செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 51 : 15. பசலை

தொல்தமிழர் அறிவியல் – 51 : 15. பசலை


வெறுப்பு

கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே
---கபிலர், குறுந். 187 : 4, 5

 மணம் முடிக்க மனமில்லாத தலைவன், கல்லைவிட வலிய நெஞ்சுரம் உடையவன் எனக் கருதாது, என் மனம் அவனையே நினைத்து வருந்துகின்றதேதலைவி.

தூக்கமின்மை

கனையிருங் கங்குலும் கண்படை இலனே
அதனான் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என் அவலம் உறு நெஞ்சே
--வெள்ளிவீதியார், நற். 348 : 8 – 10

தலைவனிடம் கொண்ட மிகுந்த அன்பினாலே ஆற்றாமையால் வருந்துகிறேன், தூக்கம் இல்லை, இவ்வுலகம் என்னோடு போரிடுகிறதோ அல்லது இவ்வுலகத்தோடு என் அவல நெஞ்சம் போரிட எழுகின்றதோ..? – தலைவி.

கனவு

கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும்பெறல் உயிரே
--நல்லந்துவனார், கலித். 128 : 24 – 26

தோழி! யான் காணும்படி என் கனவிலே வந்த தலைவன், நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி, அவன் வரவை எதிர்நோக்கி என் அரிய உயிரும் நீங்காது நின்றது, என்றனள் தலைவி…….

தனிமைத் துயர்

குப்பைக் கோழித் தனிப் போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
                                   --குப்பைக் கோழியார், குறுந். 305 : 6 – 8

                             தலைவனைக் காணாது வருந்தும் நெஞ்சேகுப்பைக் கோழிகள் தாமே தனிமையில் நிகழ்த்தும் போர், விலக்குவாரின்றி  அதுவாக முடியுங் காலத்தில் முடியும், அதுபோல நான் உற்ற நோயும் நீக்குவார் ஒருவருமின்றி வருத்துகிறதே  என்று தன் மனத்துள் புலம்பினள்.

அச்சம்
சுடுவாள் போல் நோக்கும் மன்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே
……………….. நற்.175 : 8,9
               தோழி ! சுடுபால் மேல் ஆடை படர்வது போல்பசலை படர்ந்த என் மேனியைச் சுடுவது போல் நோக்கினளே அன்னை - தலைவி

பசலை

பாசி அற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே
--பரணர், குறுந். 399: 3 – 5
                 பாசி போலும் பசலை, தலைவன் தொடுந்தோறும் நீங்கி, அவன் விட்டு விலகுந்தோறும் உடலெங்கும் பரவி நிற்கிறதே,

 ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆயிழை மேனிப் பசப்பு
--கபிலர், கலித். 42 : 31, 32

                        தோழி ! தலைவனைக் கண்டதும் என் மேனியில் படர்ந்திருந்த பசலை, ஞாயிற்றின் முன் இருள் போல் மறைந்ததேஎன்றாள் தலைவி.

                   பசலை, பாசிபோலும் பாலாடை போலும் பொன்னிறம் போலும் என்றெல்லாம் மேனியில் படரும் பசலையின் நிறம் குறிக்கப்படுகிறது.

                           பசலை, தோன்றி மறையும் தோல் நோயாகவும் சுட்டப்படுகின்றது.

                      பசலை, மன அழுத்தத்தால், கவலையால், தன்னையே வருத்திக்கொள்ளும் பெருந்துயரால், அன்புடன் அணைத்துத் தீர்ப்பாரின்றித் தோன்றுவதாகச் சுட்டியுள்ளமை ஆராய்தற்குரியது.-----தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக