வெள்ளி, 29 ஜூலை, 2022

 

தன்னேரிலாத தமிழ் –478: குறள் கூறும்பொருள்பெறுக.

 

629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.


 இன்பமானவற்றை எண்ணி இன்பம் கொள்ளாதவன், துன்பம் வந்துற்றபோது  துயரம் கொள்ளான். வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு  பக்கங்கள் போன்றவையே.


இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

 நன்பகல் அமையமும் இரவும் போல

 வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து

 உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்

இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத்

துன்னலந் தகுமோ துணிவில் நெஞ்சே.”அகநானூறு, 327.


 நெஞ்சே….!  இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல் பொழுதும் இரவுப் பொழுதும் போல, வேறு வேறு இயல்பு உடையனவாகி மாறாக எதிர்ப்பட்டு  நிற்பன என உணர்ந்தனையாயின், இவளை நீங்கிச் செல்லும்  துன்பம் தரக்கூடிய  கொடிய பாலைவழியில், நல்ல பொருள் வேட்கைத் தூண்ட, தலைவியைப் பிரிந்து செல்லலும் தகுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக