ஞாயிறு, 17 மே, 2015

சிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 3

From – kalappal.blogspot.com
   சிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 3

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ...
                                                                         சிலப். 20: 80
கணவனை இழந்தோர்க்கு ஈடாகக் காட்டுதற்கு யாதும் இல்லை.

முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்
                                                                                        சிலப்.21: 3, 4
முற்பகல் பிறனுக்குக் கேடு செய்தான் பிற்பகல் தானே கேடுறுவான்.
                                                                                                   
உம்மை வினைவந்து உருத்த காலைச்
செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது
                                                                               சிலப்.23: 171, 172
முன்செய்த வினை அதன் பயனை விளைவிக்க வந்துசேர்ந்த பொழுது பண்பு இல்லாதார்க்குச் செய்த தவமும் உதவாது.
                                                                                                
துறைமிசை நினது இரு  திருவடி தொடுநர்
பெறுக நன்மணம் விடு பிழை மணம் எனவே
                                                                                     சிலப். 24: 17, 18
நீர்த் துறையின் கண்ணே நின்று நினது இரு திருவடிகளையும் பற்றுக்கோடாகக் கொள்பவர் நன்மணம்பெறுக; பிழை மணம் அவரை விட்டு விலகுக என்று அருள்வாயாக.                                                                                    
மன்பதை  காக்கும் நன்குடிப்  பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல் ...
                                                                            சிலப். 25: 103, 104
மக்களைக் காக்கும் மன்னர் குடியிலே பிறத்தல் துன்பமே அல்லாது போற்றத்தக்கதன்று.

மண்ணாள் வேந்தே நின் வாழ் நாட்கள்
தண்ணான் பொருநை  மணலினும் சிறக்க
                                                                             சிலப். 28: 125, 126
மண்ணினை ஆள்கின்ற வேந்தனே நின் வாழ் நாட்கள் குளிர்ச்சியுடைய ஆன்பொருநை ஆற்று மணலினும் மிகுதியாக விளங்குவதாக.
                                                                                    
செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ காவல் வேந்தே
                                                                      சிலப். 28: 152 – 154
காவல் வேந்தனே ! செல்வம் நில்லாது என்பதனைப் போர்க்களத்திலே வெல்லும் ஆற்றலுடைய தண்டமிழை இகழ்ந்த ஆரிய மன்னரிடத்தே நிகழ்ந்ததை இப்போது  நீயே கண்டனையன்றோ ?
                                                                      
ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழி
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது
செய்வினை வழித்தாய் உயிர் செலும் ...
                                                                                   சிலப். 28: 165 – 167
ஆடுகின்ற கூத்தரைப்போல் அருமையான உயிரானது ஓர் உடலோடேயே என்றும் நின்று செயற்படுவதன்று; செய்த வினையின் வழிப்பட்டு உயிர்கள் வெவ்வேறு உடலினும் சென்று பிறக்கும்.
                                                                                 


நாளைச் செய்குவம் அறம் எனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
                                                                                 சிலப். 28: 179, 180
நாளைக்கு அறம் செய்வோம் என்றாலோ இன்றே கேள்வியளவான நல்ல உயிர் நீங்கிப் போயினும் போகலாம்.                                                                                

இதுஎன வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை
                                                                        சிலப். 28: 181, 182
கடல் சூழ்ந்த இவ்வுலகில், தம் வாழ் நாளின் இறுதி நாள் இதுவே என்று வரையறுத்துக் கூறுவார் எவரும் இலர்.

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
                                                                            சிலப். 28: 207 -  209
ஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறி சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.

குமரியொடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு
                                                                                சிலப். 29: 1:  1 – 3
தெற்கு எல்லையாகிய குமரிமுனையோடு வடக்கே இமயமலை வரையும் ஒருமொழியே ( தமிழ் ) அரசு மொழியாக வைத்து  இவ்வுலகினை ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான்.
                                                                                       
தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ
                                                                              சிலப். 29: 16.  1, 2
பழவினை காரணமாகத் துயருற்றவளின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த  மன்னர் மன்னன் (பாண்டியன் ) வாழ்வானாக.
                                                                                          
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே தொன்றியியல் வாழ்க்கை
                                                                                 சிலப். 30: 139, 140
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுமையன்று தொன்றுதொட்டு உலகில் நடந்துவரும் வாழ்க்கை நியதியே.
                                                                                   
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க் கொலை நீங்குமின்
                                                                                   சிலப். 30: 188, 189
பொய்யுரைக்கு அஞ்சுங்கள்; புறங்கூறுதலை விட்டுவிடுங்கள்; ஊன் உணவைக் கைவிடுங்கள்; உயிர்க் கொலை செய்யாதீர்.

செய்ந்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
                                                                                  சிலப். 30:  191, 192
செய்ந்நன்றி மறவாதீர்; தீயவரோடு நட்புக் கொள்ளாதீர்; பொய்ச் சான்று சொல்லாதீர்; அறவோர் அவையை நீக்காதிருப்பீர்.

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
                                                                                            சிலப். 30: 195
பிறன்மனை நயத்தலை அஞ்சுங்கள்; துன்புறும் உயிர்களுக்கு உதவுங்கள்.
                                                                                           
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
                                                                                சிலப். 30: 197, 198
கள்ளுண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய்யுரைத்தலையும் பயனில பேசும் கூட்டத்தையும்  உறுதியுடன் கைவிடுங்கள்.
                                                                                      
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
                                                                                     சிலப். 30: 199 – 201
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலைத்து நிற்பன அல்ல. சாவு வருவதோ தப்பாது அதனால் வாழும் காலத்தை வறிதே கழிக்காது இறந்தபின் எய்தும் மறுமை உலகுக்கு உற்ற துணையாகிய அறவழியைத் தேடுங்கள்.
                                                              

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக