திங்கள், 13 ஏப்ரல், 2015

விஞ்ஞான பீட விருது – சிறுகதை -3
ஒளிப்படக் கலைஞரும் நானும் புறப்பட்டோம்.தத்துவ மேதை சங்கரனும் தயாராக இருந்தார். இவரின் குணம் தெரிந்த நானும் ஒரு எலுமிச்சைப் பழம் வாங்கிக்கொண்டு சென்றேன்.விஞ்ஞான பீட விருது பெற்ற மகிழ்ச்சியில் தத்துவ மேதை சங்கரனின் கண்கள் சிவந்திருந்தன அவர் ஒரு சாய்வு நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார். அவர் எதிரே  ஒரு நாற்காலி.நேர்காணல் தொடங்கியது; ஒளிப்படக் கருவியும் இயங்கத் தொடங்கியது.“ ஐயா….வணக்கம்”” ம்….”’ உட்காரலாமா ?”” ம்…”“ ஐயா… உங்கள் சொந்த ஊர். பெற்றோர்கள்- எங்கு படித்தீர்கள்? அது பற்றி… அதாவது… உங்கள் இளமக் காலம் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்….”இதுக்கு முந்தி நீ எங்கே சென்னைத் தொலைக் காட்சியில் வேலை பாத்தியா ?நன் ஒன்றும் பேசவில்லை. இவ்வளவு பெரிய மனிதரிடம் சொற்போர் நிகழ்த்த மனம் இடம் தரவில்லை.“ ஐயா.. தங்கள் மனைவி குழந்தைகள் பற்றி..”“ நீ என்ன… குடும்ப அட்டை கொடுக்க வந்தியா ?”“ஐயா…. நீங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள் ?”“ சிந்திக்கத் தொடங்கியபொழுது..”இந்தச் சிந்தனைச் ச் சிற்பி பிறவி மேதைதான் என்று நினைத்துக்கொண்டு….“ ஐயா… நீங்கள் ஒரு பன்முக வித்தகராக விளங்குகிறீர்கள். உங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது அல்லது யார் ? என்று சொல்லமுடியுமா..?”“ சோம்பேறிக்குத்தான்  தூண்டுதல் வேண்டும்..”“ சரி… உங்கள் தத்துவத்திற்கு வயது என்ன?”“ என் வயதுதான்..”..“ஐயா.. நீங்கள் ஏராளமாக எழுதி இருக்கிறீர்கள்….மனித சமுதாயம் பயன் பெற்றதாக உணர்கிறீர்களா…?”“ அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை..”“ ஐயா… இப்பொழுது நீங்கள் எழுதுவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்..?”          “ என்ன.. எழுதினேன் என்று கேள்…. ஏன் எழுதவில்லை என்று கேட்க நீ ஒன்றும் எனக்கு எஜமான் இல்லை…”“ ஐயா…மன்னிக்க வேண்டும்…பாடியவர்கள் பாடாமல் இருக்க முடியாது; எழுதியவர்கள் எழுதாமல் இருக்க முடியாது.. அதனால்தான்…”“ எழுதியவர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..?”கேள்விக்குப் பதில் சொல்லாமல் கேள்விக்குக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருந்தது.. என்ன செய்வது. ஐயா.. தங்களுக்கு விருது கிடைத்த செய்தி அறிந்த போது தங்கள் மன நிலை எப்படி இருந்தது….?”“ ஆறிப்போன கஞ்சியாக இருந்தது..”குளிர்ச்சியாக இருந்தது என்று கொள்வதா…..சுவையற்றுப்போனது என்று கொள்வதா..? என்னுள்ளே தடுமாற்றம்.” ஐயா.. தங்களுக்குக் கிடைத்த விருது தமிழுக்குக் கிடைத்த விருது என்று சொல்லலாமா..”“ நான் தான் தமிழைப் புடுங்கித் தலைகீழாக நட்டவன் என்று சொல்லவில்லையே..!”“ ஐயா.! தாங்களும் தமிழ் வளரத் தொண்டு செய்துள்ளீர்கள் என்று கூறலாமா..?”“ தமிழை யாரும் வளர்க்க வேண்டாம்… அது தானாகவே வளரும்..”” ஐயா..! புல் பூண்டு செடி கொடி மரம் கூட ப் பேணிப் பாதுகாத்தால்தான் வளம் தரும்..ஒரு மொழியைப் பேணிப் பாதுகாத்து வளர்க்காமல் எப்படி வளரும்…?”“ வளர்த்து வளர்வது மொழியில்லை… தானாக வளர்வதுதான் மொழி…!”இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள எனக்கு அறிவு என்று நினைத்துக் கொண்டு…“ ஐயா.. நீங்கள் எழுதிய காலத்திலும் எழுதாமல் இருந்த காலத்திலும் சமுதாயத்தில் மாற்றம் எதையும் உணர்ந்தீர்களா..?”“ நான் எழுதிய காலத்தில் சமுதாயம் உயிருடன் இருந்தது…நான் எழுதாத காலத்தில் சமுதாயம் சடமாகக் கிடக்கிறது.”“ ஐயா..! நீங்கள் மீண்டும் எழுத வேண்டும்…. எப்போது எழுதுவீர்கள் ?”“ எழுத வேண்டும் என்று நினைக்கிற பொழுது..!”“ ஐயா..! இன்றைய எழுத்தாளர்கலைப்பற்றி……”“ தமிழில் வருவதையெல்லாம் நான் படிப்பதில்லை..””ஐயா… உங்களைப் பார்த்து பலர் எழுதக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்களே…!”” எனக்கு விருது கிடைத்ததால் அவர்கள் அப்படிச் சொல்லி இருக்கலாம்… அவர்களும் விருது வாங்க வேண்டுமல்லவா..!”“ ஐயா… தங்களைப்பற்றி ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறார்களாமே…?”“ ஓகோ… அப்படியா… என்னுடைய மார்பு இடுப்பு தொடை அளவு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்துவிட்டதா..?”“ ஐயா தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்களே…!”“ வச்சா என்ன…? அதுக்கு ஏண்டா சத்தம் போடுறீங்க…. அது அவன் இஷ்டம் … அவன தமிழ்ல்ல பேர் வைக்கச் சொன்னீங்கன்னா..தொடை.. தொப்புள் இன்னும் கெட்ட வார்த்தை பேரெல்லாம் வைப்பான்…. அப்புறம் அதுக்கும் சத்தம் போடுவீங்க…!”“ ஐயா… இப்படிச் செஞ்சா தமிழ் அழிஞ்சிடாதா..?”“ தமிழ் அழியாது… தமிழ்நாடு இருக்குறவரைக்கும் தமிழ் இருக்கும்… எங்காவது ஒரு மூலையில  … ஒரு நாலு பேராவது தமிழைப் பேசிக்கிட்டு இருப்பான்..”“ஐயா.. தமிழை உலக மொழியாக உயர்த்த வேண்டாமா..?”“ ஆங்கிலம்தான் உலகமொழி… அது அருமை தெரியாம பேசாதே…!”“ ஐயா… ஆங்கிலம் தேவைதான்… அதுக்காக.. தமிழை ஒழிக்கணுமா ?”“ தமிழை யாரும் ஒழிக்கல….அது கால மாற்றம்..”“ ஐயா… உங்களுக்கு விருது வழங்கப்பட்டது  தமிழ்மொழிக்கு என்று தானே…!”“ அத.. கொடுத்தவன போய் கேளு…”“ஏன்…. வாங்கின நீங்க சொல்லக்கூடாதா..?”“ போடா.. நாயே..!”கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து அவர் என் முகத்தில் வீச….நான் நிலை குலைந்தேன். திடீரென எழுந்து… என் எதிரே நிற்காமல் ..திரும்பி நின்றுகொண்டு மீண்டும் சொன்னார்…..” போடா நாயே…’ என்று.கையில் இருந்த எலுமிச்சைப் பழத்தைப் பின்னே நின்றுகொண்டு… அவர் முன்னே வைத்து….“ ஐயா… இத  உள்ளுக்குச் சாப்பிடுவதைவிட  வெளிப் பூச்சுக்கு மிகவும் நல்லது…. உலக மொழியில் சொல்கிறேன் – “ஃபார் எக்ஸ்டர்னல் யூஸ் ஒன்லி…”“ நன்றி வணக்கம்..”





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக