வெள்ளி, 15 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்

        கொண்டைமேல் பூத் தெரிய முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

        துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

        வெற்றுயுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே….!

ஒரு வீட்டில் ஒற்றுமையாய் வாழும் நல்ல குடும்பத்தை இல்லாததைச் சொல்லி அவர்களுக்குள்ளே வேற்றுமையை வளர்த்துப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம்.

 

மகளிர் பூச் சூடும் முறையறிந்து பூச் சூட வேண்டும் ;  எவரும் ஏறிட்டுப் பார்த்து ஏளனம் செய்யாதவாறு கொண்டைக்கு மேல் பூத் தெரியும்படி முடிய வேண்டாம்.

 ஊரில் ஒழுக்கமுள்ளவனாக வாழ்வதே பெற்றோர்க்கு நாம்  பெருமைப்படுத்த செய்ய வேண்டிய செயலாகும் . அதனை விடுத்துப் தேவையில்லாமல் பிறர்மீது பழியைச் சுமத்தி அல்லல் பட்டு அலைய வேண்டாம்.

 

கேடுகெட்ட குணமுடைய மூர்க்கர்களோடு  நட்புடன் பழக வேண்டாம்.

 

மக்கள் உண்மையான பக்தியுடன் வணங்கும்  பெருமை மிகுந்த தெய்வத்தை இகழ்ந்து பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

வாழ்வாங்கு வாழ்ந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியோர்களை வெறுத்துப் பேச வேண்டாம்.

 

மாறுபாடு உடைய சூழலில் பிறந்து சிறந்து விளங்கும் பெண்ணாகிய வள்ளியின் கணவனாகிய முருகனைப் போற்றி வாழ்த்தி வணங்குவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக