தமிழமுது –289– தொல்தமிழர் இசை மரபு:149 - நீட்சியும் - வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:
ஆழ்வார்கள் அருளிய, தெய்விகப் பண்கள் ;
ஆழ்வார்களின் பாடல்களில் சுவை மிகுந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் இராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகளை எடுத்துப் பாடியுள்ளதே ஆகும்.
இராமனுக்குக் கோசலை பாடுவதாக அமைந்த தாலாட்டையும் இராமனைப்பிரிந்த தசரதன் பட்ட துயரத்தையும் தனித்தனி திருமொழிகளாக இயற்றியுள்ளார். பெரியாழ்வார் இராமன் சொன்ன அடையாளங்களை அனுமன் சொல்வது போல் “அல்லியம் பூ மலர்க் கோதாய்” என்னும் ஒரு திருமொழியைப் புனைந்துள்ளார். பெரியாழ்வார் திருமொழி கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தையே நம் கண் முன்னே நிறுத்துகிறது. முதன்முதலில் பாகவத நிகழ்ச்சிகளைத் தமிழில் பரக்கப் பாடியவர் பெரியாழ்வார் எனலாம்.
உரைவேந்தர் பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வார்களின் பாசுரத்தொடர்களைக் கொண்டே பாலகாண்டம் தொடங்கி யுத்தகாண்டம் முடிய இராமாயணம் முழுவதையும் ஒரே நீண்ட தொடரால் ஆகிய படைப்பு அதுவே எனலாம்.அன்மைக் காலத்தில் நெல்லைப்பகுதியைச் சேர்ந்த வேம்பு அய்யர் என்பவர் ஆழ்வார்களின் பாசுரத் தொடர்களைக்கொண்டே பாசுரப்படி பாரதத்தைப் பாடியுள்ளார். இவையெல்லாம் ஆழ்வார்கள் பாடல்கள் இம்மூன்று நூல்களின் செய்திகளைத் தம்மகத்தே கொண்டு விள்ங்குகின்றன.என்பதற்குச் சான்றுகளாகும்.
‘ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம்
கீண்டதும் முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
சொல்லிப்பாடி வண்பொன்னிப்பேர்
ஆறுபோல் வரும் கண்ண நீர்கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறுசெய் தொண்டர் சேவடிச் செழுஞ்
சேறென் சென்னிக் கணிவனே” --பெருமாள் திருமொழி 2 : 3.
என்னும் பாட்டில் கிருஷ்ணாவதாரம், வராகாவதாரம் ராமாவதாரம், வாமனாவதாரம் என்னும் நான்கு அவதாரங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருத்தல் காணலாம். இலக்கியத் திறனாய்வாளர்கள் பாட்டினச் சொல்லோவியம் என்பர்.
ஆழ்வார்களின் பாடல்களில் சில சொல்லோவியமாக அமையாமல் தொடர் ஓவியங்களாகத் திகழ்கின்றன. ராம பக்தராகிய குலசேகரப்பெருமாள் கண்ணன் வெண்ணெய் திருடி யசோதையிடம் சிக்கித் தவித்த நிகழ்ச்சியை ஒரு பாட்டில் தொடர் ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். யசோதை வெளியே சென்றிருக்கிறாள் கண்ணன் உறியில் இருந்த வெண்ணெயை எடுத்து அவசரமாக வாரி வாரி உண்கிறான், அப்பொழுது அவள் அங்கு வந்துவிடுகிறாள். அவன் அவளிடம் சிக்கிக் கொள்கிறான். வெண்ணெய் அளைந்த சிதறிய தாமரைக்கைகள், வெண் தயிர் தோய்ந்த சிவந்த வாய் இவற்றோடு நிற்கிறான், அவள் சிறிய தாம்பினை எடுத்து அவனை அடிப்பதற்காக ஒங்குகிறாள், அவன் அச்சத்தோடு பார்க்கிறான், அழகிய சிவந்த உதடுகளை நெளிக்கிறான், அழுகிறான். இனி எடுக்கமாட்டேன் என்று சொல்வதுபோலத் தொழுகிறான், இவை அவளுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை வழங்குகின்றன. கண்ணனின் வெண்ணெய் உண்ட கோலம், முகத்தில் எழும் உணர்ச்சிகள் அவன் பார்வை அழுகை, தொழுகை இப்படிப் பலவற்றைக் காட்டும் அற்புத இலக்கியம் இப்பாடல்
“ முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழிகொள் தாம்பு கொண்டடிப்பதற்கெள்கும்
நிலையும் வெண்டயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்குந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவைகண்ட யசோதை
தொல்லை இன்பத்தின் இறுதி கண்டாளே.”---பெருமாள் திருமொழி,7: 8.
இதைப்போன்று கண்ணன் குழலூதும் காட்சியைப் பெரியாழ்வார் “சிறுவிரல்கள் தடவிப் பரிமாற..” என்னும் பாட்டில் அரிய சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். ஆழ்வார்கள் பாடல்களில் இப்படிப் பல உயிரோவியங்களைக் காணலாம். (முனைவர் தெ.ஞானசுந்தரம்.)
..............................................தொடரும்............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக