திங்கள், 14 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 27

பரிபாடல் – அரிய செய்தி - 27
காலக் கூறுகள்
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
 கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
நல்லெழுதியார்.பரிபா. 13 : 47- 48
பெருமானே நீ ! தோன்றியதும் இனித் தோன்றுவதும் இப்பொழுது தோன்றியதுமாகிய அம் மூன்று காலக் கூறுபாடுகளையும் கடந்து – அக்காலக் கூறுகள் பொருந்தப் பெற்ற திருவடிகளை உடையை.
 முடிந்தது – இறந்தக்காலம் ; முடிவது – எதிர்காலம் ; முகிழ்ப்பது – நிகழ்காலம் ஆகிய அம்மூன்று காலக் கூறுபாட்டையும் கடந்து மேலும் அவை மூன்றும் தம்கீழ் அமைந்துள்ள அடி என்க.
விளக்கம்
காலம் என்னும் அருவப் பொருள் இறைவன் போன்று அநாதியாக உள்ளது. அக்காலத்தை நிலக் களனாக் கொண்டு இறைவன் படைப்புத் தொழில் முதலிய முத்தொழிலையும் நிகழ்த்துவான்.அங்ஙனம் தொழில் பற்றித் தோன்றிய பொருள்களையே அள்வையாக வைத்துக் காலத்தை உலகியல் நடத்தற் பொருட்டுக் கூறுபட்டதாக வழங்கப் படுவதல்லது – அது தானே கூறுபடாது. இக்கூறுபட்ட முக்காலமும் படைத்தற் தொழிலோடு தொடங்கி அழித்தற் தொழிலோடு முடிவனவாகும். இம்மூன்றையும் கடந்தவன் இறவன்.  கூறுபடாத அருவமாகிய காலம் தானும் இறைவன் படைப்பிற்குத் துணைகாரணமாய் அவன் ஆட்சிக்கு அடங்கி நிற்கிறது. ( காலமே கடவுள் ஆம் தன்மை குறித்து – ஆயக.)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக