தமிழமுது –288– தொல்தமிழர் இசை மரபு:148 - நீட்சியும் - வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:
ஆழ்வார்கள் அருளிய, தெய்விகப் பண்கள் ;
ஆழவார்கள் தமிழை இறைவன் இயபை இசைக்கக் கிடைத்த தீங்குழலாகக் கண்டறிந்தார்கள். அவர்கள் குரல் அந்தக் குழலில் புகுந்து வெளிவந்தபோது தெய்விகப் பண்களாக மலர்ந்து உயிர்களின் செவிகளில் தேன் பாய்ச்சி, இதயத்தை இதமாக வருடி, இளப்பாற்றி, மதுவுண்ட வண்டாக இறைவன் மலரடிகளில் மயங்கிக் கிடக்கச் செய்தது. குரல் இனிமையால் குழலும் குலழிசையால் குரலும் பெருமை பெற்றன. தமிழால் சமயம் நிலை பெற, சமயத்தால் தமிழ் நிறம் பெற்றது.
ஆழ்வார்களின் பண்சுமந்த பாடல்களால் திருநாட்டுக்குப் பயணிக்கும் இணை வழியாகவும் எளிய வழியாகவும் தமிழ் உயர்வடைந்தது. வடமொழியும் தமிழும் ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் என்பதைத் தெளிவாக்கினார்களதனால் இருமறை முடிவு (உபய வேதாந்தம்) என்னும் கோட்பாடு மலர்ந்த்து. மறைவல்லார் ஆழ்வார்களின் இறையனுபவம் பொங்கி வழியும் பாடல்களால் மறைகளில் விளங்காத பகுதிகளுக்கு விளக்கம் கண்டனர். ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்னும் நம்மாழ்வார் திருவாய்மொழியைக் கொண்டு முரண்பட்ட மறைமொழிகள் ஒதுங்கவிட்டு விசிட்டாத்வைத கோட்பாட்டை விளக்கினார் ராமானுஜர். \
“செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்;
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.” (அதிகாரசங்கிரகம்,1.) என்று இவ்வுண்மையினை உரக்க ஒலித்தார் வேதாந்ததேசிகர். வடகலையும் ( வேதமும்) தென்கலையும் (தமிழும்) ஒருதரத்தன என்னும் உண்மை உலகுக்கு உணர்த்தப்பட்டது.ஆழ்வார்களின் ஈரத்தமிழை திராவிட வேதம் என்று கொண்டாடத் தலைப்பட்டார்கள்.
பன்னிரு ஆழ்வார்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு குலத்தில் தோன்றி வைணவத்தை வளர்த்தார்கள். அவர்களுள் மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் இறையடியாரான நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டு அவரைப் பாடிப் பரவியவர். அவரது “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் நூல் நம்மாழ்வாரைக் கொண்டாடுவது. ஆழ்வார்கள் தம் பாடல்களில் இறை, உயிர், தடை, ஆறு (இறைவனை அடையும் வழி) பேறு ஆகிய ஐந்து பொருள்களைக் குறித்துப் பாடியுள்ளார்கள்.
ஆழ்வார்களின் பாடல்களில் சுவை மிகுந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் இராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடியுள்ளதே ஆகும். .......................................தொடரும்.............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக