வியாழன், 10 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்- 10.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் -  களப்பிரர்- 10.

முனைவர் இரெ. குமரன்

 

                  தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204 ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திரு ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும் .

 

குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்

     குழகரே ஒழுகுநீர்க் கங்கை

அழகரே யாகில் அவரிடங் களந்தை

     அணிதிகழ் அதித்தேச் சரமே.” எனவும்

 

                      திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் திருவாய் மலர்ந்தருளியகருவூர்த்தேவர்இத்தலத்தில் அருளிச் செய்த திருவிசைப்பா பத்தும் களந்தை எனும் ஊர்ப்பெயர் கொண்டு விளங்குதலைக் காணலாம்.

 

                       திருக்களந்தை ஆதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும் இறைவரின் திருப்பெயர் அழகர் ( அழகியநாதசுவாமி ) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள்இராசேந்திர சோழவளநாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன.ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன. இறைவற்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது.”

 

                        அந்தணீர்க் களந்தை அலைபுணற் களந்தைஎனத் திருவிசைப்பாவில் வருவதால், இக்களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப்படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடையதால் நீர் வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக்களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்.

 

பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.(A.R.E. 1927 Nos.164 – 177)

 

                           அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண். 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர்     ஆதிபுராணீஸ்வரம் உடைய நாயனார் என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டுவந்துவைக்கப்பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை – ‘Stray Stone – எனக்குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று.”…………………..தொடரும்…………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக