சனி, 19 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 58 . கொங்குவேளிர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 58 . கொங்குவேளிர்.

நீரங்காடி

           அஃதாவது, நீராடற்குரிய பொருள்கள் விற்கும் கடைத்தெரு, அப்பொருள்கள் நெட்டியால் இயற்றிய படைக்கலன்களும் பொன்மீன், பொன்னண்டு, மாலை, மணப்பொருள்கள் முதலியவை….

 

 

 

ஊர் அங்காடி உய்த்து வைத்தது போல்

நீர் அங்காடி நெறிப்பட நாட்டி

கூல வாழ்நர் கோல் முறை குத்திய

நீல கண்ட நிரைத்த மருங்கின்

 

உண்ண மதுவும் உரைக்கும் நானமும்        60

சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும்

அணியும் கலனும் ஆடையும் நிறைந்த

கண் அகன் கடைகள் ஒள்_நுதல் ஆயத்து

கன்னி மாண்டுழி துன்னுபு நசைஇய

தூதுவர் போல மூசின குழீஇ… 65. -  பெருங்கதை :  1. 38: 56 -65.

 

 

 

 

 

(பொழிப்புரை) எல்லையற்ற மக்கட் கூட்டம் வந்து பரவியிருக்கின்ற பொது நிலத்தினும், யாற்றினது இரு கரைகளிடத்துள்ள அசோகமரப் பொழிலினும், காய்த்து அக்காய் தாங்க மாட்டாமல் வளைகின்ற கழுத்தினையுடைய இளங்கமுகந் தோட்டங்களினும், மயிலும் குயிலும் குரங்கும் கிளியும் யாண்டுந் திரியா நின்ற மரச் செறிவுகளிடத்தும் பல்வேறு மலர்ப் பொழில்களிடத்தும், மரங்களிலே தூங்கவிட்ட ஊசலின் கண்ணதாகவும் மர நிழலிலே கூடியுள்ள மக்கள் கூடத்தின் கண்ணதாகவும் வணிகர்கள் தாம் நகரத்தே புறத்தேயும் பேரழகுகொண்டு அகத்தேயும் நிறமிக்க பல்வேறு ……”பொருள்களையுடைய அங்காடிகளைப் பரப்பி வைத்தது போலவே நீரணி அங்காடிகளை முறைப்படப் பரப்பி என்க.

 

ஊன்று கோல்களை முறைப்பட நட்ட நீல நிறமுடைய கண்டத்திரையை நிரல்படக் கட்டி வளைத்த இடங்களிலே, நீராடுவோர் பருகுதற்குரிய கள் வகைகளும், பூசிக்கொள்கின்ற நறுமணச் சுண்ண வகைகளும், சாந்த வகைகளும், வண்டு முரலும் மலர்மாலை வகைகளும், அணிகல வகைகளும், நீராடற்குரிய ஆடை வகைகளும், நிறைந்த அங்காடிகள், ஒள்ளிய நுதலையுடைய தோழியரையுடைய அரச கன்னிகை ஒருத்தி மணப் பருவத்தாலே மாட்சிமையுற்ற செவ்வியிலே பிறநாட்டு மன்னர்கள் அவளை மணஞ்செய விரும்பி விடுத்த தூதர் வந்து குழுமுதல்போன்று குழுமிக் கிடந்தும்,……..”

                              இறைவன கட்டளையாலே வாய் வாளாவிருக்கும்படி தடைசெய்யப்பட்ட நூல்வழியையே மேற்கொண்ட சான்றோர் நல்லவையின்கண் கல்லாத மாக்களின் பேச்சொலியை விரும்புவோர் யாரும் இலராதல் போன்று, இவ்விலைப் பொருளை விரும்பிக் கொள்ளுவோர் ஆங்கு யாருமில்லாமையாலே பயன்படாதனவாகிக்கிடப்ப என்க.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக