வியாழன், 2 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 16-20

புறநானூறு – அரிய செய்தி - 16
                                                                  கங்கை யாறு
வளமழை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
                                            பெருஞ்சித்திரனார், புறநா.161 : 5 - 7
மழை நீங்கிய கோடைக் காலத்தில் மன்பதை எல்லாம் சென்று நீருண்ணற்குக் காரணமான கங்கை பெரு வெள்ளத்தைப் போல ...
கங்கையை ஏன் பாடினார் ?

புறநானூறு – அரிய செய்தி - 17
                                                             காவல் மரம்
.................... நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
                                           பெருஞ்சித்திரனார், புறநா.162 : 4 – 6
நின்னுடைய ஊரில் காவல் மரம் வருந்த, யாம் கொண்டுவந்து கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்.
 இறைவன் – அரசன், அரண்மனை – கோயில், காவல் மரம் – தலவிருட்சம் ?
 மேலும் காண்க : புறநா. 23, 36, 57

புறநானூறு – அரிய செய்தி - 18
                                                              நல்ல நாள் பார்த்தல்
நல்நாள் வருபதம் நோக்கி குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை
முந்து விலையாணர் நாள் புதிது உண்மார்
                                    கதம்பிள்ளைச்சாத்தனார்,புறநா.168 : 5 - 7        
 விதைத்தற்கும் விளைந்த தானியத்தை உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது பண்டைத் தமிழரின் வழக்கமாகும். இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் சிறு தினை முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் என்றும் கூறினார்.
மேலும் காண்க : புல்லும் பொழுதும் பழித்தல் அல்லதை, புறநா.204 : 10

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
ஆறு செல் மாக்கள் புள்கொள பொருந்தும்
                                 அள்ளூர் நன்முல்லையார், குறுந். 140 : 1, 2     
கருக்கரிவாள் போன்ற முதுகை உடைய முதிர்ந்த ஆண் ஓணான், வழியில் செல்லும் மக்கள் நிமித்தம் பார்க்க உதவும்.
முதன்மை நோக்கு :- சமூகவியல் அணுகுமுறை

புறநானூறு – அரிய செய்தி - 19
                                             விலங்குகளின் விருப்ப உணவு
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரலுடை முன்றில் அம்குடிச் சீறூர்
                 உறையூர் மருத்துவன் தாமோதரனார், புறநா. 170 : 1, 2
 மரையா, காட்டுப் பசு ; ஒருவகை விலங்கு என்பர் உ. வே. சாமிநாதையர். இது நெல்லிக்காயைத் தின்னுமிடத்து அதன் கொட்டயை வெளியே துப்பி விடுதலால், மரையா பிரித்துண்ட நெல்லிப் பரல் என்றார். மனைகளில் நெல்லி மரங்கள் வேலியாக வைக்கப்பட்டுள்ளன,
 மேலும் காண்க : குறுந்.235, 317. அகநா. 69, 399. கலித்.6
புறநா. 257 பாலை நில உணவு
யானை – யா மரத்துப் பட்டை – நீர் வேட்கைக்கு
கரடிக்குட்டிகள் – இரவு உணவு – புற்றின்கண் அகழும் – வெண்ணிறப் பாம்புகள் – புற்றாஞ் சோறு
ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை

புறநானூறு – அரிய செய்தி - 20
                                                      வெண்கோடு பயந்த முத்து
சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து
                       உறையூர் மருத்துவன் தாமோதரனார், புறநா. 170 : 10, 11
யானையின் கோடு மிகவும் முதிர்ந்த வழி அதன் நுனியில் முத்துண்டாமென்ப, முத்துடை மருப்பின் மழகளிறு பிளிறபதிற். 32 , என்று சான்றோர் கூறுதல் காண்க. மேலும் காண்க : புறநா.161. குறிஞ்சிப். 35, 36. மலைபடு.  517, 518.
யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல் போல மறைத்த வலிமையையுடையாய் என்பதும், காய்ந்தெறி கடுங்கல் தன்னைக் கவுட் கொண்ட களிறு போல  ( சீவக. 2910 ) என்பதும் எறிந்த கல்லைக் கவுளில் அடக்குவது யாது குறித்தோ?
யானயின் கொம்பில் முத்துப் பிறப்பது, கற்பனைச் செய்தியேயாகும் .பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், ப.281.
 முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை
 ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை


1 கருத்து: