செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-22.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-22.

முனைவர் இரெ. குமரன்

விடை தேடும் வினாக்கள்

களப்பிரர் எவ்வினத்தவர் ?

அச்சுதக் களப்பாளன் யார்?

 கூற்றுவ நாயனார் யார்?

களந்தைக்கோன்  யார்?

களந்தை தான் களப்பாளா?

களப்பாளர்தான் களப்பிரரா?

உண்மையில் விடைகள் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன. அண்மையில்  நறுவழிக்களப்பாள் வயல் வெளியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தடயம் என்றே கருதவேண்டியுள்ளது.

 

 

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர், என்று முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.

 

                                        களப்பாளில் பிறந்து வளர்ந்தவன் ஆகையால், அவ்வூரைப்பற்றிச் சில சொல்ல விழைகிறேன்.

 

                    கூழாங்கல் கற்கண்டானாலும் மூங்கில் கரும்பானாலும் மணல் சர்க்கரையானாலும் கழுதை உழவுக்கு வந்தாலும்  களப்பாளன் மட்டும் எதுக்கும் ஒத்துவர மாட்டான் என்று ஊரார் கூறுவதைக் கேட்டுள்ளேன்.

 

                            களப்பாள் ஒரு பெரிய ஆய்வுக்குரிய வரலாற்றோடு தொடர்புடைய ஓர் ஊர். சேர சோழ பாண்டியர்களை வென்று அவ்வரசர்கள் இருந்த இடம் தெரியாமல், வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்து, ஆண்ட களப்பிரர் இவ்வூரோடு தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

 

                       இடிந்து கிடக்கும் கைலாசநாதர் கோயிலும் சிதறிக் கிடக்கும் லிங்கத்தடி திடலும் அரண்மனைக்குளமும், ராஜபாளையத்தெருவும் அரண்மனைக் குளத்து அடியில் மறைந்து கிடக்கும் சுரங்கப் பாதையும் அண்மையில் கண்டுபிடித்த முதுமக்கள் தாழியும் இராசாதித்தன் சிவன் கோயிலும்  அதில் கேட்பாறற்றுக் காணாமல் ஒழிந்த கல்வெட்டுகளும் இன்னும் பல சான்றுகளும் மன்னர்களோடு தொடர்புடைய ஊராகவே இவ்வூர் காணப்படுகிறது.  

                    இடிந்து அழிந்த கைலாசநாதர் கோயிலில் இருந்த தில்லை நடராசர் சிலைக்கு ஒப்பான அழகிய நடராசர் சிலை உள்ளிட்ட தெய்வச் சிலைகள்  ஆதித்தேச்சுரம் சிவன் கோயிலுக்குள் வைக்கபட்டன.

 

தமிழகத்தை மட்டுமின்றிக் கடல் கடந்த நாடுகள் சிலவற்றையும் கட்டி ஆண்ட களப்பிரர் இவ்வூரினரா அல்லது வேற்றுப் புலத்தவரா..?

…………………………………..தொடரும்………………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக