ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-46.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன்.
புதிய உரை:
திருக்குறளில் சில பாக்களுக்குப் புதிய உரை எழுதுகின்றார். அறனோக்கி - (90) வானின்றுலகம் - (103) அழுக்காறு உடையார்க்கு(165) அ்ற்றார் அழிபசி(425), ஆகிய குறள்களுக்குச்சிறந்த உரை எழுதியுள்ளார்.
எச்சவியலில் 16ஆம் நூற்பா உரையில் “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுருகாற்றுப்படையின் முதல் ஆறு அடிகளுக்குச் சிறந்த நயம் எழுதுகின்றார்.
சூத்திரங்களை இடம் மாற்றி அமைத்தல்:
இவர் சொல்லதிகாரத்தில் உள்ள சூத்திர அமைப்புகளை மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றியமைக்குத் தக்க காரணமும் கூறுகின்றார்.
எச்சவியலில் உள்ள மூன்று சூத்திரங்களைக் கொண்டுவந்து, வினையியலின் இறுதியில் வைத்து உரை எழுதுகின்றார். அவற்றை அவ்வாறு அமைக்குமுன் “வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றது என்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்று அன்று.” என்று கூறுகின்றார்.. மேலும் “ இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புட்டுக்கிடந்த இதனை உரை எழுதுவோர், பிரிநிலை வினை என்னும் சூத்திரத்துள் சொல்லப்பட்ட பெயரெச்சம், வினையெச்சம் என்பவற்றை ஈண்டு ஓதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி ஆண்டு சேரவைத்தார் என்பாரும் உளர். என்று பிறர் கருத்தையும் தருகின்றார்.
எச்சவியலில் ‘இசைநிறை’ என்னும் 15ஆம் சூத்திரத்தை 29ஆம் சூத்திரமாகவும் வேற்றுமை மயங்கியலில் ‘அது வென்வேற்றுமை’ என்னும் 10ஆம் சூத்திரத்தையும் ‘ஆறன் மருங்கின்’ என்னும் 13ஆம் சூத்திரத்தையும் மாற்றி 15, 16ஆம் சூத்திரங்களாக வைத்துள்ளார்.
...........வடமொழிப்புலமை............தொடரும்............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக