வியாழன், 9 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 10

மலைபடுகடாம் – அரிய செய்தி : 10
பன்றிப் பொறி
விளைபுனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும் மாட்டிய இருங்கல் அடாஅர்
அரும்பொறி உடைய ஆறே நள் இருள்
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 193 – 196
 கூத்தர்களே நீங்கள் செல்லும் வழியில் --- பன்றி, முற்றிய தினைப் பயிரையுண்டு குறையச் செய்தலால், அஞ்சிய கானவர், அதனைத் தடுப்பதற்காகச் சிறிய வழிகள்தோறும் பொருத்தி வைக்கப்பட்டுள்ள பெரிய கற்பொறிகளை உடையன, ஆகையால், இருள் செறிந்த இராப் பொழுதில் தங்கி, ஞாயிற்றின் கதிர் விரியும் விடியற் பொழுதில் செல்க.
(ஆறு – வழி ; கேழல் – காட்டுப்பன்றி ; நிழத்தல் – குறைதல் ; புழை – சிறியவழி ; மாட்டிய – பொருத்தி வைக்கப்பட்ட ; அலரி – ஞாயிறு (ஆகுபெயர்) நள் இருள் – கும்மிருட்டு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக