ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழமுது – 61. அசுணம் - விலங்கா / பறவையா..?:

 

தமிழமுது  61. அசுணம் -  விலங்கா / பறவையா..?:

அசுணம்:

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்

கூதிர்க் கூதளத்து அலரி நாறும்

மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்

மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்.” நற்றிணை; 244.

 மழை பெய்த  பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர் காலத்துக் கூதாளி மலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று நறுமணம் கமழும் மலை முழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவி கொடுத்துக் கேட்கும்.

மறையின் தன்யாழ் கேட்ட மானை அருளாது

அறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்ச

பறை அறைந்தாங்கு …” கலித்தொகை; 143,

வஞ்சனையாலே தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்ட அசுணமாவை, இவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற்போல்.

பறைபட வாழா அசுணமா…” நான்மணிக்கடிகை; 4.

கேகயப் பறவைகள், பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.

அசுணம் பறவையா விலங்கா..? என்பதில் குழப்பம் நிலவினும் மலையின் பிளப்பாகிய குகையில் வாழ்வதாக,  நற்றிணை 244, அகநானூறு , 88 - இவ்விரு பாடல்கள் வழியும் பிற சான்றுகளாலும் அசுணம் விலங்கினமே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவ்விலங்கு பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன.  அசுணம்  அழிந்து போன விலங்கினங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

………………………தொடரும்………………………..

சனி, 28 ஜூன், 2025

தமிழமுது – 60. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :

 

தமிழமுது  60. ஆதிகாவியங்கள்ஒரு  பார்வை :

 

 பாரதம்பங்காளிகள் சண்டை. இந்தச் சண்டை நாட்டின் எல்லையை விரிவுபடுத்த நடந்ததல்ல ; நாட்டு மக்களைக் காப்பாற்ற நடைபெற்றதல்ல. கட்டிய மனைவியை வைத்துச் சூதாடியதால் ஏற்பட்டது. அவளோ  ஐவருக்கும் தேவி அழியாத பத்தினிஇப்படி ஒரு இழி நிலை தமிழ் மண்ணில் தமிழ் எழுத்துத் தோன்றிய நாள் முதலா இல்லை. அது போகட்டும் மனைவியை வைத்துச் சூதாடும் மன்னன் நாட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்தான் என்றால் குடிமக்கள் மனைவியரின் நிலை என்னவாகும்..? ஆதிகாவியங்களில் (திரெளபதி, சூர்ப்பணகை) மானபங்கம் செய்யப்படுகின்றனர்.  தமிழ்ச் சமுதாப் பெண்களோடு இவர்களை ஒப்பிட முடியுமா..? முடியாது.

 ஆதிகாவியங்களில் நடக்கும் போர்கள் மிகவும் வியப்பானவை. தமிழர்கள் காணாத போர்க்களமா..? தமிழர்தம் வாழ்வே வீரமும் காதலும் கொண்டதுதானே..! தமிழர்கள வீர நிலைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லவா..? தமிழர்கள் காதலிலும்  போரிலும் அறம் போற்றி வாழ்ந்தவர்கள். தமிழர் போர்க்களத்தில் மாயாஜாலங்கள், மந்திரங்கள், தந்திரங்கள், சித்து விளையாட்டுகள், என்று எதுவுமில்லை. தமிழர் போர்க்களத்தில் முற்றிலும் மாசுபடாத ஆண்மைமிக்க வீரம் மட்டுமே பேசும் ; வீரம் விளையும் களமாகப் போர்க்காளம் விளங்கியதை  வரலாறு காட்டும்.

ஆதிகாவியங்களில் இடம்பெற்றுள்ள போர்முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை. ஆண்மையுள்ள வீரர்கள் அங்குப் போர் புரியவில்லை. மாறாக அவதாரங்களின் அற்புத சக்திகள்,  சூழ்ச்சித்திறன்கள்,  இவையே அங்குப் போர்க்களத்தில் புழங்கின. இராம்ன சூழ்ச்சியால் வாலியைக்கொன்றான் ; வீடணன் செய்த துரோகத்தால் அரக்கர்களை அழிக்கிறான் ; இப்படியாக சோரம்போன  கோழைகளின்  வீரக்கதைகள் தமிழ் மண்ணில் ஒருநாளும்  போற்றுதற்குரியதன்று.

பாரதப் போரில்  தெய்வமாகிய கண்ணனின் சித்து விளையாட்டுகள் சூழ்ச்சித் திறன்கள் நகைப்புக்குரியதே. மாலைப் பொழுதை மந்திரத்தாலே மயங்கச் செய்கின்றான். கர்ணனைக்கொல்ல கண்ணன் சொன்ன சூத்திரம் இவையெல்லாம் ஆதிகாவியங்களின் போர் முறைகள் இவற்றால் பெறும் வெற்றிக்கு  வீரம் என்று பெயரா…. இந்தத் தெருக்கூத்து நடந்த இடத்திற்குப் போர்க்களம் என்று பெயரா..?

 ஆதிகாவியங்களில் உண்மையான காதலும் இல்லை ; நேர்மையான வீரமும் இல்லை. தமிழர்கள் பின்பற்ற வேண்டியது என்று சொல்ல எதுவுமே இல்லை ; எதுவும் இருப்பதாகக் கூறுபவர்கள் தமிழரின் மேன்மையான இலக்கண இலக்கிய வரலாறுகளை அறியாதோரே..!

ஆதிகாவியங்களில் இடம் பெற்றுள்ள இரண்டு கதைகளும் அரச குடும்பத்தைச் சார்ந்தவை. அரச குடும்ப விவகாரம் கோட்டையை விட்டு வெளியே வந்து சந்தி சிரித்தது. குடும்பத்தை இப்படிவைத்திருந்த அரசர்கள் குடிமக்களை எப்படி வைத்திருப்பார்கள்..?  இக்கதைகளைப் பற்றிய அறிவைத் தமிழர்கள் பெறாதிருப்பதே மேல்.

…………………..தொடரும், …………………….

 

 

தமிழமுது – 59. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :

 

தமிழமுது  59. ஆதிகாவியங்கள்ஒரு  பார்வை :

ஆதிகாவியங்கள் தமிழர் பண்பாட்டிற்கு ஒத்துவராதவை.ஆனால், அண்மைக்காலங்களில் அறிஞர்கள் பலர் ஆதிகாவியங்கலில் தான் உலக மக்களின் வாழ்வே அடங்கியிருப்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். குறிப்பாகத் தமிழர்களுக்கு  வாழ்வியல் நெறி ஒன்று இல்லாதது போலவும் எலாமே வடக்கிலிருந்து வந்ததில்தான் எல்லாமே உள்ளது என்று கதைக்கின்றனர். இது வேதனை மட்டுமல்ல வேடிக்கையாகவும் இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றை நமது முன்னோர்கள் நம்முடைய மொழியிலேயே நிறைய சொல்லியிருக்கின்றனர். அவற்றை விடுத்து அயல்மொழிகளில்  தமிழர்களுக்கு அறிவுரை வழங்குவது தேவையற்றவையே.

சங்க இலக்கியத்தின் தூய்மையும் ; திருக்குறளின்  தெளிவும் எம்மொழியில் காணக்கிடைக்கின்றன..? தமிழரின் வாழ்வியல் சிந்தனை உலகளாவிய உயர்ந்த தன்மை உடையது. போற்றிப் புகழத் தெரியாதவர்கள் புறம்போகவேண்டும். வாழ்க்கை என்பது விளையாட்டல்ல ; அது ஒரு தத்துவம் அத்தத்துவம் அறிவியல் வழிப்பட்டது. அதன் வழி வாழ்க்கைக்கு விளக்கமும் வழிமுறைகளையும் சொன்னார்களே தவிரக் கதையளக்கவில்லை. வாழ்க்கை விளக்காகத் திகழும்  பெண்களைத் தமிழர்கள் ஓரிடத்தும் . போகப் பொருளாகச் சொல்லவில்லை. ஒருவன் ஒருத்தியோடு இறுதிவரை உறுதியோடு வாழும் இல்லறம் என்பது தமிழர்கண்ட அறநெறி மட்டுமல்ல இன்றைய நிலையில் அஃது அறிவியலுங்கூட.

ஆகவே, ஆதிகாவியங்களின் கதைகள் நமக்குத் தேவையில்லை. இராமயணக் கதைத் தலைவன் இராமன் தமிழ் மண்ணில் நிற்க முடியாது.அத்தலைவன் செய்த முதல் போரிலேயே ஒரு பெண்ணைக் கொன்றான். (தாடகை வதம்) பெண் வதை / பெண் கொலை, தமிழ்ச் சமுதாயம் ஏர்றுக்கொள்வதில்லை. சங்கச் சமுதாயத்தில்பெண் கொலை புரிந்த மன்னன் நன்னன்  இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழிக்கப்படுகின்றான்.

சத்தியம் தவறாத உத்தம புத்திரனாக இராமனை ஏற்றுக்கொள்ள முடியாது.  கைகேயி பெற்ற இரண்டு வரங்களை இராமன்  முறையாகப் பின்பற்றவில்லைஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள  நீ போய், தாங்கரும் தவம் மேற்கொள்ள வேண்டும் என்றாள் கைகேயி. அதன்படி இராமன் மட்டுமே காட்டிற்குப் போக வேண்டும் மனைவி சீதை, தம்பி இலக்குவன் இப்படிக் குடும்பத்தோடு போனது குற்றமல்லவா..? துறவுக்குத் துணை தேவையா..? சீதையை இழந்தவன் இராமன் ; பழி கைகேயி மேல் இது என்ன நீதி..?

…………………..தொடரும், …………………….

வெள்ளி, 27 ஜூன், 2025

தமிழமுது – 58. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :

 

தமிழமுது  58. ஆதிகாவியங்கள்ஒரு  பார்வை :

 தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் தெளிவாகப் பயின்ற பின்னர் வேற்று நாட்டுச் சரக்குகள்  இஙகு விலை போகுமா? இன்னது இனியது என்று நல்லதை மட்டும் நாட்டோர்க்குச் சொன்ன நம் தமிழர் அறிவுத்திறனை அறிய வேண்டாமா..? கட்டுக் கதைகளும் குட்டிச் சாத்தானின் குள்ள நரி வேலைகளும், ஆகாயம் அளந்த அடிகளும், ஆற்று மணலைக் கயிறாகத் திரித்த கதைகளும் தமிழ்நாட்டில் எப்படிச் செல்லுபடியாயிற்று..? செல்லரித்துப் போன சித்தாங்களுக்குப் புத்துயிர் ஊட்டியது யார்..? பாவ புண்ணிய சொர்க்க நகரக் கதைகள் காதில் புளித்துப்போய்விட்டன அவற்றில் இனிப்பு ரசம் ஏற்றிக் குடிக்கவைக்கத் துடிக்கும் ஆன்மிகவாதிகளின் அண்டாகாகச அபுல்காகச, சாதனைகள் எப்படி ஏற்றம் பெற்றன…?

“ சிந்திக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை “ என்றான் ஒரு மாமேதை, சிந்திக்கத் தெரியாத ஒரு மக்கட்கூட்டத்தைத் தோற்றுவித்ததே புராண இதிகாசங்கள் தானே…! இந்தப் பொழுதுபோக்குக் கதைகள் புனிதத்தன்மை பெற்றது எப்படி..?

தெளிந்த அறிவு, தூய சிந்தனை மனித சமுதாயம் மாண்புற எழுதிய  எழுத்துகள் தொல்தமிழ் மண்ணில் நம் முன்னோர்களால் விதைக்கப்பட்டவையே,..! வேற்று நாட்டுக் “களைகள்” செழித்திருந்த தமிழ்ப் பயிரை மேய்ந்து விட்டன;  காவலர்களோ களைகளைப் பயிராகக் கருதினரே..! விளைவு,  இன்றுள்ள பதர்களே. தமிழர்கள் தமிழர்களுக்காகச் சொன்ன உண்மைகள் சுவையாக இல்லை ; வடவர் ஊட்டிய சுவைகளில் உண்மை இல்லை. தமிழர் சொன்னவை கருத்துகள் ; வடவர் சொன்னவை  காதில் பூச் சுற்றிய கதைகள்.

 கதைகளைக் கேட்டார்கள் ; கண்மூடிப் பழக்கங்கள் எல்லாம்  விண்மூடி நிற்கின்றன ; விழித்தெழ முடியவில்லை.. வேத புராண  விளக்கங்கள் சங்க இலக்கியச் சுரங்கத்திற்குத் தாழிட்டன. இப்போது தமிழன் பூட்டிய இரும்புக்கூட்டுக்குள்ளே மாட்டிக்கொண்ட  சிறுத்தை, அது வெளியில் வராது.  அந்தச் சிறுத்தை எதையெல்லாம் சொல்லக்கூடாதோ  அதையெல்லாம் சொல்கிறது,    நேரம் சரியில்லை…கடவுள் இட்ட வழி….தலை விதி…. அந்தரத்தில் கடவுள் வந்து அற்புதங்கள் காட்டி அடைக்கலம் அளிப்பான் என்றெல்லாம் புலம்புகிறது. தமிழனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு ஆயின் கடவுளை அற்புதங்கள் காட்டும் வித்தைகாரனாக அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. அவன் அஞ்சி ஒழுகவே கடவுளைப் போற்றினான் பிறரை அச்சுறுத்த அல்ல. உலகையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்ற கொள்கை தமிழர்க்கு உடன்பாடன்று.

…………………..தொடரும்……………………………

 

வியாழன், 26 ஜூன், 2025

தமிழமுது – 57. ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை

 

தமிழமுது  57. ஆதிகாவியங்கள் – ஒரு  பார்வை :

தொன்மைக் காலத்தே தோன்றியதாகக்  கருதப்படுகின்ற இராமாயணமும் மகாபாரதமும் ஆதிகாவியங்கள் என்றழைக்கப்படுகின்றன.. இந்தியா என்று சொன்னவுடனே உலக மக்களுக்கு இவ்விரு காவியங்களின் நினைவு எழுவது இயலபே, அந்த அளவிற்கு இவை பரப்பட்டுள்ளன. இந்தியாவில் எந்த ஒரு மூலையிலும் இக்காவியங்களின் செல்வாக்கைக் காணலாம். இந்திய மொழிகள் பலவற்றிலும் ஏதாவது ஒரு கலை வடிவில் இக்காவியங்கள் பரவியுள்ளன. தமிழிலும் இவை கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு இக்காவியக் கதைகள் தேவையற்றனவே. தமிழர் பண்பாட்டிற்கும் வாழ்க்கை ஒழுக்கத்திற்கும் முற்றிலும் வேறான கதையமைப்பை / செய்திகளைக் கொண்டுள்ளன இக்காவியங்கள். தமிழனின் ஆர்வக்கோளாறு எல்லாம் இங்கே விலை போகிறது – கலையாகிறது. வேற்று மொழியின் நாட்டம் அம்மக்களின் பண்பாடு  வேடிக்கையாகப் பார்க்கப்பட்டுப் புனிதமான கதையெனத் திணிக்கப்படுதலால் அவை  வெகுவாக இலகுவாகக் கவர்ந்துவிடுகின்றன. தமிழனுக்காகத் தமிழன் என்ன சொல்லியிருக்கிறான் என்று தமிழர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.அதனால் வந்த விளைவுதான் ஆதிகாவியங்களுக்கு வந்த செல்வாக்கு. அறிவைப் போற்றிப் புகழ்ந்த தமிழினம் பகட்டைப் பற்றி நிற்கிறது.

காவித் தண்ணீரைக் குடித்துவிட்டுக் கங்கை நீரை புனிதம் என்று சொல்லும் அறிவை இவன் எங்கிருந்து பெற்றான்.? பொதியத் தென்றலை உயிர் மூச்சாகக்கொண்ட இவன் இமயமலச் சாரலில் இறைவன் இருக்கிறான் என்று எப்படி உணர்ந்தான்..? அறிவு மயக்கமல்ல ; அறியாமையின் மயக்கமே.  வடக்கிலிருந்துவரும் வாடையில் கையது கொண்டு மெய்யது போர்த்தி கூனிக்குறுகி வாய்பேசா மடந்தையானான். இந்நிலை இழிநிலை ; இந்நிலை இனியில்லை என்றுணர்வது எந்நாள்..?

…………………..தொடரும்……………………………

புதன், 25 ஜூன், 2025

தமிழமுது – 56. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

தமிழமுது  56. கடவுளைப்பற்றி….!

மதம்மார்க்சீய நோக்கு ;

மார்க்சின் வாழ்க்கை முழுவதிலும் அற்பவாதிகள் (மூன்றாம் நெப்போலியன் முதல் பத்திரிகை நிருபர்கள் வரை) அவதூறுகள், ஒடுக்கு முறைகள் பொய்களின் மூலமாக அவரைப் பழிவாங்குவதற்கு முயன்றார்கள்.  அவை பலனளிக்கவில்லை, அவருடைய புத்தகங்களை முற்றிலும் புறக்கணிப்பதன்மூலம் பழிவாங்கினார்கள் எனினும் எல்லாக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகும்  எதிலும் அற்பவாதிகளுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. “அற்பவாதிகளுக்கு கீழ்நிலையில் இருக்கவில்லை, எப்பொழுதுமே அவர்களுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தார். “அற்பவாதிகளுக்குக் கீழே இருப்பதைக்காட்டிலும் அற்பவாதிகளுக்கு எதிர்ப்பு என்பது நமக்கு நல்ல மூதுரையாகும் என்று மார்க்சு ஒரு கடிதத்தில் எழுதினார்.

அற்பவாதி  விஞ்ஞானத்துறையில்  உண்மையைத் தேடுவதற்கு மாறாக , உண்மையை மறைப்பதிலும் திரித்துக்கூறுவதிலும் அக்கறை காட்டுகிறார். தன்னுடைய  நேர்மையற்ற மழுப்பலின் மூலம் ஆளும் வர்க்கத்தினருடைய நிலையையும் அதன் மூலம் தன்னுடைய நிலையையும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடுகிறார். உண்மைப் போலியான பேச்சுக்குப் போலி விஞ்ஞான உடையை மாட்டுவதன் மூலம் அற்பவாதி  உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்.

பாதிரியாரான மால்தசைப் பற்றி மார்க்சு அளவிட முடியாத அருவருப்பை அடைகிறார். . ஏனென்றால் “இழிந்த கழிசடை: கொடுக்கப்பட்ட விஞ்ஞானக் கருதுகோளிலிருந்து ( அவற்றை அவர் தவறாமல் திருடுகிறார்.) ஆளும் வர்க்கங்கள் ‘விரும்பக்கூடிய’ முடிவுகளை வருவிக்கிறார், இந்த வர்க்கங்களை ‘மனதில் நினைத்துக்கொண்டு விஞ்ஞான முடிவுகளை தயாரிக்கிறார். ஆனால்  அவருடைய முடிவுகள் ‘ஒடுக்கப்பட்டிருக்கின்ற  வர்க்கங்களைப் பொறுத்தமட்டில் ‘இரக்கமற்றவையாகும்’. விஞ்ஞானத் துறையில் சிந்தனைக் கயமையை இப்படி ஆவேசமாக கண்டிக்கும்போது மார்க்சு  தன்னுடைய வெறுப்புகளை மட்டுமல்லாமல்  அனுதாபங்களையும் – உண்மையான விஞ்ஞானியைப்பற்றி தன்னலமற்ற முறையில் உண்மைக்குச் சேவை புரிவதைப் பற்றித் தன்னுடைய கருத்தை வெளிக்காட்டுகிறார்.

 மார்க்சை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி அறிவின் உருவகம் என்று கூறலாம். படைப்புச் சிந்தனையே அவருக்கு வாழ்கையில் மிகப்பெரிய ஆனந்தம்.

“நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும் நேசிக்கிறேன். அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது.  அவர்கள் உண்மையான ‘மனிதர்கள்’. நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது.” – வி.இ. லெனின்.

 

….. முற்றும்…… ஆதிகாவியங்கள் …..தொடரும்……

செவ்வாய், 24 ஜூன், 2025

தமிழமுது – 55. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

தமிழமுது  55. கடவுளைப்பற்றி….!

மதம்மார்க்சீய நோக்கு ;

 சமுக உறவுகளைப் பற்றிய விளக்கத்தை நோக்கிச் சென்ற மார்க்சின் சிந்தனை ”பொருளின் மொழியில்” பேசுவது, “ ”ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப” புரிந்து கொள்வது அவசியம். பொருள்கள் “ அவை மெய்யாகவே இருக்கின்ற முறையில்” …புரிந்து கொள்வதில்தான் உண்மை இருக்கிறது என்று மார்க்சு 1842 ஆம்

 வருடத்தின் தொடக்கத்தில் எழுதினார்.

இப்பொருள்முதல்வாத நிலையிலிருந்து மார்க்சு கெகலின் “ பல கடவுள்களைக் கொண்ட இறை ஞானத்தை “ விமர்சித்தார் ; அங்கே “ சிந்தனை அரசின் தன்மையுடன் பொருந்துவதில்லை, ஆனால் முன்னரே தயாரிக்கப்பட்ட சிந்தனா முறையுடன் பொருந்துகிறது.  பல்வேறு வடிவங்களைப் பெறுகின்ற அரசின் உள்ளடக்கத்தை அதன் மூலமாக “ அரசு என்ற கருத்தின் மூலமாக” விளக்கமளிக்க்க் கூடாது, ஆனால் குடும்பம் மற்றும் ‘சிவில் சமுகம்’ என்ற பொருளாயத உறவுகளின் துறையிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சு வலியுறுத்துகிறார்.

 “நரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல, விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும் ; இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள் ; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்.” என்றார் மார்க்சு.

சேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதென்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844 ஆம் வருட்த்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்சு மேற்கோள் காட்டுகிறார்.

இந்த மஞ்சள் அடிமை

மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும்

கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும்

குட்ட நோயைப் போற்றச் செய்யும்

திருடர்களுக்குப் பட்டம் வழங்கி

அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும்

பெருமையும் அருளும்.

சேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார். குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்துகிறார் என்று மார்க்சு கருதுகிறார்.

 பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள் -  எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர் நிலைகளாக மாற்றி அமைத்தல்.பொருள்களை சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.

பணம் ஒரு பொதுவான விபசாரி மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட “மனித குலத்தின் திறமை”.

…………………..தொடரும்……………………………

திங்கள், 23 ஜூன், 2025

தமிழமுது – 54. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

தமிழமுது  54. கடவுளைப்பற்றி….!

மதம்மார்க்சீய நோக்கு ;

”….. நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்த கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்.” –காரல் மார்க்சு.

 மார்க்சு 1842 ஆம் வருட்த்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய கட்டுரைகளில் ஒன்றில் நாத்திகவாதம், பொருள்முதல்வாதம் மனிதாபிமானத்தின் அகத்தூண்டுதலான அறிவிப்பாளரான லுட்விக் ஃபாயர்பாகை “நம் காலத்தின் பாவம் போக்குமிடம்”  சுதந்திரம் மற்றும் உண்மைக்குப் பாதியில் இருக்கின்ற “நெருப்பு ஆறு” என்று பிரகடனம் செய்தார்.

அவர், ஊகமுறையில் சிந்திக்கின்ற இறையியலாளர்களுக்கும்  கருத்துமுதல்வாதிகளுக்கும் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்.”விடயங்கள் யதார்தத்தில் மெய்யாக எப்படி இருக்கின்றன என்பதி நீங்கள் அறிய விரும்பினால் பழைய ஊக முறை தத்துவஞானத்தின் கருத்தமைப்புகள் மற்று தப்பு எண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்…”

 லூட்விக் ஃபயர்பாக் எழுதிய “கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம்” என்ற நூலை 1841ஆம் வருடத்தின் கோடைக்காலத்தின்போது படித்தார். அந்தச் சமயத்தில் இளம் கெகலியவாதிகள் மீது இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கல்சு அழகாக வருணித்துள்ளார்.

 இளம் கெகலியவாதிகள் சிக்கிக்கொண்டிருந்த எல்லா முரண்படுகளையும் இந்நூல் “ஒரேயொரு அடியில்”  ஒழித்து, பொருள்முதல் வாதத்தின் வெற்றியை நேரடியாகப் பிரகடனம் செய்தது. “எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால்  சுதந்திரமாக இருக்கிறது. இயற்கை. அதன் அடித்தளத்திலேதான் மனித இனத்தவராகிய நாம் –நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருள்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம்..

 இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்ட்தாய் எதுவும் இல்லை. நம்முடைய சமய வழிப்பட்ட கற்பனைகள் படைத்துள்ள. கடவுள்கள் எனப்பட்டவர்கள் நம் சாராம்சத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். மந்திரம் என்பது உடைத்தெறியப்பட்டது ; அமைப்புமுறை தகர்க்கப்பட்டுவிட்டது ; முரண்பாடு என்பது நம் கற்பனையில் மட்டுமே இருப்பது என்று காட்டப்பட்டுக் கலைக்கப்பட்டது

அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும்..

…………………..தொடரும்……………………………

சனி, 21 ஜூன், 2025

தமிழமுது – 53. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

தமிழமுது  53. கடவுளைப்பற்றி….!

மதம்மார்க்சீய நோக்கு ;

மிதவாத முதலாளி வர்க்கத்தின் தலைவர்களிலொருவரான அர்னால்டு ரூகே  செர்மன் வார இதழ் ஒன்றை நடத்திவந்தார் அவர் 1841, செப்டம்பரில்  பின்வருமாறு எழுதினார் ” இப்பொழுது எனக்கு மோசமான நேரம் ஏனென்றால் பு. பெளவர், காரல் மார்க்சு கிறிஸ்டியன்சென், ஃபயர்பாக் ஆகியோர் அஞ்சாநெஞ்சத்தைப் பிரகடனம் செய்யப் போகிறார்கள் அல்லது அவர்கள் ஏற்கெனவே பிரகடனம் செய்துவிட்டார்கள், நாத்திகவாதம் மற்றும் ஆன்மாவின் அழிவு என்ற கொடியை ஏற்றிவிட்டார்கள்   ;  கடவுள், மதம் அமரத்துவம் ஆகியவை கீழே இறக்கப்படும், மக்களே கடவுள்கள்  என்று பிரகடனம் செய்யப்படும் நாத்திகவாத இதழ்  வெளிவரப்போகிறது.  போலிசார்  இதை இப்படியே அனுமதித்தால் கொந்தலிப்பு ஏற்படும். ஆனால் அதை தவிர்க்க முடியாது.

 இந்தத் திட்டம் நிறைவேறவில்லை, பானில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்ற மார்க்சின் நம்பிக்கைகளும்  உடைந்தன. ஏனென்றால் பிற்போக்குவாத விமர்சன தாக்கத்தின் விளைவாக ப் புருனோ பெளவர் தன்னுடைய ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கே மார்க்சுக்கு  வேலை கிடைப்பது கடினம் என்பது தெளிவாயிற்று.

கெகலின் கருத்துப்படி அரசின் உருவகமே அரசர். கெகல்  அவரை உண்மையான ‘கடவுள் மனிதனாக’ அரசு என்ற கருத்தின் உண்மையான உருவமாகக் காட்டுவதற்கு முயற்சி செய்கிறார். எல்லாக் குடிமக்களின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, ‘பொது நன்மையை’  நிறைவேற்றுவதற்காக அரசு இருக்கிறது என்பார் கெகல்.”

அதிகாரத்தின் முழுச் சக்தியையும்   ஒரு நபரிடம் குவிக்கப்படுகின்ற பொழுது மற்ற எல்லா நபர்களுமே சக்தியில்லாதவர்களாகி விடுகிறார்கள். ஒரு நபர் ‘கடவுள் மனிதன்’மென்ற நிலைக்கு உயர்த்தப்பட்டால் மொத்த சமுகமுமே மனிதத் தன்மைக்கு முந்திய விலங்குக்கு உரிய நிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும்.  

மதத்தில் கடவுளின் சர்வ வல்லமை மனிதனைக் ‘கடவுளின் அடிமையாக’ மாற்றுவதைப் போன்றதே இதுவும்.

 அரசர் சர்வ வல்லமை உடையவரா அல்லது மக்கள் சர்வ வல்லமை உடையவர்களா..? இதுதான் பிரச்சினை.

 

…………………..தொடரும்……………………………

வெள்ளி, 20 ஜூன், 2025

தமிழமுது – 52. கடவுளைப்பற்றி….! மதம் – மார்க்சீய நோக்கு ;

 

     தமிழமுது  52. கடவுளைப்பற்றி….!

மதம் – மார்க்சீய நோக்கு :

மத  ஆய்வில் மார்க்சு 1843இல்  பெளவரைக்காட்டிலும் வெகு தொலைவு சென்றுவிட்டார்.”ஒருவர்  மேக மண்டலங்களுக்கு இடையில் சஞ்சரித்தால் வானத்தின் பந்தலைப் பிடித்துப் பூமிக்குக்குக் கொண்டுவர முடியாது. அதற்கு அவர்  பூமியில் நிற்க வேண்டும். மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன. மதஞ்சார்ந்த அவல நிலை சமுக உறவுகளின் மெய்யான அவல நிலையின் வெளியீடுதான், அவை அதை வளர்க்கின்றன.

மதம் என்பது, தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே. மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆள்கின்ற மனித தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே அது.

மனிதன் தன்னுடைய விடுதலைக்காகவும் இயற்கையை எதிர்த்தும் நடத்துகின்ற போராட்டத்தில் பலவீனத்தையும் ஆதரவற்ற நிலையையும் உணர்கிறான் ; எனவே கடவுளுக்கு வலிமையையும் எல்லாம் வல்ல தன்மையையும் தருகிறான். மனிதன் பூமியில் தன்னுடைய வாழ்க்கையின் அவல நிலைக்குப் பரிகாரத்தைக் கடவுளிடம் தேடுகிறான். அதனால்தான் அக்காலத்திய மதம் “இதயமற்ற உலகத்தின் இதயமாகவும் ; உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும்” இருப்பது மட்டுமின்றி, இந்த உலகத்துக்கும் அதன் நிலைமைகளுக்கும் எதிர்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு மெளனமானதே அது அடிமையின் “ ஒடுக்கப்பட்ட பிறவியின் பெருமூச்சே “   மதத்துக்கு எதிரான தீவிரப் போராட்டம் “ அந்த மதத்தை ஆன்மிக வாசனையாக்க் கொண்ட உலகத்துக்கு” எதிரான போராட்டத்தை முன்னூக்கிவிடுகிறது.

மக்கள் தங்களைப் பற்றியே ‘பயம் அடையும்படி’ கற்பித்தால்தான் அவர்களுக்குத் ’துணிவு’ ஏற்படும்.

…………………..தொடரும்……………………………

வியாழன், 19 ஜூன், 2025

தமிழமுது – 51. கடவுளைப்பற்றி….!தத்துவஞானம்:

 

தமிழமுது  51. கடவுளைப்பற்றி….!

தத்துவஞானம்:  

பண்டைய காலந்தொட்டு இன்றுவரை கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடவுளுக்கான கதைகளும்  புனைந்துரையாகவே இருப்பதால் மக்களின் அறியாமையால் அவை அவர்களின் ஆழ்மனத்துள் குடியேறிவிடுகின்றன. குழந்தை பிறந்தது முதல் கடவுளைப்பற்றிய நம்பிக்கைகள் தாயால் ஊட்டப்பெற்று வருகின்றன.  கிரேக்கத் தத்துவஞானிகளின் கருத்துகளை , செர்மானிய தத்துவஞானிகள்  விரித்துரைத்துள்ளனர்.

”செர்மனியக் கருத்துமுதல் வாதத்தின் மூலச் சிறப்பான தத்துவ ஞானம் இளைஞரான மார்க்சுக்கு ஏன் நிறைவைத் தரவில்லை  என்பதை 1837இல்  எழுதிய ஒரு கவிதையில் காணலாம்.

காண்டையும் ஃபிக்டேயையும் பற்றி அவர் எழுதியிருப்பது கெகலுக்கும் பொருந்தும் என்பது உண்மையே, முன்பு கடவுள்கள் பூமிக்கு மேலே வசித்தார்கள் என்றால் இப்பொழுது அதன் மையமானார்கள். அஃதாவது ‘கடவுள்கள்’ தூக்கி எறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு ‘தன்னிலைப் பொருளிலிருந்து’ நமக்குரிய பொருளாக’ மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் யதார்த்தம் தெய்விகக் கருத்து குடிகொண்டிருக்கும் ஆலயம் என்று அறிவிக்கப்படுகிறது.”

 கடவுளை ஆராயக்கூடாது என்றால் அவர் அந்த அளவுக்கு ‘வ்ல்லமையானவரா..?  என்று சோதித்துப் பார்க்க விரும்பினார் மார்க்சு. ” இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்று’நிரூபணங்களில்’ ஒன்று கூறுகிறது.  ஆனால் இயற்கை அமைப்பின் ‘பகுத்தறிவு தன்மை’ கடவுள் மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது. உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை என்பவருக்குக் கடவுள் இருக்கிறார்; அல்லது பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.’ இந்த முடிவு அக்காலத்துக்கு முற்றிலும் துணிவானதாகும்.

மனித சுய உணர்வே “உயர்ந்த கடவுள்” அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்று மார்க்சு உறுதியாகப் பிரகனம் செய்தார். “ உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்” என்று புரோமித்தியசு துணிச்சலாக்க் கூறியதை, மார்க்சு, “ வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும்  எதிரானதாக திருப்பினார்,” இந்தத் துணிவான கருத்து மத எதிர்ப்பு மட்டுமல்லாமல் அரசியல் தன்மையும் கொண்டிருந்தது.                    

…………………..தொடரும்……………………………

புதன், 18 ஜூன், 2025

தமிழமுது – 50. கடவுளைப்பற்றி….!

 தமிழமுது –  50. கடவுளைப்பற்றி….!

கடவுள் அருள்பாலித்தல்:

கடவுளிடம் வைக்கும் மக்களின் வேண்டுதல்கள் வினோதமானவை மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும், கந்துவட்டிக்காரன் வேண்டுதல் , நகௌவணிகன் விரமாலை அம்மனுக்கு அணிவித்துக் ”காபவுனில் மாபவுன் அடிக்கும்தொழிலை விருத்தி செய்ய வேண்டும் இவை போன்று மேலும் பல உள. கடவுள் என்னென்ன அவதாரம் எடுத்து  வேண்டுதல்களை நிறைவேற்றுவாரோ..?

பாவம் செய்தவன் மன்னிப்புக்கேட்பான் கடவுளும் மன்னிப்பாராம் என்ன கொடுமை இது..? அவன் செய்த பாவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடவுளின் அருள் என்னவோ..?

கொலைத்தொழில் செய்பவனும் கொள்ளை அடிப்பவனும் கடவுளின் நண்பர்கள் போல ஒட்டி உறவாடுவார்கள் அவர்களுக்கும் கடவுள் அருள் புரிவாராம்..!

 ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாம்” வரதட்சினைக்கொடுமை யார் கொடுத்த வரம்..?

“நல்லவர்களைத்தான் கடவுள் சோதிப்பார்..” மனிதன் நல்லவனாக இருப்பதே அரிது… அதற்குத் தண்டனை வேறா..? நல்லவனுக்குத் துன்பம் வந்து கடவுளைத் தூற்றி விடுவானோ என்ற அச்சத்தில் கடவுளைக் காக்க இப்படிச் சொல்கிறார்கள் நல்லவர்களைச் சோதிப்பதற்கு கடவுள் என்ன பைத்தியக் காரனா..?

கடவுள் கருணை உள்ளவந்தான் ஆனால் இளிச்சவாயன் அல்ல. நீ கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு. கடவுளிடம் என்னென கேட்பது என்ற அறிவே இல்லையா..? பசிக்கு உணவு கேட்பது , நோய்க்கு மருந்து கேட்பது, தேர்வுக்கு மதிப்பெண்  கேட்பது, மனைவிக்குக் குழந்தை கேட்பது,எல்லாம் இழந்து வெறும் ஆளாய்க் கேட்பாரற்றுக் கிடக்கும்போது இறைவா என்னை எடுத்துக்கொள் என்பது  இவையெல்லாம் கடவுளின் வேலைகளா..? பின் ஏன் உனக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், மண்டையில் மூளை எதற்கு.? கூத்தாடிகள் போல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆட வேண்டியது இறுதியில் ஆண்டவனிடம் வந்து அழுவதால் ஆகும் பயன் என்ன.?

 

கோயில்களில் கடவுள் அனிந்திருக்கும் நகை உண்மையானதா அல்லது கவரிங் நகைகளா../ கூட இருந்து கொள்ளையடிப்பவன் கடவுள் உண்டு என்று நினைத்தானா?  கடவுளே கருவறையில் இருப்பது உண்மையான உருவமா? கடத்தப்பட்ட கடவுள்கள் கடல் கடந்து சென்றனரே எப்படி..?

 

 கடவுள் என்பவர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ; மக்களை எப்படிக் காப்பாற்றுவார். மதங்களால் கட்டமைக்கப்பட கடவுள்கள் மன்னர்களால் போற்றப்பட்டு மாட மாளிகை கூட கோபுரங்களில் குடியேற்றப்பட்டனர்.

 உலகம் இயற்கையாக இயங்கிக்கொண்டே இருக்கிறது அது எந்தக் கடவுளுக்கும் கட்டுப்பட்டதன்று. மனிதனின் தோற்றமும் முடிவும் இயற்கையின் ஆணைப்படியே எனினும் கடவுளைக் கட்டிக் காக்கும்  மதவாதிகளின் நோக்கம் மட்டுமே நிறைவேறிக்கொண்டிருக்கின்றது.  மதவாதிகளின் கடவுளைப்பற்றிய தத்துவங்கள் அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தியவையா..?

…………………..தொடரும்……………………………

செவ்வாய், 17 ஜூன், 2025

தமிழமுது – 49. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  49. கடவுளைப்பற்றி….!

கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி :

கடவுளைப்பற்றிய தத்துவ ஞானஆய்வுகள் குறித்து அறிவது அவசியமாகின்றது

என்று ஒருவன் கடவுள் உண்டு என்று சொன்னானோ….அன்றே அவன் அருகில் நின்ற ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டான் போலும்.

இன்றுவரை கடவுளை எதிரும் புதிருமாக  நின்று பேசி, உலாவரும் கருத்துகள் குறைந்தபாடில்லை. கடவுள் வழிபாடு நாளுக்குநாள் பல்கிப்பெருகி வருவதைக் காணலாம். மக்களின் வேண்டுதல்கள் கடவுளிடம் சென்று சேர்ந்ததா இல்லையா ? யாருக்கும் தெரியாது.  

மதவேறுபாடின்றி கடவுளைப்பற்றி ஒரு வலுவான கட்டமைப்பை நாள்தோறும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றனர். ஆடம்பரம் ஆரவாரம் ஊர்வலம் நேர்த்திக்கடன் புனரமைத்தல் முதலிய சடங்குகள் ஆண்டுமுழுவதும் மக்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருகின்றன. உடல் நோய்கள், உளநோய்கள் ஒவ்வொன்றூக்கும் ஒவ்வொரு கடவுள்.

உண்மையில் எதிர்வினை என்பது – கடவுள் உண்டா இல்லையா..? இப்போது இக்கேள்வி பிரச்சினை இல்லை ; கடவுள் நல்லவர், வல்லவர், கருணையுள்ளவர், வேண்டியவற்றை வேண்டியவாறே கொடுப்பவர், உலகையும் உயிர்களையும் படைத்தவர் என்றெல்லாம் கதைக்கும் நீங்கள் யார் என்பதுதான் பிரச்சினையே..?

கடவுளை நன்கு அறிந்தவர் போலவும், உடன் இருந்து உறவாடியர் போலவும் கட்டுக்கடங்காத, கற்பனைக்கெட்டாத கதைகளைக் கூறி இடைத் தரகர் போலச் செயல்படும் இவர்களின் நோக்கம் மிகவும் கீழ்த்தரமானது என்பதை யாவரும் அறிவர். வழிபாட்டிற்குரிய வழிமுறைகளை இவர்கள் விருப்பம்போல் உருவாக்கி வைத்துக்கொண்டு அவற்றைப் புனிதம் என்றும் கற்பித்துத் சுகபோக வாழ்க்கையில்  வாழ்ந்துவரும் இவர்கள் கடவுளுக்குத் தோழர்களா அல்லது ஏமாற்றித் திரிபவர்களா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே கடவுள் மறுப்பாளர்களின் கோரிக்கையாகும்.

 மக்களுக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் அவை அனைத்திற்கும் கடவுளே கைகொடுப்பார் என்ற நம்பிக்கையில் தன்னம்பிக்கையற்றுக் கோயில்களுக்குப் படையெடுக்கும் மக்களைச் சுரண்டுவதே கோயில் ஊழியர்களின்  மந்திரமும் தந்திரமுமாகும்.

கடவுள் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.

கடவுள் பிறந்த கதைகள், உலகத்தையும் உயிர்களையும் படைத்த கதைகள், அற்புதங்கள் நிகழ்த்திய கதைகள், அருள்பாலித்த கதைகள்,  கடவுளின் குழந்தை குட்டிகள், மாமன் மச்சான் வகையறாக்கள், பங்காளிச் சண்டைகள், இன்னபிறவும் கடவுளின் ஆற்றல்களுக்குச் சான்றுகளாகப் பறைசாற்றப்படுகின்றன.

கடவுள் அருள்பாலித்தல் :

…………………..தொடரும்……………………………

 

ஞாயிறு, 15 ஜூன், 2025

தமிழமுது – 48. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  48. கடவுளைப்பற்றி….!

 

மதத்தின் மறுபக்கம் :

மதம் கடவுளின் அற்புதசக்திகளை பொய்யாகவோ புனைந்திரையாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக மாற்றம் பெற்றது.மதம் மக்களை அடிமையாக்கும் அளவிற்கு உயர்ந்த பொழுது அதன் போக்குகளைக் கட்டுப்படுத்த பலர் கிளர்ந்தெழுந்தனர் ; அவர்கள் பகுத்தறிவாளர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஓர் இயக்கமாகப் பரிணமித்து உலகெங்கும் ஆங்காங்கே தோன்றினர். கடவுள் இல்லையென்று கூறி மக்களின் அறியாமையை அகற்றப் போராடினர். ஆயினும்  மதம் ஆளும் அதிகாரம் உடையோர் கையில் வலிமைபெற்று வாழ்ந்து வரலாயிற்று. மக்களின் வாழ்க்கையில் கடவுள் வழிபாடு பிரிக்க இயலாத ஒன்றாயிற்று. தொல்பழங்காலம் தொட்டு இன்றுவரை கடவுள் உண்டு என்று சொல்வோர் ; கடவுள் இல்லையென்று சொல்வோரை இழித்துரைக்கின்றனர்,

தமிழ்நாட்டில், தொல்பழங்காலத்தில் முருகனும், தாய் தெய்வமாக கொற்றவையும் வழிபாட்டிற்குரியவராவர். பின்னர் நிலத்திற்கேற்ப வேறு பல தெய்வங்களும் தோன்றின. அக்காலத்தில் சிறந்திருந்த ‘நடுகல் வழிபாடு’ பல்வேறு கடவுள்களாகச் செதுக்கப்பட்டு மன்னர்கள் கட்டுவித்த கோயில்களில் நிறுவப்பட்டன. சமணம், பெளத்தம், ஆசீவகம், வைதீகம் எனும் மதங்கள் , குருமார்கள்  வழிபாட்டு நெறிகளை வகுத்து மக்களிடையே பரப்பினர்.

கடவுள் வழிபாடு -  எதிர் வினை:

கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக வழிபடுவதில் மனிதனுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று “எல்லாமே கடவுள் செயல்தான்” என்று சொல்லிவிட்டால் ஒரு மனிதன் சக மனிதனிடம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டிய  அவசியமில்லையல்லவா..?

…………………………………………..தொடரும்………………………………………..

சனி, 14 ஜூன், 2025

தமிழமுது – 47. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  47. கடவுளைப்பற்றி….!

கடவுளை மனித சமுதாயத்தின் முன் நிறுத்த எத்தனை கதைகள், எத்தனை சடங்குகள், எத்தனை பிரிவினை வாதங்கள் அத்தனையும் மனித சமுதாயத்தை அலைக்கழித்துக்

கொண்டிருக்கின்றன. மக்களைக் கடவுள் பக்கம் இழுக்க மாபெரும் முயற்சிகள், அறியாமை என்ற ஒன்றின் அடிப்படையிலேயே ‘ஆன்மா’ அலைமோதி கடவுளைச் சீவிக்கச் செய்கிறது. நாட்டில் எத்தனை கடவுள் ; கடவுள்களைக் கட்டமைக்க மதங்கள். மதங்கள் பொதுவாக மனிதநேயத்தைப் பலியிடுகின்றன.

மதங்கள் படுத்தும்பாடு:

கடவுள் மோசடியில் ஈடுபட்டதாகப் பல கதைகள் கூறினாலும் அக்கதைகள்  ‘நன்மைக்கே’ என்றுதான் முடிவுறும். ‘ கடவுள் நல்லவர்களைத்தான் சோதிப்பான் ; ஆனால் கைவிடமாட்டான்’ எனும் வழக்கு மொழியைக் கேட்கிறோமே..! கடவுள் படைக்கிறார் என்றால் சிலர் ‘ ஆண்டவன்   என்னை மோசம் பண்ணிட்டான்’, ’கடவுளே உனக்குக் கண் இல்லையா… காது கேட்கவில்லையா, நீ கல்லா…கடவுளா..? என்றெல்லம் ஏன் புலம்புகிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார், அவர் நம்பியவர்களை மோசம் செய்யமாட்டார் என்று கடந்தகால கதைகளைக் கூறுவார்கள். உண்மையில் பல மோசடிக்கும்பலுக்குக் கடவுள் துணையாக இருந்துவருகிறார் என்பதை நம் நடைமுறை வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கலாம்.

உலகம் உருண்டை எனும் அறிவியல் உண்மையை மதவாதிகள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கொள்கையை ஏற்க முடியாது என்றதும் கடவுள் பெயரால்தான் அரங்கேறின. நாளும் கோளும் இரவும் பகலும் இயற்கை நிகழ்வு என்பதை இறைவனின் சேவகர்கள் மறுத்தனர். சாந்திரனுக்கு மனிதன் செல்லாதவரையில் பாம்பு விழுங்கிய சந்திரனுக்குச் சமுதாயத்தில் இருந்த மதிப்பே வேறு ; இறைவன் இன்றி உயிர்கள் இருக்கின்றனவோ இல்லையோ.. மழையின்றி மண்ணில் இல்லை என்று மெய்யை உலகம் உணர்ந்து தெரிந்துகொண்டது.  எல்லா உயிர்களுக்கும் படியளக்கும் இறைவன் சோமாலிய நாட்டு மக்களுக்கு ஏன் அளக்கவில்லை..?

கடவுள்களைப் பூட்டி வைத்தும் காக்க முடியவில்லையே..!  உலக் உயிர்களைக் காப்பாற்றும் கடவுள் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை காவல் துறையினரே காப்பாற்றவேண்டியுள்ளது.

…………………………………………..தொடரும்………………………………………..

வெள்ளி, 13 ஜூன், 2025

தமிழமுது – 46. கடவுளைப்பற்றி….!

 

தமிழமுது  46. கடவுளைப்பற்றி….!

கடவுளைப்பற்றி இதுவரை வெளிவராத சில உண்மைகள்  இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடவுள் உண்டா…இல்லையா..? என்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.. நம்முடைய கவலையெல்லாம்  கடவுள் இருப்பதாகக் கூறும் மனிதர்களைப்பற்றித்தான். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உறைகின்றார்; எனவே எல்லோருக்கும் கடவுளைத் தெரியும். கடவுள் இருக்கிறார் என்று ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் வல்ல இறைவன் தன் இருப்பை உயிர்களுக்கு உணர்த்தும் சக்தியுடையவன்தானே..? அந்தப்பணியைக் கடவுளின் ‘பங்காளியாக’ இன்னொரு மனிதன்  தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அறியாமையால் கண்ணுக்குத் தெரியாத ஒன்றினைக் கடவுளாக வழிபடுவதில் மனிதனுக்கு ஆறுதல் கிடைக்கிறது அப்படியொரு நம்பிக்கை.. அஃது அவரவர் விருப்பம்.ஆனால் கடவுளை எப்படித் தொழவேண்டும்  எந்த மொழியில் வேண்டுதல் வைக்க வேண்டும்..?  கடவுள் நீதிபதியாக இருக்கிறார் அவரிடம் நம் வேண்டுதலை எடுத்துரைக்க வழக்குரைஞர் ஒருவர் வருகிறார்.  பணமும் பொருள்களும் பெற்றுக்கொள்கிறார் ; அவர் என்ன சொன்னார் , எந்தமொழியில் சொன்னார்..? ”கடவுள் மொழியில்” சொன்னாராம்.  அந்த மொழி தோன்றியபின்தான் கடவுள் தோன்றினாரா..?

 

…………………………………………..தொடரும்………………………………………..

ஞாயிறு, 1 ஜூன், 2025

தமிழமுது – 45 - அறம் x தர்மம்.

 

தமிழமுது –  45 -  அறம் தர்மம்.

தொடரும்…………………………………..

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.

 

 கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.

 

Dr. R.KUMARAN- +91 94433  40426.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB0001854

MICR CODE : 613015003

 


தமிழமுது -44 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு – ஊழ்வினை – உறுதிப் பொருள்.

 

தமிழமுது -44 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு ஊழ்வினைஉறுதிப் பொருள்.

 

ஊழ்வினை வழிபாட்டோடு தொடர்புடையது. தெய்வத்தால் விதிக்கப்பட்டது என்ற எண்ணம் தொன்மஒயானது.

 

நீர்வழிப்படூஉம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் …. _புறநானூறு 192.

 

ஊழ்வினை பால், வரை, தெய்வம் எனவும் ஊழின் ஆற்றல் விளக்கப்படுகிறது. சிலப்பதிகாரம்ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்…” என்கிறது.

 

உண்மையில் ஊழ் வேறு வினை வேறு, வினைக் கோட்பாடு தமிழருடையது. வினை,  செயலின் பயனே;  பிற்காலத்தில் பிறவிப் பயனைக் குறிப்பாதாகக் கொள்ளப்பட்டது.

 

வினை வேறு விதி வேறு. ஒரு செயலின் முடிவு அதனைச் செய்தானின் வேறாக வெளியேயிருந்து தீர்ப்புரைக்கும் ஒருவனால் திணிக்கப்படுவதன்று.  உண்மையில் செயலின் விளைவென்பது அச்செயலின் ஒரு பகுதியே !  வினைவிதிக்கு நேர் மாறானது.

 

வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.

தினை விதைத்தவன் தினையை அறுப்பான்.”

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் பழமொழிகளைக் காண்க.

 

உறுதிப் பொருள்:

இதுவும் வழிபாட்டோடு தொடர்புடையதுதான். மனித வாழ்க்கையில் பெறவேண்டியது மூன்றா நான்கா….? (அறம்,பொருள், இன்பம், / வீடு )

தமிழர் இறந்தபின் எய்தும் நிலை குறித்துக் கவலை கொள்ளவில்லை. வாழும் வாழ்க்கை, பயனுடையதாக (தனக்கும் பிறர்க்கும்) இருக்கவேண்டும் என்றே கருதினர். வீடு – (பேறு ) தமிழர் நெறியன்று.

 

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

   அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல..” புறநானூறு . 31.

 வீடு ஒழிந்த மூன்றையே வாழ்வியல் நெறி எனக் கொண்டனர்.

 

 அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள் ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும்  உறுதி பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில், திருவள்ளுவர்  திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா..? ’குன்றக்கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன…?

 

(இக் கட்டுரையாக்கத்திற்குத் துணைபுரிந்த சான்றோர் பெருமக்களின் திருவடிகளைத் தொழுது நிறைவு செய்கிறேன்.)

 

தமிழமுது – தொடரும்…………………………………..