ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-5.
தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - திறனுரை: ”செந்தமிழியற்கை சிவணிய..................போக்கறுபனுவல் என்பதன் விளக்கம்.
செந்தமிழ் என்பது தமிழுக்கு இயற்கையடை; “செந்தமிழ் நாடெனும் போதினிலே”, வாழிய செந்தமிழ்” எனவும் செந்தமிழ்நாட்டுப் பொருநர்” எனவும் பாரதியார் இயல்பாகப் பாடுதல் காண்க. செந்தமிழியற்கை என்னும்போது மொழியியல்பை மட்டும் பாயிரம் சுட்டவில்லை. வாழ்க்கை வழக்கையும் குழும வழக்கையும் நாகரிகத்தையும் சேர்த்துச் சுட்டுகின்றது. தமிழ் என்ற சொல பண்டைக்காலத்துத் தமிழினத் தொடர்பான தமிழ்மை பலவற்றையும் குறித்துவரும்் ஒரு பொதுப்பெயர்.
தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து என்ற (19) புறநானூறும் ‘கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து’ என்ற (63) பதிற்றுப்பத்தும் ;அருந்தமிழாற்றல் அறிந்திலர்’ என்ற சிலப்பதிகாரமும் தமிழ்ப்படையைக்குறிக்கும். ‘நற்றமிழ் முழுதறிதல்’(50) என்ற புறமும் ‘தமிழ் முழுதறிந்த தன்மையன்’ என்ற சிலம்பும் தமிழறிவைக்குறிக்கும். ‘தமிழ் நிலைபெற்ற’ என்ற சிறுபாண் தமிழ்ச் சங்கத்தினையும் ‘தமிழ்தழிய சாயல்’ என்ற சிந்தாமணி தமிழ்ப் பண்பையும் தமிழ் மருந்து தமிழிசை என்ற தொடர் தமிழ்க்கலைகளையும் குறிக்கும்.
பன்னிரு வழக்கையும் சுற்றிப்பார்த்து அறிந்ததோடு நில்லாமல், தமிழில் தாம் நூல் எழுதுவதற்குமுன் பிறரால் எழுதப்பட்டு வழங்கிய எல்லாத் தமிழிலக்கண நூல்களையும் கற்றுத் தெளிந்தார் தொல்காப்பியர். ‘முந்நூல்’ என்பதனால் தொல்காப்பியர் காலத்துத் தொன்றுதொட்டு வந்த தொன்மை நூல்கள் எண்ணிறந்தன என்பது உணரப்படும். நில வழக்கையும் நூல் வழக்கையும் நேரடியாக அறிந்துகண்டு செய்திகளைத் தொகுத்தவன் என்பதனைக் ‘கண்டு’ என்ற சொல் காட்டும். வழக்காலும் நூல்வழியாலும் பல்வேறு செய்திகளைத் தாம் எழுதப்புகும் நூலுக்கு ஏற்ற வகையிற் சிந்தித்தான்; அவற்றின் கூறுகளை இயல் முறைப்படி தொகுத்து எழுதினான். புலந்தொகுத்தல் - கண்டறிந்த இலக்கணங்களைப் பல தலைப்புகளில் நெறிப்படுத்துதல்.
‘போக்கறு’ பனுவல் என்பது நூற் பெயர். நன்னூல், சின்னூல் தொன்னூல் என வருவது காண்க.
நிலந்தருதிருவின் என்பது தொடங்கி நிறுத்தபடிமையோனே என்பதுகாறும் கூறுவது. அரங்கேறிய இடம், அரங்கத் தலைமை, ஒப்புதல், நூலாசிரியன் பெயர், சிறப்புக்கள் என்றிவை கூறப்படும்.
பாண்டியன் அவைக்களத்து அதங்கோட்டாசான் தலைமையில் இந்நூல் அரங்கேர்றம் நடைபெற்றது. பாண்டியன் வீற்றிருக்க அமைச்சர்சூழ ுஅரசுப் பெருமையோடு நடந்தது. அதங்கோட்டாசானுக்கு விளக்கினார் என்று ஒருவர் மேலதாகச் சொல்லப்பட்டாலும் அவையாதலின் புலமைச்சான்றோர்கள் கூடியிருந்தனர் என்று கொள்க. அதங்கோட்டாசான் தலைமை தாங்கி நடத்தினான். ஆசான் - ஆசிரியன். புலவர் பெருமக்கள் பலர் இருப்பினும் இவர் ஆசிரியனாக இருந்தமையின் முதற்பொறுப்பு வழங்கப்பெற்றது. .....................................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக