திங்கள், 5 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :808


திருக்குறள் -சிறப்புரை :808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.--- ௮0௮
( கேள்-இழுக்கம்; நாள் – இழுக்கம்.)
நண்பர்கள் செய்த பிழையினைத் தாமும் கேட்காது, பிறர் கூறினும் ஏற்றுக்கொள்ளாத நட்புரிமை உடையவல்லார்க்கு, அந்த நண்பர்கள் பிழைசெய்த  நாள் பயனுள்ள நாளாகும்.
“ காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி…” –புறநானூறு.
அன்பு பொருந்திய மனங்களை உடைய உம்மிடையே (திருமாவளவன் – பெருவழுதி) புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார் திரிவர், அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக