வியாழன், 11 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -18. மொழி பல பெருகிய பட்டினம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -18. மொழி பல பெருகிய பட்டினம். 



பன்மொழியறிவைப் பெறுவதற்கு இளையோர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கியும் வாழ்வாதரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ஆர்வமுடையோர்க்குச் சென்னை மையமாகத் திகழ்கிறது. தமிழ், இந்தி, சமற்கிருதம் முதலிய இந்திய மொழிகளைக் கற்பதற்கும்,சப்பானிசு, கொரியன், செர்மன், இசுபானிசு முதலிய மொழிகளைக் கற்பதற்கும் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். மொழி ஆர்வலர்கள் இன்று நேற்றல்ல  பழங்காலந்தொட்டே வணிக வளங்களைப் பெறுவதற்கும் விற்பதற்கும்  தமிழ் நாட்டுப் பண்டைய துறைமுகங்களில்  கூடினர்.

 

பல் ஆயமொடு பதி பழகி

வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்

சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு

மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம் ………. : கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை: 213 – 218.

குற்றமற்ற பிறநாடுகளில், அறிவு சான்ற சுற்றத்தையுடைய, விழாக்களை நிகழ்த்திய பழைய ஊரில் உள்ள பலரும் புகார் நகரில் சென்று குடியேறினர் போலப் பற்பல குடிமக்களுள் உயர்ந்தவர்களாய்த் தத்தம் நிலங்களைக் கை விட்டு, நீங்கிப் புகார் நகரை அடைந்த  பல மொழிகளில் திறமை சான்ற மக்கள், இவ்வூரில் உள்ள நன்மக்களுடன் கூடிப்பழகி இனிதே வாழ்கின்றனர். இத்தகைய குறைவுபடாத தலைமையை உடையது காவிரிப்பூம்பட்டினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக