வெள்ளி, 26 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 775

திருக்குறள்- சிறப்புரை : 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.--- ௭௭௫
(வேல் கொண்டு எறிய ; அழித்து இமைப்பின்; ஒட்டு அன்றோ ; வன்கணவர்க்கு.)
பகைவர் வேல் கொண்டு எறியும் போது, பகைவரைச் சினந்து நோக்கியகண் மூடி இமைக்குமாயின் அதுவும் அச்சமற்ற வீரர்க்கும் தோல்வியன்றோ?
“ யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை.” –பெரும்பாணாற்றுப்படை.
யானை தாக்க வரினும் தன் மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும் பெரிய இடி இடித்தாலும் கருவுற்ற பெண் கூட இவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டாள்; அத்தகைய இயல்புடையது குறிஞ்சி நில மறக்குடியினர் வாழ்க்கை.


1 கருத்து: