புதன், 31 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 5.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 5.

”ஆழம் தெரியாமல் காலை விடாதே”

                    ஆழம் தெரியாமல் காலைவிடாதே , இன்றும்  ஊர் மக்கள் வழக்கில் உள்ளதுதான். ஆற்றிலோ குளத்திலோ இறங்கும்போது ஆழம் தெரிந்து கொள்ள காலால் எத்திப் பார்த்து இறங்குவது இயல்பான ஒன்றுதான் ஆயினும்  வாழ்க்கையில் நாம் செய்யவேண்டிய செயல்களை என்ணிப்பார்த்துச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இப்பழமொழியின் கருத்தாகும். ஏதாவது ஒரு செயலைத் திட்டமிட்டு அதனைச் செய்வது குறித்து நெருங்கியவர்களிடம் நாம் பேசும் போது அவர்கள்  ‘ உன் சக்திக்கு அதெல்லாம் செய்யமுடியுமா. எதுலயும் ஆழம் தெரியாம கால உடாதே’ என்று அறிவுரை கூறுவார்கள்.

                           அதனால் ,திருவள்ளுவர் கூறுவதை மனங்கொண்டு செயல்பட வேண்டும்,

 “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. 467.

ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயல் குறித்து நன்றாக ஆராய்ந்து தொடங்க வேண்டும், தொடங்கிய பின் ஆராயத் துணிவது ஆழம் தெரியாமல் காலைவிட்டு அல்லல் படுவதைப் போன்றதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக