தமிழமுது –216– தொல்தமிழர் இசை மரபு:76.
8. புறநானூறு -- படுமலைப் பாலைப் பண் நிறைந்த யாழ். “
புறநானூறு என்றாலே வெற்றி முரசாகிய போர்ப்பறை ஒலிதான் கேட்கும், ஈண்டு யாழின் இசை ஒலிக்கிறதே..!
”கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
பொன்வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பழங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத்தழீஇப்
புகழ்சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தனென் எந்தை யானே......” ஏணிச்சேரி முடமோசியார்,135: 1 – 10.
ஆய் அண்டிரனே ..! யான் உன்னைக்காண வந்தது யானையைப் பரிசிலாகப் பெறுவதற்கன்று ; குதிரையைப் பெறுவதற்கன்று ; தேரைப் பெறுவதர்காக அன்று ; உன் புகழை எண்ணி உன்னைக் காண வந்தேன் என்றும் புலவர் இப்பாடலைத் தன் கூற்றாக அமைக்காது பாணன் கூற்றாக அமைத்துள்ளார்.
யாவரும் புகழ்ந்து பேசும்படியான நாட்டை உடையவனே..! புலிகள் திரியும் உச்சிகளையுடைய நெடிய மலை ; அதில் ஏறுவதற்கரிய சிறிய பிளவுகளில் அமைந்த சிறிய வழிகள் ; அவ்வழிகளில் ஏறுவதால் வருந்தி உடல் வளைவையுடைய மெல்ல நடக்கும் நடையையும் வளையல் அணிந்த கைகளையும் கொண்ட விறலி என் பின்னால் வர, பொன்னைக் கம்பியாகச் செய்தது போன்ற முறுக்கு அடங்கிய நரம்பைக் கொண்ட வரிப் பொருளுடன் பயிலும் பாட்டு நிலந்தோறும் மாறி மாறி ஒலிக்க, படுமலைப் பாலை என்ற பண் நிறைந்த பயன் பொருந்திய என் யாழைத் தளர்ந்த மனத்துடன் ஒரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு, புகழ்வதற்கு அமைந்த சிறந்த உன் நல்ல புகழை எண்ணி உன்னைக் கண்டு மகிழவே வந்தேன், வேள் ஆய் அண்டிரன் வாரி வழங்கும் வள்ளல் என்று போற்றிப் புகழ்கின்றார்.
சீறியாழ் : பாணன் கையிலிருப்பது சீறியாழ் ; வரிப் பொருளுடைய பாடல் நிலத்துக்கு ஏற்ப மாறி மாறி ஒலிப்பது ; படுமலைப் பாலை என்ற பண் ஈண்டு நிலை பெற்றது. குறிஞ்சி முதலிய நிலங்கள் ஐந்து அவற்றுக்குத் தனித்தனியே யாழும் பண்ணும் உண்டு. பாடுபவர் அந்தந்த நிலத்துக்கு ஏற்ற பண்ணைப் பாடுவர், அதனால் ‘புலம் பெயர்ந்திசைத்தல்’ என்றார். பாலைத் திணைக்குரிய 12 பண்களுள் படுமலைப் பாலைப்பண் என்பதும் ஒன்று.
.........................தொடரும்...................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக