வியாழன், 27 ஜூன், 2019

தொல்தமிழர் அறிவியல் - 4

தொல்தமிழர் அறிவியல் - 4
மேற்கு மலைத்தொடர்
                    இந்திய  புவியியல் வரலாற்றில் இமயமலை தோன்றுவதற்கு முன்பே தோன்றியது மேற்குத் தொடர்ச்சி மலை. உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அரியவகை மூலிகைகள், அரிய உயிரினங்கள் ஆகியவற்றின் வாழிடமாகத் திகழ்கிறது இம்மலைத் தொடர்; மனித இன வரலாற்றில் தொல்குடியினர் கால் பதித்த இடமாகக் கருதப்படுகிறது ; குறிப்பாகத் தொல் தமிழ்க்குடியினர் தோற்றம்பெற்ற இடமாகவும் இயற்கையோடியைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இவர்தம் அக, புற வாழ்க்கையை ஆராய்ந்து அறிந்த பழந்தமிழ்ப்புலவர்களின் அறிவியல் ஆய்வுக்களமாகவும் திழ்ந்தது மேற்குமலைத் தொடர்.
               இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.[1][2] [3]
                       இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில்முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரிமலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ளஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.
புவியியல்
                                 இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாகக்  காரணமானது…தொடரும்…..

1 கருத்து:

  1. நம்மவர்களின் அறிவியல் ஆய்வுக்களம் மேற்கு மலைத்தொடர். அறியும்போதே வியப்பாக உள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு