.தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் - 3.
திருவிழா:
முன்னுரை:-தொடர்ச்சி.......
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். இனி,
தெய்வங்கட்குச் செய்யப்படும் இத் திருவிழாக்கள் தாமும், குறிஞ்சி, முல்லை முதலிய வெவ்வேறு நிலத்து மக்களால் வேறு வேறு பெயரினையுடைய கடவுளரைக்குறித்து வெவ்வேறு முறைமையாகச் செய்யப்படுவனாகும்.
இறையனாரகப்பொருளுக்கு நக்கீரர் இயற்றிய உரையில் ‘மதுரை ஆவணியவிட்டம், உறையூர்ப் பங்குனி உத்திரம், கருவூர் உள்ளி விழா” என மூன்று பெரிய திருவிழாக்கள் கூறப்பெற்றுள்ளன. ஆனால் இவை எவ்வாறு நடந்தன என்று நன்கு அறிந்து கொள்வதற்கு ஆதரவுகள் கிடைக்கவில்லை.
கார்த்திகைத் திங்களிலே திருக்கார்த்திகை நாளில் இரவிலே தெருக்களில் விளக்குகளை நிரை நிரையாக வைத்து, மாலைகளால் அணிவித்துப் பலரும் கூடி மகிழ்வுடன் விழாவயர்வர் என்ற செய்தி அகநானூற்றிலுள்ள நக்கீரர் பாட்டு ஒன்றினால் வெளியாகிறது இவ்வாற்றால் ஏறக்குறைய இரண்டாயிரம ஆண்டுகளின் முன்பே தமிழகத்தில் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்று வந்தன என்பது நாம் பெரிதும் பாராட்டுதற்கும் மகிழ்ச்சி யடைதற்கும் உரிய செய்தியன்றோ..?
காவிரிப்பூம்பட்டினத்தில் பல சமயவாதிகளும் சோதிடரும் அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுக்களும், எண்பேராயத்தாரும் பிறரும் ஒருங்கு கூடியிருந்து பண்டு அகத்திய முனிவர் கட்டளையால் தூங்கையில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழ மன்னனால் இந்திரனது உடன்பாடு பெற்றுப் புகார் நகரிலே இருபத்தெட்டு நாள் நடத்தியதும் பின்னர் ஆண்டுதோறும் அங்ஙனமே நடத்தப்பெற்று வருகிறது.
இந்திர விழா நடக்கும் காலத்தில் எல்லாத்தேவரும் இங்கே எழுந்தருள்வர்.வீதிகள் அலங்காரம் செய்யப்படும் வீதிகளிலும் மன்றங்களிலும் பழமணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள், தெய்வங்கள் உறையும் கோயில்களில் அவ்வத் தெய்வங்கட்கு ஏற்ப வெவ்வேறாகச் செய்யப்படும் கடன்களை அறிந்தோர் செய்யுங்கள் ; அறிஞர்கள் அறவுரை நிகழ்த்துங்கள் யாவரும் யாரிடத்தும் பகையும் வெகுளியும் கொள்ளாதிருங்கள் என்று கூறி முரசறைந்து ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க” என்று வாழ்த்தி இவ்விழாவினைத் தெரிவித்தனன்.
இதிலிருந்து அவ்விழாவின் நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாகக் காணப்படுகின்றது பாருங்கள். ஓர் பெரிய திருவிழாச் செய்வதென்றால் நகரில் உள்ள பலவகை மாந்தர்களும் ஒருங்கு கூடியிருந்து ஆராய்ந்து முடிவு செய்வதென்ற வழக்கம் அக்காலத்து மக்களின் ஒற்றுமையையும் ஆளுந்திறத்தையும் நன்கு விளக்குகின்றதன்றோ..?
.............................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக