வியாழன், 3 அக்டோபர், 2019

தொல்தமிழர் அறிவியல் –102 : 34. அசுணம்

34. அசுணம்

கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
                             - ஈழத்துப் பூதன்சேந்தனார், அகநா.88: 10 – 12
                      
                           கன்னத்திலிருந்து பெருகி வழியும் அழகிய மத நீரில் கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்கயாழிசை எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும். பன்றி, பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும். நற்.98. மேலும் காண்ககலித் -143 ; 10-12 – நற். -244; 1-4 – நற். 304 ; 8.9 – சீவக 1402 .

அசுணமா

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆருயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …….
              ---நல்லந்துவனார், கலித். 143 : 10 - 12
வஞ்சனையாலே தான் மீட்டிய யாழ் இசயைக் கேட்ட அசுணமாவைஇவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற் போல்
                         
அசுணம்

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
                  -கூற்றங்குமரனார், நற்.244 : 1-4
                 மழை பெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று நறுமணம் கமழும் மலைமுழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவிகொடுத்துக் கேளாநிற்கும்.


அசுணங் கொள்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
                 --மாறோக்கத்து நப்பசலையார், நற்.304:8,9
                   இசையறி விலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போல் இன்பமும் துன்பமும் உடையதாயிரா நின்றது.( அசுணம் கொல்பவர் முதலில் யாழை வாசித்துப் பின்பு செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அவற்றைக் கொல்வதனால் இன்பமும் துன்பமும் உடைமையின் அதனை உவமித்தார்-பின்னத்தூரார்) -----தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக