ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-67- ஓர் அறிவியல் அறிஞர்.
எழுத்துக்களது பிறப்பு :
ஆய்வுரை. பேராசிரியர் க. முருகையன்.
“உந்தியின் முறையான தொழிலினால் உயிர்த்தல் நடபெறுகின்றது என்பதும் உயிர்த்தல் தொழிலின் போது வெளிச்செல்லும் காற்றின் (முந்துவளி) உதவியால் தமிழ் மொழியின் ஒலிகள் அனைத்தும் (எல்லா எழுத்தும்) பிறக்கின்றன என்பதும் தொல்காப்பியர் கருத்து.
வெளியேறும் நுரையீரல் மூச்சுக்காற்றே தமிழ் மொழியின் ஒலிகள் அனைத்தும் பிறத்தற்குக் காரணமாக உள்ளது என்பதைத் தொல்காப்பியர் “ நெஞ்சில்......நிலைஇ முந்துவளி தோன்றி .....” (நெஞ்சில் நிலைகொண்டு பெருகி முந்திக்கொண்டு வெளிப்படுகின்றது) என்று கூறுகின்றார்.
அவர் கூறும் தலை, மிடறு,நெஞ்சு என்ற கலைச் சொற்களை தலையறை (தொண்டைக்கு மேற்பட்ட பகுதி அதாவது மேற்தொண்டை, வாய் , மூக்கறைகள்) தொண்டையறை நெஞ்சறை (நுரையீரல்களும் மூச்சுக் குழலும் ) ஆகியவற்றைக் குறிப்பன என்று கொண்டு அவற்றை முறை மாற்றி நெஞ்சு, மிடறு, தலை, என்று வரிசைப் படுத்திக்க்கொள்ள வேண்டும். தலையில் உள்ள மூக்கறையைத் தனியே பிரித்துப் பல், இதழ், நா, அண்ணம் என்பனவற்றோடு சேர்த்து அவற்றையும் மேலே கூறிய நெஞ்சு, மிடறு, தலை என்பனவற்றையும் சேர்த்து ஒலி உறுப்புகளைக் கணக்கிடவேண்டும், காற்றறைகளையும் ஒலி எழுப்பிகளையும் தனித் தனியே பிரித்த தொல்காப்பியர் மூக்கறையை விதந்துகூறி ஒலி எழுப்பிகளுடன் சேர்த்து ஒலி உறுப்புக்கள் எட்டு (எண்முறை நிலை) என்று வகைப்படுத்தியுள்ளார். தனி ஒலிகளை உண்டாக்கத் தேவைப்படாததும் ஒலி எழுப்பிகள் அற்றதுமான மூக்கறையைப் பல், இதழ், நா, அண்ணம் போன்ற பிற காற்றறையின் உதவி கொண்டே ஒலிகளை உண்டாக்க வல்லது என்னும் அடிப்படையில் அதனைப் பல், இதழ், நா, அண்ணம் என்ற ஒலி எழுப்பிகளுடன் ஒன்றாக வைத்து (பல்லும் இதழும், நா, அண்ணம், மூக்கும்.) எண்ணியுள்ளார். காற்றறைகள் மூன்று, ஒலி எழுப்பிகள் நான்கு . ஒலியூக்கியாகிய மூக்கறை ஒன்று என்று ஒலி உறுப்புக்களை எட்டாக வகுத்துள்ளதன் நுண்மை அறியத்தக்கது.....
................தொடரும்....................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக