வியாழன், 7 மே, 2015

தமிழர் திருமணம் – பகுதி -1

தமிழர் திருமணம் – பகுதி -1
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
வாள்நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே
                                          பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 89 : 18 – 20
வாழ்நாளை அறிந்து கொள்ளுதற்குக் காரண்மான, விளங்குகின்ற ஒளியை நோக்குதலையுடைய அருந்ததியோடு ஒத்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய நின் தேவியோடு அழகு பொருந்தப் பொலிவாயாக
– மணநாள்
குன்றவேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
                    கோடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்,  அகநா.. 232 : 6, 7
குன்றங்களை வேலியாக உடைய சிறிய ஊரிடத்தே, மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பதுபோல் பூத்து நின்றன.

232 – வேங்கை பூத்தல் – திருமண நாள், வெறியாடுமிடத்தில் குரவை ஆடல்
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்  -நற்சேந்தனார்,அகம். 232 6-10
மன்றத்தில் வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பது போல் பொன்போல் பூத்தன முதிய மகளிரொடு  குறவர்கள் குரவைக் கூத்து ஆடுவர்.
233  - கூந்தல் ஐம்பகுப்பு / திவசம், உதியன் பெருஞ் சோறு, புறம் 2 , சிலம்பு வாழ்த்துக் காதை ஊசல் வரி 6-8

பூப்பு
299 – பூப்பால் மாத விலக்குண்ட மகளிர்கலம் தொடார்  - தீட்டு
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம்  தொடா மகளிரின் .....பொன்முடியார்,புறம்.299: 6,7
பூப்புக் காலம் கூட்டத்துக்கு ஆகாதென்பது பற்றி பூபுற்ற மகளிர் மனைகளில் கலம் தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத் தோன்றக்கண்ட மகளிர் அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கு அஞ்சி நீங்குவது போல் .. ஒளவை உரை.
புறநா.299.

– புதுமணப்பெண்
துவரப் புலர்ந்து தூமலர் கஞலி
தரம் நாறும் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும் ......
                                  நக்கீரர், அகநா.141 : 12-18
 புலர்ந்து-நறுமண மலர் – மணங்கமழும் கூந்தல்-திருமண வீட்டில் – பலகொண்டைகளை உடைய அடுப்பில் – பாலை உலையாக் – இளம்பெண்களுடன் கூடி-நெற்கதிர் முறித்து -  கரிய உலக்கை – பசிய அவலை இடிப்பாள்- மேலும் காண்க: அகம். 86, 136

பெண் அழகு
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு
                               சோழன் நல்லுருத்திரன், கலித். 108: 2 – 4
அகன்ற- அல்குல் தோள், கண் என மூன்றிடமும் பெருத்து,
நெற்றி, அடி, இடை என மூன்றிடமும் சிறுத்து மன்மதனும் நமக்குத் தொழில் இல்லை எனக் கவலையால்தன் படைக் கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு..ஆயமகள்.

திருமணம்- மனமகன் கரிய தாடி
உடன்போக்கு வேற்று மணமகன் திருமண நாளன்று தலைவனுடன் உடன்போக்கு.
நனைவிளை நறவின் தேறல் மாந்தி
புனைவினை நலில் தருமணல் குவைஇ
பொம்மல் ஓதி எம்மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்
மதியுடம் பட்டமை அணற் காளைகயமனார், அகம் 221 :1-6
அரும்புகளினின்று விளைந்த கள் உண்டுஅலங்கரித்த நல்ல வீடுபுதிய மணல் பரப்பிமகள் திருமணம்தார் தந்தையர் விழா ஏற்பாடு.
கையில் வெண்ணிற வேல் கரிய தாடி தலைவனுடன் போக தோழி ஏற்பாடு.
பருவமுற்றனள் காதல் திருமணம்
கூழையும் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்டுணை சான்றனள் இவளென,,,,,,,,,  அகநா. 315 :1- 3
தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் எனும் இயல்பினை அமைந்தனள்.( இவளைக் காக்கத் தவறி விட்டேனே – மகட்போக்கிய தாய்.)
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக் கொல்கிப்
புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்
அறுநீற் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகி.... 8 – 14
                                             குடவாயிற் கீரத்தனார், அகநா.315
தனது அரிய காவல் பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பும் செய்யப் பெறாளாய், நெடுந்தூரம் சென்று, நீரற்ற சுனைக்கண் நீர் பெறாது தளர்ந்து, புறா துளைத்துண்டமையின் மேல்காற்று உதிர்த்திட்ட  குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள், நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளையொப்ப வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில், கூரிய வேலினையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று...
மேலும் காண்க : சிலம்புகழி நோன்பு என்பது கலியாணத்திற்கு முன்பு செய்யப்படுவதொரு சடங்கு. – நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின், எவனோ- ஐங்குறு. 399. – சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ , அறியாத் தேஎத்தல் ஆகுதல் கொடிதே – அகநா. 385.  – சிலம்பு கழீஇ செல்வம், பிறருணக் கழிந்த வென்னாயிழை யடியே – நற். 279.


தாலி
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
                உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127 : 5, 6
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நாணை அணிந்த மகளிருடன் நின் (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்ட்து என்று சொல்லுவர்.


ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
                                ஒளவையார், புறநா. 367 : 4, 5
 பொருளை யாசித்து நின்ற பார்ப்பார்க்கு, குளிர்ந்த கை நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் தாரை நீர் வார்த்துக் கொடுத்தும்

திருமணச் சடங்கு – பன்னீர் தெளித்தலோ ?
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய் ...
 மாங்குடி கிழார், புறநா. 372 : 10 – 12
திருமணவிழாவில் நிகழ்வது போல் விருந்தினர் எல்லோருக்கும், வழிபடுங்கலத்துப் புதிது பெய்த புனித நீரை, கலத்தின் வெவ்விய வாயின் வழியாகப் பெற்று புதுநீரைத் தெளித்து, 


விருந்து
ஊனும் ஊணும் மினையின் இனிது என
 பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக
                                                நன்னாகனார், புறநா. 381 : 1- 4
இறைச்சியையும் சோற்றையும் உண்டு வெறுத்தால், பாலிற் கலந்து செய்தனவும் வெல்லப்பாகிற் செய்தனவும் ஆகிய பண்ணியங்களை, இவை மிக இனிய என்னுமாறு அளவாக ந்ன்கு கலந்து மென்மையாகப் பருகி விருந்தினர்களாகத் தங்கி, பசியைப் போக்கி இனிது இருந்தோமாக.
-மக்கட்பேறு
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை ...                    
                                        அரிசில் கிழார், பதிற்றுப். 74: 17 – 21
நின் மனைவியின் கருவில் பத்துத் திங்களும் நிரம்பிப் பேரறிவை விரும்பி அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுவுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் ஆகிய , குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக் கற்ற வேறு ஒருவர்க்கு இல்லாத சிறப்பு அமையப்பெற்ற புதல்வனைப் பெற்றனை.

திருமணம் – களவு
தன் ஓரன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓரன்ன தாயரும் காண
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர
நல்மாண் விழவில் தகரம் மண்ணி
யாம்பல புணர்ப்பச் செல்லாள் .....
                          குடவாயிற் கீரத்தனார், அகநா. 385: 1-7
மயில் போலும் சாயலையுடைய என் மகள், தன்னைப் போன்ற தோழியர் கூட்டமும் என்னைப் போன்ற செவிலித் தாயரும் எம் கண் குளிர்ப்பக்கண்டு மகிழுமாறு,  சோழனின் வளஞ் சான்ற உறையூரைப் போலத்  தன் தந்தையின் பெரிய இல்லத்தில் சான்றோர் மணம் செய்விக்க நிகழும் மண விழாவில், அவளுக்கு மயிர்ச் சாந்து பூசி மங்கல நீராட்டிப் பல சிறப்புக்களையும் செய்விக்கத் தன் காதலனைப் பலர் அறிய  மணம் செய்து கொண்டு செல்லாமல் ... முன்பின் அறியாத நாடு பல கடந்து  சிலம்பு கழித்து அத்தலைவனை மணம் செய்து கொண்டது கொடுமையிலும் கொடுமை  ( அகல் அமை அல்குல் பற்றி – அகற்சியமைந்த அல்குலை அணைத்தும்............. உடன்போக்கு மேற்கொண்டாளே.




    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக