வெள்ளி, 19 செப்டம்பர், 2025

தமிழமுது –126 – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.- ”கடல் கொண்ட தென்னாடு.”

 

தமிழமுது –126 –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.-

”கடல் கொண்ட தென்னாடு.”

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.-

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”

“இன்றைய தமிழ்நாடு ‘திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.

 மிகப்பழைய இலக்கணங்களிலும் நூல்களிலும் உரைகளிலும் குமரி முனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு நிலமாயிருந்தது என்றும் அந்நிலப்பகுதி பல்லூழிக்காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்ட்தென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

இப்பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் ‘சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஆங்கிருந்த மலைகளுள் ‘குமரி மலை’ ஒன்று என்றும் ஆறுகளுள், குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தமிழமுது –125 – தொல்தமிழர் உணவு –கள்..?கள், சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

 

 -முடிவுரை-

தமிழமுது –125 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

புறநானூறு:

கள், சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

 

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே

பெரிய கள் பெரினே

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே

சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே

பெரும் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே” – 235: 1- 5:

 ஔவையார். அதியமான்நெடுமானஞ்சியைப் புகழ்ந்து பாடிய பாடல் .

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்;

பெருமளவு கள்ளைப் பெற்றால்அதனை நாங்கள் உண்டு பாட, அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்;

சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;

பெருமளவு சோறாக இருந்தாலும், அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்.

 தொல் தமிழர் வாழ்வியலில் கள் சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

போர்க்கள வெற்றிக் கொண்டாட்டங்களிலும் விழாக்களில் நிகழ்த்தும் மகிழ்ச்சி ஆரவாரத்திலும்  கள், சிறப்பிடம் பெறும் . குறிப்பாக மகிழ்ச்சிக்  கொண்டாட்டங்களில் பல வகையான இறைச்சிகளோடு கள் உண்டு மகிழ்தல்  நடைபெறும்.

மன்னர்கள் இருக்கையிலிருந்து எழுந்து   புலவர்களை எதிர்கொண்டு அழைப்பர். புலவர்களுக்கு வேண்டுமளவு பொருள் கொடுத்து மகிழ்வர்.

 மேற்சுட்டியுள்ள ஒளைவயார் பாடலில் மன்னனை நாடிவந்த புலவருக்குச் சிறப்பளிக்கும் பொருட்டு ‘கள்’ கொடுத்து மகிழ்ந்தான் மன்னன்;  புலவரும் மன்னனின் விருந்தோம்பும் பண்பினைப் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பதறிந்து மகிழ்க.  

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

தமிழமுது ……………………………………தொடரும் ………

திங்கள், 15 செப்டம்பர், 2025

தமிழமுது –124 – தொல்தமிழர் உணவு –கள்..?.......தேனில் வடித்த ,கள்ளின் தெளிவு.

 தமிழமுது –124 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்.

தேனில் வடித்த ,கள்ளின் தெளிவு.

 

கரும் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசும் கறி

திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்

கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்

நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை

நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல்

உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்

குடமலைப் பிறந்த தண் பெரும் காவிரி

கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப

நோனாச் செருவின் நெடும் கடைத் துவன்றி.” – 521 -  529.

 

         

நன்னன் அரண்மனையில் காணப்படும் பொருள்கள்:

கரிய மிளகுக் கொடிகளில் காய்ந்த பசிய மிளகு, நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய தேனால் வடிக்கப்பட்ட கள்ளின் தெளிவு,  காட்டில் வாழும் எருமையின் , மூங்கில் குழாயில் தோய்க்கப்பட்ட தயிர், நெடிய மலைப் பகுதியில், முற்றியதால் நீல நிறத்தையுடைய ஓரி பரவிய ஒழுகும் தேனைத் தன்னிடம் கொண்ட தேனடைகள் , நன்றாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆசினிப்பலா ஆகிய யாவும், குடகு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு , சென்று சேரும் மிக்க ஆழத்தையுடைய புகார் முகத்தைப் போல, பகைவர்கள் பொறுத்தற்கு இயலாத போரினையுடைய நன்னனின் தலைவாசலில் ஒருங்கு திரண்டன.

கள்ளும் தயிரும் மூங்கில் குழாய்களில் ஊற்றிப் பாதுகாக்கப்படுவன.

(கறி -  மிளகு ; அமை – மூங்கில் ; விளைந்த – முற்றிய ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை ; ஆசினி – பலாவின் ஒரு வகை ; அழுவம் – ஆழம்.)     

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………முற்றிற்று ----------------------------

 

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

தமிழமுது –123 – தொல்தமிழர் உணவு –கள்..?.......தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய கள்.

 

தமிழமுது –123 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்.

தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய, கள்.

 

“ஏறித் தரூஉம் இலங்குமலை தாரமொடு

வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்

குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை

பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தை தீர

அருவி தந்த பழம்சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ.” – 170 -177.

வள்ளல்  நன்னன் மலைநாட்டில் கூத்தர்கள் பெற்ற விருந்து.

கூத்தர்களே…! நீங்கள், பெண் நாய் ஓடிச் சென்று கெளவிக் கொண்டு வந்த உடும்பின் தசையொடு, வேகமாக ஓடும் கடமானின் ஓட்டத்தைக் கெடுத்து குறவர் கொன்ற கடமானின் இறைச்சியையும், முள்ளம் பன்றியைக் கொன்ற பசிய கொழுப்புடைய பிளக்கப்பட்ட தசையையும் கலந்து உண்டு.

 

 மூங்கில் குழாய்க்குள் நிரப்பப்பெற்ற முற்றிய தேனால் செய்யப்பட்ட கள்ளின் தெளிவைக் குறைவின்றி இடையிடையே நிரம்பப்பருகிப் பின் நெல்லால் சமைக்கப்பட்ட கள்ளினை உண்டு மகிழ்ந்து, விடியற்காலத்தில் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மயக்கம் தீரும்படி மலைக் குறவர் வழங்கும் நல்ல உணவுகளை உண்டு நிறைந்த மகிழ்ச்சியுடன் ‘விருந்தினைப் பெற்றேம்’  என்று உறவு முறையுடன் குறவர்கள் மலை மீது ஏறிக் கொணர்ந்த அரும் பொருள்களையும் பெற்றுச்  சென்வீராக.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

சனி, 13 செப்டம்பர், 2025

தமிழமுது –122 – தொல்தமிழர் உணவு –கள்....? .......கள்ளின் தெளிவு …. தேறல்.

 தமிழமுது –122 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்:

கள்ளின் தெளிவு …. தேறல்.

ஞெண்டு ஆடுசெறுவில் தராய்க்கண் வைத்த

விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ

வளஞ்செய் வினைஞர் வல்சொ நல்க

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்

இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவீர்.” 460- 464.

 

நண்டுகள் ஆடித் திரியும் வயல்களுக்கு அருகில் உள்ள மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்ட மலையைப் போன்ற நெற்போர்களை, அடிமுதல்     அழித்துக் கடாவிட்டு, வளமையை உண்டாக்கும் உழவர், வலையர் மகளிர்க்கு நெல்லை முகந்து தருவர். அம்மகளிர், களிப்பு மிகுதியால் அசைகின்ற மிடாவிலிருந்து வார்த்த , பசிய முளையால் ஆக்கிய கள்ளின் தெளிவை ஞாயிற்றின் இளங்கதிர் எறிக்கும் காலத்தில் களங்கள் தோறும் நீவிர் பெறுகுவீர்.

 

(தசும்பு – கள் குடம் ; வாக்கிய – ஊற்றிய ; களமர் – உழவர் ; தேறல் – கள்ளின் தெளிவு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

வியாழன், 11 செப்டம்பர், 2025

தமிழமுது –121 – தொல்தமிழர் உணவு –கள்..?பனங்கள் ; நெல்லால் ஆக்கிய கள்.

 

தமிழமுது –121 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பட்டினப்பாலை:

 பனங்கள் ; நெல்லால் ஆக்கிய கள்.

“சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்

மடல் தாழை மலர் மலைந்தும்

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்.

புன்தலை இரும் பரதவர்

பைந்தாழை மா மகளிரொடு

பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது

உவவு மடிந்து உண்டு ஆடியும்.” – 87 – 93.

சிவந்த தலை மயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் கரிய குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை, அவர்கள் தங்கள் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். பசுமையான தழை ஆடை உடுத்திய கரிய , தம் மனைவியருடன் கூடியிருப்பர்.

 பரதவர், சினைகளை உடைய சுறாமீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.

 அவ்வழிபாட்டின் பொருட்டு, விழுதுகளைக்கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள, வெண் கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர், மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர். சருக்கரை உடைய பனை மரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளை உண்பர், நெல்லால் ஆக்கப்பட்ட கள்ளையும் உண்டு விளையாடுவர்.

(பரதவர், சுறாமீன்களால் தங்களுக்கு எவ்வித இடையூறும் நேராமல் அத் தெய்வம் காக்கும் என நம்பினர். உவவு – உவா நாள் – மதி நிறை நாள் ; காழ் – காம்பு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

 

 

புதன், 10 செப்டம்பர், 2025

தமிழமுது –120 – தொல்தமிழர் உணவு –கள்..?தேறல் (கள்) உண்ட மயில்.

 

தமிழமுது –120 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

குறிஞ்சிப்பாட்டு :

தேறல் (கள்) உண்ட மயில்.

   அந்நிலை…..

நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர

ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ

ஆகம் அடைய முயங்களில் அவ்வழி

பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை

முமுதற் கொக்கின் தீம்கனி உதிர்ந்தென

புள் ஏறி பிரசமொடு ஈண்டி பலவின்

நெகிழ்ந்து உகுநறும் பழம் விளைந்த தேறல்

நீர்செத்து அயின்ற தோகை வியலூர்ச்

சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்

கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்

வரையா மகளிரின் சாஅய் விழைதக._ 184 – 195.

 

 தலைவன், தலைவியை அணுகிய அளவில், தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் இவளிடம் வெளிப்பட்டுத் தோன்றியமையால், விரைந்து அவனிடமிருந்து இவள் நீங்க முற்பட்டபோதிலும் அவன் விடாமல், அவளைக் கையால் அணைத்து, அவள் மார்பு, தன் மார்பில் ஒடுங்கும்படி தழுவினான். பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில், மாவின் இனிய பழங்கள் உதிர்ந்தன ; பலா விரிந்து தேன் சிந்தும் நறிய பழத்தானும் உண்டாகிய கள்ளின் தெளிவு நிரம்புவதால் தன்னை நுகரும் தேனீக்களை விலக்கி, தேனடைகள் உகுத்த தேனுடன் கலந்து, அத்தேறலைத் தனக்கு உண்பதற்கு ஒத்த எளிய நீராகக் கருதி மயில் உண்டது, விழாக்கள் கொள்வதற்கு உரிய இடங்களைக் கொண்ட அகன்ற ஊர்களில் விழா நடைபெறும் களத்தில் மேம்படச் சென்று, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிப்ப ஆடுகின்ற மகள், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடும் போது தாளத்திற்கு ஆற்றாது தளர்வது போல் மயில் தளர்ச்சியடையும், மயிலின் தளர்ச்சியும் ஆடுமகளின் தளர்ச்சியும் புணர்ச்சியின்பின் தலைவி அடைந்த நிலையைக் குறிப்பால் உணர்த்தும்.

 

(ஒய்யென – விரைந்து, (ஒலிக்குறிப்புச்சொல்) ; ஆகம் – மார்பு ; முயங்குதல் – தழுவுதல் ; உக்க – உதிர்ந்த ; கொக்கு – மாமரம் ; புள் – பறவை, ஈண்டு வண்டுகளைக் குறித்த்து ;  பிரசம் – தேன் ;  செத்து – கருதி ; அயின்ற – உண்ட ; தோகை – மயில் ; சாறு – விழா : நந்தி – மிகுந்து ;  ஆங்கண் – அவ்விடத்து ; வியல் ஊர் – பெரிய ஊர்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

தமிழமுது –119 – தொல்தமிழர் உணவு –கள்..?கள்ளுக்கடைகளில் பறக்கும் கொடிகள்,

 தமிழமுது –119 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

கள்ளுக்கடைகளில் பறக்கும் கொடிகள்,

பத்துப்பாட்டு:  மதுரைக் காஞ்சி.

 மதுரையில் பறக்கும் பல்வகைக் கொடிகள்.

 

” சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி

வேறு பல்பெயர ஆரெயில் கொளக்கொள

நாள்தோறு எடுத்த நலம்பெறு புனைகொடி

நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு

புலவுப் படக்கொன்று மிடைதோல் ஓட்டி

புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி

கள்ளில் களிநவில் கொடியொடு நன்பல

பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ.” – 366 – 373.

 

 மதுரை நகரில் நாளங்காடி, அல்லங்காடி என்ற இருபெரும் கடைத் தெருக்களையும் அவற்றில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகள் ; கோயில் விழாக்களுக்குக் கட்டப்பெறும் பல அழகிய கொடிகள் ; போரில் பெற்ற வெற்றியைக் குறிக்க நாள்தோறும் நாட்டப்பெறும் வெற்றிக்கொடிகள் ; கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகள் ; கல்வி, கொடை, தவம், ஆகியவற்றைக் குறிக்கும் கொடிகள் ; பல மொழி பேசும் மக்கள் கலந்து இனிது உறையும் மதுரையில் இக்கொடிகள் நாட்டிஹ் அறநெறி பிறழா வாழ்வினைக் குறிப்பனவாகும்.

(சாறு – விழா ; நிலவு வேல் – நிலைபெற்ற ; வேல் – களிப்பு ; பதாகை – பெருங்கொடி.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

திங்கள், 8 செப்டம்பர், 2025

தமிழமுது –118 – தொல்தமிழர் உணவு –கள்..?இழிந்தோர், கள் உணவு கொள்வர்.

 

தமிழமுது –118 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பத்துப்பாட்டு:  மதுரைக் காஞ்சி.

 

 இழிந்தோர், கள் உணவு கொள்வர்.

 

”சீருடைய விழுச் சிறப்பின்

விளைந்து முதிர்ந்த விழு முத்தின்

இலங்கு வளை இருஞ் சேரி

கள் கொண்டிக் குடிப் பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந..” - -134 – 138.

 

 பெரிய நன்மக்களிடத்து மேம்பட்டுத் தோன்றுவதால் புகழை உடைய சிறந்த தலமைப் பண்பினை உடையாய் , சூல் முற்றி ஒளி முதிர்ந்து விளங்கும் சிறந்த முத்துக்களையும் விளங்கும் சங்கினையும் மூழ்கி எடுப்பவர் உறையும்  சேரிகளையும் கள்ளாகிய உணவை உண்ணும் இழிந்த குடிகள் தங்கியுள்ள சிற்றூர்களையும் கொண்ட கொற்கை என்னும் நல்ல ஊரில் உள்ளார் விரும்புதலையுடைய பொருநனே..! முத்து,சங்கு ஆகியவற்றைக் குளிப்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளைக் கொண்ட ஊராகும்.

நெடுஞ்செழியன், கொற்கை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு உரிமை பூண்டவன் என்பது இதனால் உணரப்படும்.

 

(கொண்டி – கொள்ளப்படுவது ; உணவு  - ஈண்டு ,  கள் உணவு.; வளை – சங்கு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

தமிழமுது –117 – தொல்தமிழர் உணவு –கள்..?மகளிர் நடத்தும் கள்ளுக்கடை

 

தமிழமுது –117 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 

பத்துப்பாட்டு: பெரும்பாணாற்றுப்படை

 

மகளிர் நடத்தும் கள்ளுக்கடை

 

 கள் விற்கும் இடம் என்பதைக்குறிக்க அடையாளக் கொடி (பச்சைக்கொடி) பறக்கவிடுவதும் ; கள்ளை வீட்டிலேயே பெண்கள் சமைத்தலும் ; ஆண் பன்றிக்கு அரிசி மாவு கொடுத்துக் கொழுக்கச் செய்து தசையை உண்ணுதலும் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம். தோப்பி நெல்லால் சமைத்த கள்.

 

 ”முட்டு இல் …..

பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்

செம்பூத் தூஉய செதுக்கடை முன்றில்

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய

வார்ந்தூகு சில்நீர் வழிந்த குழம்பின்

ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்

பல்மயிர் பிணவொடு பாயம் போகாது.” – 337 – 343.

 

 கள்ளுக்கடையில் கள் உண்பதற்காகப் பலர் புகினும் கள், இல்லை என்னாது தட்டுப்பாடில்லாமல் வழங்கும் வாயில், பச்சை நிறக் கொடிகள் அசைகின்ற, செதுக்கி அழகுடன் அமைந்த புல் படர்ந்த செவ்விய மலர்கள் தூவப்பட்ட முற்றத்தினைக் கொண்ட இடம்; கள் உண்ணப் பலரும் புகும் வாயில். கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதனால் வடிந்தநீர் குழம்பி ஈரமாகிய சேற்றினை அளைந்து கொண்டிருக்கும் கரிய பல குட்டிகளையுடைய பெண் பன்றிகள் அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லை இடித்து மாவாக்கி அதை  உணவாக்கிக் கொடுத்துப் பல நாளும் குழியிலே நிறுத்தி வளர்த்த குறிய காலையுடைய ஆண் பன்றியின் கொழுத்த கொழுப்புக் கறியுடன் களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் பெறுவீர்.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

சனி, 6 செப்டம்பர், 2025

தமிழமுது –116 – தொல்தமிழர் உணவு –கள்..?பெரும்பாணாற்றுப்படை , கள் ஆக்குதல்

 

தமிழமுது –116 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பத்துப்பாட்டு : பெரும்பாணாற்றுப்படை

கள் ஆக்குதல்

அவையா அரிசி அம்களித் துழவை

மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்

பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்

பூம்புற நல்லடை அளைஇ தேம்பட

எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி

வல்வாய்ச் சாடியின் வழைச்சு அறவிளைந்த

வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழித்

தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்.” -275 – 282.

 

குற்றாத கொழியல் அரிசியை நல்ல களியாகத் துழாவி அட்ட கூழை , மலர்ந்த வாயையுடைய தட்டுப் பிழாவில் இட்டு உலரும்படி ஆற்றிப் பாம்பு கிடக்கும் புற்றின்கண் கிடக்கும் பழஞ்சோற்றைப் போன்று பொலிவு பெற்ற புறத்தையுடைய நல்ல நெல் முளையை இடித்து அதனை, அதிலே கலந்து அஃது இனிமை பெறும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியில் இட்டு, வெந்நீரில் வேக வைத்து நெய்யரியாலே வடிகட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நறிய கள்ளைப் பச்சை மீன் சூட்டோடு, நடந்து சென்ற வருத்தம் நீங்க உண்ணப் பெறுவீர்

( அவையா – குற்றாத ; துழவை – கூழ் ; பிழா – தட்டு ; குரும்பி – புற்றாஞ்சோறு ; தண்மீன் – உயிர் மீன்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தமிழமுது –115 – தொல்தமிழர் உணவு –கள்..?சுடுகாட்டுப் படையல் – கள் உணவு.

 

தமிழமுது –115 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

புறநாணூறு :சுடுகாட்டுப் படையல் – கள் உணவு.

 

”கள்ளி போகிய களரி மருங்கின்

வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு

புல்லகத்திட்ட சில் அவிழ் வல்சி

புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு

அழல்வாய்] புக்க பின்னும்

 பலர் வாய்த்து இரார் பருத்து உண்டோரே.”-360: 16 – 21.

 

பாழிடமாகிய சுடுகாட்டில் கள்ளி ஓங்கி வளர்ந்துள்ள களர் நிலத்தின் பக்கத்தே, பாடையை நிறுத்திய பின்னர், பிணத்தை ப் புல் மீது கிடத்திக் கள்ளுடன் சில சோறாகிய உணவைப் புலையன் படைப்பான். புலையன் ஏவலுக்குப் புல்மேல் கிடத்திய பிணத்தைச் சுடலைத் தீயில் சுட்டெரித்தது கண்ட பின்னரும் உண்டு பருத்தோர் பலரும்  புகழ் வாய்த்து இருந்தார் இலர். (மேலும் காண்க -232.)

எட்டுத்தொகை முற்றிற்று.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

வியாழன், 4 செப்டம்பர், 2025

தமிழமுது –114 – தொல்தமிழர் உணவு –கள்..?கள்ளுக்கு விலையாக யானையின் தந்தம்.

 

தமிழமுது –114 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

அகநானூறு :  கள்ளுக்கு விலையாக யானையின் தந்தம்.

“வல்வில் இளையர் தலைவர் எல்வுற

வரிகிளர் பணைத்தோள் வயிறுஅணி திதலை

அரியலாட்டியர் அல்குமனை வரைப்பில்

மகிழ்நொடை பெற்றாராகி நனைகவுள்

கானயானை வெண்கோடு சுட்டி

மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்

……………………………………

குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு

கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்.” – 7 – 12 ; 17,18.

 

ஆறலைகள்வர் தலைவர், இரவில் கோடுகள் விளங்கும் பருத்த தோள் மீது தேமல் படர்ந்த வயிறு உடைய கள் விற்கும் பெண்கள்  வீட்டின்கண் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பதற்குக் கைப்பொருள் வேறு இல்லையாகத் தன் மனையிடத்து உள்ள காட்டு யானையின் வெண்ணிறக் கொம்புகளைச் சுட்டிக் காட்டி அவற்றை எடுத்து வரும்படி அம்பலத்து ஆடித்திரியும் புதல்வனின் புல்லியத் தலையைத் தடவி ஏவுவார்.

குறுகிய பாறையிடத்து விரைந்த நடையினை உடைய ஒட்டகத்தின் நிலைகொண்ட பசியினைப் போக்கும் சுள்ளி போன்று  காய்ந்து கிடக்கும்  வெண்ணிற எலும்புகள். (எலும்புகளை ஒட்டகங்கள் உணவாகக் கொள்ளும். இஃது ஓர் அரிய செய்தி.)

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

புதன், 3 செப்டம்பர், 2025

தமிழமுது –113. – தொல்தமிழரின் ஓணம் பண்டிகை.

 

தமிழமுது –113. –  தொல்தமிழரின் ஓணம் பண்டிகை.

மதுரைக் காஞ்சி , மாங்குடி மருதனார்.

“கணங்கொள் அவுணர் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நல்நாள்

கோணம் தின்ற வடுஆழ் முகத்த

சாணம் தின்ற சமம்தாங்கு தடக்கை

மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்

மாறாது உற்ற வடுப்படு நெற்றி

கரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்.”- 590 – 596.

திரட்சிகொண்ட அவுணரை வென்ற, பொன்னால் செய்த மாலையை உடைய , கருநிறத் திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர்.

 இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறவீரர்களைக் கொண்டிருக்கும் தெருக்களில், தம்முள் தாம் மாறுபட்டுப் போர் செய்வர்; மாறாமல் தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும், சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும், பெரிய விருப்பத்தினையும் உடைய மறவர்களால், திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது.; அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.

(அவுணர் – அசுரர் ; கோணம் – தோட்டி ; சாணம் – தழும்பு ; சமம் – போர்.)

………………………………………………………………………..

தமிழமுது –114 –  தொல்தமிழர் உணவுகள்..?

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

தமிழமுது –112. – தொல்தமிழர் உணவு –கள்..?தோப்பிக்கள் படையல்.

 

தமிழமுது –112. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 

அகநானூறு : தோப்பிக்கள் படையல்.

 

”வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்

நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்.” -35: 6 – 9.

 

 வில்லை ஏராகக்கொண்டு வாழும் வாழ்க்கையினை உடைய  சிறந்த அம்பினையுடைய கரந்தை வீரர்கள் ,  தங்கள் வலிய ஆண்மையால் இட்ட பதுக்கையின்கண் உள்ள கடவுளை வழிபடுதற்கு அந்நடுகல்லில் மயில் தோகைகளைச் சூட்டித்  துடியை அடித்து நெல்லால் ஆக்கிய கள்ளொடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுப்பர்.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

திங்கள், 1 செப்டம்பர், 2025

தமிழமுது –111. – தொல்தமிழர் உணவு –கள்..?கள் உண்ணலாம் ; உண்ணக்கூடாது…!

 

தமிழமுது –111. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

கலித்தொகை :

கள் உண்ணலாம் ; உண்ணக்கூடாது…!

”நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து

அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்

திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது…” -99 : 1 -3.

 

கள்ளைஉண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும் ; அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக்கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர்  அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும்  இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள  அரசியலைக்கூறும்  ; நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சி புரிபவன் நீ.

 ( அந்தணர் இருவர் என்றது  தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய  வெள்ளியும் ஆவர்.  வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம் வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன்,  கள் உண்ணக் கூடாது என்றும் ; வெள்ளி, கள் உண்ணலாம் என்றும் தம் நூலில் கூறியுள்ளனர்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------