வியாழன், 9 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 16-20

குறுந்தொகை - அரிய செய்தி - 16
                                                                குறியிடம் கூறல்
ஊர்க்கும் அணித்தே பொய்கை .....
................................................
ஆண்டும் வருகுவள் பெரும்பேதையே
                                     மாதீர்த்தன், குறுந். 113
ஊருக்கு அருகே பொய்கை – சிறிய காட்டாறு – ஆற்றங்கரை – சோலை – நாரை மட்டுமே வரும் -  செங்கழுநீர் மலர் பறிக்கச் செல்கின்றோம்  - அங்கேயும் தலைவி வருவாள்.
காதல் – களவுக் காதல் – மறைவிடம் உணர்த்தல் – கருத்துப் பரிமாற்ற முறை – ஆய்க.
மேலும் காண்க : அகநா.11, 310. குறுந். 25.
குறுந்தொகை - அரிய செய்தி - 17
                                                          களவில் தலைவன்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
.................................................
வாரார் தோழி நம் காதலோரே
                     நன்னாகையார், குறுந். 118,
 மாலைக் காலத்தில்
விருந்தினர் பலரும் புகுகின்ற வீட்டின் வாயிலை அடைக்கக் கருதி, வினவுகின்றவர் வீட்டினுள் புகுவதற்கு உரியீராய் வெளியே சென்று வந்தவர்கள் உள்ளீரா என்று அழைப்பவும் நம்பால் காதலையுடைய தலைவர் வாரார் ஆயினர்,(தலைவியின் தனிமைத் துயர் )  என்பது பாடற் கருத்து.
தலைவன், விருந்தினன் போல் பலருடன் தலைவியின் இல்லத்தில் மாலையில் புகுந்து உணவு உண்டு தலைவியோடு உடனிருத்தல் உண்டு என்பது   இப்பாடலால் புலப்படும், என்பது உரை
பாடல் -  நெய்தல் திணை – இப்பண்பாடு குறித்து ஆய்க.

குறுந்தொகை - அரிய செய்தி - 18

128,129,
                                                 யானைக்கு -  மதம்
.......................................... யானை
குளகு மென்று ஆள்மதம் போல
                                                   மிளைப் பெருங்கந்தன், குறுந்.
அடங்கிக் கிடக்கும் யானையின் மதம் அதிமதுரத் தழையை மென்று தின்னத் தின்ன பெருகுவதாயிற்று.
விலங்குநூல் வழி யானைக்கு மதம் பிடித்தல் – தழை, மதம் நீக்க – வாழைத்தண்டு இஃது உண்மையா என்று ஆய்க.
மேலும் காண்க : சீவக.750
குறுந்தொகை - அரிய செய்தி - 19
                                                     ஆண் ஓந்தி – நிமித்தம்
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள்கொளப் பொருந்தும்
                அள்ளூர் நன்முல்லையார், குறுந். 140 : 1, 2
காதலர், கூரிய அரிவாளைப் போன்ற முதுகினை உடைய முதிய ஆண் ஓந்தியானது, வழிச் செல்லும் மாந்தர் நிமித்தமாகக் கொள்ளும்படி வலமாகச் செல்லும். பாலைவழியில் செல்பவர்க்கு ஓந்தியைத் தவிர நிமித்தம் காண்டற்கு வேறு எப்பொருளும்  இல்லை என்பதாம்.
இன்று இவ்வழக்கம் எங்கேணும் உள்ளதா என்று ஆய்க.  (நாட்டுப்புறவியல்)       
மேலும் காண்க : நற்.186

குறுந்தொகை - அரிய செய்தி - 20
                                                     மழைக் காலத் தொடக்கம்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின்
                              இளங்கீரந்தையார், குறுந். 148 : 2 – 4
சிறு சதங்கையில் அமைந்துள்ள காசுகளைப் போலக் கொன்றை மரம் மொட்டுக்களை ஈன்றது கொன்றையின் முகைகளும் குருந்தின் (காட்டு எலுமிச்சை மரம்) முகைகளும் பெருந்தண்மையால் மழை பெய்யும் காலம் என்று அறிந்தும் மழை பெய்யாமல் மலராமல் திகைத்தன.இத்தகைய காலத்தைக் கார் காலம் அன்று என்று நீ கூறுவாயாகில்... (முல்லைத் திணை )
பண்டைய நாளில் மழைக் காலம் அறியப்பட்ட முறை  - பருவங்கள் மட்டும் அறியப்பட்டனவா – திங்கள் கணித முறை இருந்ததா திணை (நில) வழிஆய்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக