சனி, 27 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 2

 சான்றோர் வாய் (மை) மொழி : 2

“அளவுக்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.”

 அமுதம், அமிழ்தம், அமிர்தம், அமுது இச்சொற்கள் அனைத்தும் சோறு, நீர், பால் ஆகியவற்றைக் குறிக்கும்  

அமிழ்தம் தேவர் உலகில் கிடைக்கும் என்றும் அதனால் இதற்குத் தேவாமிர்தம் என்றும் பெயராயிற்று என்பர். இதை உண்டவர்க்கு பிணியில்லை, மூப்பில்லை ,சாக்காடும் இல்லை என்று கதை அளப்பர்.

திருவள்ளுவர் அமிழ்தமாவது  மழைநீர் என்பார்.

”வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்று உணரற் பாற்று.” குறள்:11. இக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், ’அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின்…..’என்றார்.

மேலும் குறள் 82-இல்

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.” சாவா மருந்து எனினும் என்றதற்குப் பரிமேலழகர் ’உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்’ என்று உரைத்தார். 

பாவேந்தர் “தமிழுக்கும் அமுதென்று பேர் ;அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் …”என்று தமிழமுதம்  உண்பவர் இறாவா நிலை எய்துவர்  எனலாமா…? அஃது உண்மைதானே, இயற்கை எய்திய தொல்காப்பியர் என்றோ.. மறைந்த திருவள்ளுவர் என்றோ… காலஞ்சென்ற கம்பர் என்றோ  எவரும் கூறுவதில்லையே..! முன்னோர் மொழிபொருள் கொண்டு இறவாநிலை எய்திய  தமிழ், அமிழ்தமே..!

 வானின்று பொழியும் மழையை அமிழ்தம் என்றார் வள்ளுவர். கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் “அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ…” (படம்: தங்கமலை ரகசியம்.) என்று வானில் தோன்றும் குளிர்நிலவின் ஒளி வெள்ளத்தை அமுதம் என்றார்.

அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சாகுமா…? ஆமாம்.

உயிர்கள் நலம், வளம் பெற்று நீடூழி வாழ  வான்புகழ் வள்ளுவர் வகுத்தளித்த திருக்குறளில் ‘மருந்து’  95. என்றோர் அதிகாரம் இருக்கிறது. வள்ளுவர் ஏதோ மூலிகை மருத்துவம் குறித்துக் கூறியுள்ளதாக நினத்தால் அது தவறு. அவர் நோய்க்கு மருந்து கூறவில்லை; ஆயினும் நோயின்றி மக்கள் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைக் கூறியுள்ளார், அஃதாவது வருமுன் காக்கும் நெறியைக் கூறியுள்ளார். ( Prevention is better than cure).

நோய் நொடியின்றி நூறாண்டு வாழ……எதிலும் அத்து மீறாதே அளவோடு இரு.

“மிகினும் குறையினும் நோய் செய்யும்…”

“அருந்தியது அற்றது போற்றி உணின்..”

”அற்றால் அளவறிந்து உண்க…”

கழிபேர் இரையான்கண் நோய்..”

பெரிதுண்ணின் நோய் அளவின்றிப்படும்.”  மேற் கூறியவாறு அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகிக் தோன்றாக் கெடும்- 479.

வள்ளுவர் கூற்று முற்றிலும் உண்மையன்றோ…!

நூறாண்டு நோய் நொடியின்றி  வாழ இந்த ஒரு பழமொழி போதும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக