ஞாயிறு, 19 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 20

மலைபடுகடாம் – அரிய செய்தி : 20
இனிய உணவு
புளிக் கூழ் :- 
 செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
கவல்விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்
அற்கு இடைஉழந்த நும் வருத்தம் வீட …434 - 437
                   சிவந்த பூக்களையுடைய வேங்கைப்பூவினைப் போன்ற நிறத்தையுடைய அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி ஆகியவற்றைப் புளி கரைத்த உலையில் பெய்து ஆக்கிய புளியங் கூழினை நும் வழிநடை வருத்தம் தீரப் பெறுவீர்.
நெய்ச் சோறு : -
பொன் அறைந்தன்ன நுண்நேர் அரிசி
வெண் எறிந்து இயற்றிய  மாக்கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவீர்… 440 – 443
                          பொன்னை நறுக்கினார் போன்ற நுண்ணிய சீரான அரிசியை, வெள்ளை நிறமுடையதாக ஆக்கிய  கறித்துண்டுகளைக் கலந்த சோற்றை நெய் விழுதை உள்ளேயிட்டு  உண்ணும்படி பெறுகுவீர்.
தினை மாவு : -
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை …
           பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  444 – 445

                       உண்டவரை வேறு ஒன்றையும் நுகரவொட்டாமல் தடுக்கும், இடித்த நுண்ணிய  இனிய தினை மாவுடன் வெல்லத்தைப் பொடியாக்கிப் பிண்டித்த தினை மாவும் பெறுகுவீர்.
( கவல் – மேட்டு நிலம் ; அகலுள் – அகன்ற ஊர் ; குரம்பை – குடில் ; அமலை – சோற்றுத் திரள் ; இழுது – நெய் விழுது ; விசையம் – வெல்லம் ; பூழி – பொடி ; நுவணை -  இடித்த தினைமாவு .) 

1 கருத்து: