போட்ட விதை தான் முளைக்கும் காஞ்சிரத்தின் விதை தென்னங் கன்றாக முளைக்காது. தென்னாட்டில் உள்ளவர்களும்  தமது நற்செயல்களால் சுவர்க்கம் அடைகின்றனர்.ஒவ்வொருவருக்கும் தமது செய்கையினாலே மறுமைப் பயன் உண்டாகும். வட திசையிலும் வீணர்கள் மிகப் பலர் உள்ளனர்.

 மனத்து அனையர் மக்கள் என்பார்
                                                                                                  245: 4
 மக்கள் தங்கள் மனத்தின் இயல்புக்கேற்பவே இருப்பர்.

உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரப் புணருமாம் இன்பம்
                                                                                                           247: 1, 2
நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்துகொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்

கருமமும்  உள்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒரு நிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப
பட்டினம் பெற்ற கலம்         
                                                                                                250
தொழில் செய்து ,பொருள் சேர்த்து, அதனால் இன்பம் துய்த்து, கல்வி அறிவு ஒழுக்கத்தால் சிறந்தவர்களுக்குத் தருமம் செய்து, ஒரே நிலையில் உறுதியாக நின்று இம்மூன்று செயல்களையும்இடைவிடாமல் செய்பவர் துறைமுகத்தை அடைந்த கப்பலைப் போலப் பிறவிப் பயனைப் பெற்றவராவார்.

பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்து அற்றால்
நன்று அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்
                                                                                                     257: 1, 2
நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது பன்றிக்குக் கூழ்  ஊற்றும் தொட்டியில்  மாம்பழச்சாற்றை ஊற்றியது போல் ஆகும்.
                                                                                            
செல்வம் பெரிதுடையர் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்
                                                       சமண முனிவர்கள், நாலடி. 262: 3, 4
கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராயிருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்பு கொள்ளமாட்டார்கள்.

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி அனையார் உணர்வுடையார் ...
                                                                                    270: 1, 2
பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.

எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர் ...
                                                                                 272: 1, 2
எவ்வளவு சிறிதாயினும் தம்மால் முடிந்த அளவு  அறம் செய்தவர்கள் உயர்வடைவார்கள்.

மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை
                                                                                     275: 3, 4
மறுமை இன்பம் பற்றி அறியாத கீழ் மக்களின் செல்வத்தைக் காட்டிலும் சான்றோர்களின் வறுமை உயர்ந்தது.

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்
                                                                                . 277: 1
வறியோர்க்கு ஒன்றும் ஈயாத செல்வரைவிட வறியவர்களே துன்பமின்றி வாழ்கின்றவர்.

ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை                                             
                                                                                                    281: 3, 4
அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்தபோதிலும் ஒரு பொருளும் இல்லாதவர்  செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவர்.

இலாஅஅர்க்கு இல்லைத் தமர்
                                                                                      283: 4
பொருள் இல்லாதவர்க்கு உறவினர்களும் இல்லை.

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார் ...
                                                                                      295: 1, 2
மானமுள்ளவர்கள் செத்துப்போவதாயிருந்தாலும் மானம் கெடவரும் பழி, ,பாவச் செயல்களைச் செய்யமாட்டார்கள்.

மெல்லியர் ஆகித்தம் மேலாயர் செய்தது
சொல்லாதிருப்பது நாண்
                                                                                            299: 3, 4
வறுமையுற்று வாழ்ந்த காலத்துத் தமக்கு உதவி செய்தாரைப்பற்றிப் பிறருக்குச் சொல்லாமல் மறைப்பது நாணத்தகும் செயலாகும்.

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்
                                                                                        . 300: 3, 4
உள்ளத்தில் உறுதி படைத்தவர்கள்  வானுலகம் கிடைப்பதாயினும் மானம் கெடவரும் இழிவான செயல்களைச் செய்ய விரும்ப மாட்டார்கள்.

செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே
பையத்தான் செல்லும் நெறி
                                                                                                     309: 3, 4
ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ என்று இரந்து கேட்கின்ற சொல்லைக் காட்டிலும்  வறுமையுடன் வாழ்வது அவ்வளவு துன்பம் உடையதாகுமோ? ஆகாது என்பதாம்.

கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன்
சொல் ஞானம் சோர விடல்
                                                                                                   311: 3, 4
அற்ப அறிவோடு இருள்நிறைந்த மனத்தினராய் வாழும் அறிவாளர் முன்னே நல்லது சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக .

போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேற்
                                                                                                        . 318 3, 4
புத்தங்களைப் பாதுகாத்து வைக்கும் புலவர் வேறு; அவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைத்துக்கொள்ளும் புலவர் வேறு.

நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார்
புல் அறிவு தாம் அறிவது இல்
                                                                                                320 3, 4
சிறந்த அறிவுள்ளவர்கள், பெரியோர்கள் சொல்லிய நூலின் பொருள்களைத் தெளிவாக அறியாதவர்களின் கீழ்த்தரமான அறிவைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
                                                                                                          322: 1, 2
குற்றமற்றவர்கள்  அறநெறியைப்பற்றி உரைக்கும் பொழுது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல் அறிவினார்
                                                                               327: 3, 4
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார்கள்.
      
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல கனைத்து
                                                                                            335: 3, 4
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு  அரிப்பு எடுத்துவிடும்.

கற்றனவும் கண் அகன்று சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் ...
                                                                                    340: 1, 2
கற்ற கல்வி பற்றியும் சிறந்த ஒழுக்கம் பற்றியும் குடிப் பிறப்பின் பெருமை பற்றியும்  மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.

முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாக எண்ணிவிடும்
                                                                                             346: 3, 4
முந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின் கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.                     

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்
                                                                                              350: 3, 4
எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும்  செய்யும் தொழில்களைக் கொண்டு  அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றை யவர்
                                                                                                      354: 3, 4
விலை மாதர்கள் புது வெள்ளம் போலத் தமது பெண்ணழகைக் காட்டிப் பிறரை மயக்கி அவர்தம் செல்வத்தைக் கவர்ந்துகொண்டு பிரிந்து சென்றுவிடுவார்கள்.

செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை
வைதை உள்ளிவிடும்
                                                                                                   356: 3, 4
சான்றோர்கள் பிறர் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை வைததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
                                                                                              
ஏட்டைப் பருவத்தும் இல்பிறந்தார் செய்வன
மோட்டு இடத்தும் செய்யார் முழுமக்கள்
                                                                                               358: 1, 2
நல்ல குடியில் பிறந்தவர்கள் வறுமையுற்ற காலத்திலும் நல்ல செயல்களையே செய்வார்கள் ; மூடர்களாகிய கயவர்கள் உயர்ந்த செல்வ நிலையில் இருக்கும் காலத்திலும் நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு
                                                                                                    361: 3, 4
விரும்பத்தக்க பண்புகளை உடைய நல்ல மனைவியைப் பெற்றில்லாதவனுடைய வீடு கண்கொண்டு பார்க்க முடியாத ஒரு பாழும் காடாகும்.

கல்லாக் கழிப்பர் தலையாயார்
                                                                                                       366: 1
கல்வி கற்பதிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்  உயர்ந்தவர்கள்.

மகன் அறிவு தந்தை அறிவு
                                                                                                  . 367: 4
மகன் பெற்றிருக்கும் அறிவு  அவனுடைய தந்தைக்குள்ள அறிவாகும்

கடைக்கால் தலைக்கண்ணது ஆகிக் குடைக்கால் போல்
கீழ் மேலாய் நிற்கும் உலகு
                                                                                               368: 3, 4
விரித்துப்பிடித்திருக்கும் குடையின் காம்பைப் போல மேலோர்கள் கீழோர்   ஆவதும் கீழோர்கள் மேலோர் ஆவதும் இவ்வுலக இயற்கை.

மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார்
விலங்கு அன்ன வெள் அறிவினர்
                                                                                              375: 3, 4
மலங்கு மீனைப் போல் ஏமாற்றும் செய்கை உடைய வேசை மகளிரின் தோள்களைத் தழுவுவோர் விலங்கு போல் அறிவற்றவராவர்.

பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள் நன்மைத் துணை
                                                                                         . 381: 3, 4
.
இவளைக் காதலியாகப் பெற வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னே சுற்றுகின்றவர்கள் இல்லாத முறையிலே தன்னைக் காத்துக்கொள்கின்ற  ஒருத்தியே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள்.

பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அந்நிலையே
கற்றான் அஃது ஊரும் ஆறு
                                                                                         398: 3, 4
ஒருவன் ஒரு குதிரையைப் பெற்றானாயின் அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் வழியையும் கற்றுக் கொண்டவனாவான்.



                    THE END