திங்கள், 3 ஜூன், 2019

கரு உருவாகும் காலம்


படித்தலும் பகிர்தலும்அறியாமை அகலவே..!
கரு உருவாகும் காலம்
பூப்பின் புறப்பா டீராறு நாளும்
நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த கால யான.” –தொல்காப்பியம்.
மனைவியிடத்துப் பூப்புத் தோன்றிய மூன்று நாளும் கூட்டமின்றி அணுக இருந்து, அதன் பின்னர்ப் ப்ன்னிரண்டு நாளும் கூடியுறைக என்பதாம்.
பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளும் கருத் தங்கில் அது சில்வாழ்க்கைத் தாதலும் பற்றி முந்நாளும் கூட்டமின்றி என்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத்தலின் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தம் அகலும் அகலவே, அக் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகபேற்றுக் காலத்துக்குரிய நிலைமை கூறிற்று.
மனைவியை நீங்கியிருக்கும் காலமும் நீங்காது உறையும் காலமும் குறித்துக் கூறும் ஆசாரக்கோவை.....
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.”
மனைவியர்க்கு மாதப் பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங் கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரப் பிரிதலாகாது என்பது பேரறிவாளர் கொள்கையாகும்.
இவ்வாறே இலக்கண விளக்க ஆசிரியரும்....
பூத்த காலைப் புனையிழை மனைவியை
நீரா டியபின் ஈராறு நாளும்
கருவயிற் றுறூஉங் கால மாதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்.” என்பார்.
மனைவியோடு கூடலுக்குத் தகாத காலம்.
உச்சியம் போழ்தோ டிடை யாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்தி திநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.” ஆசாரக்கோவை.
நடுப் பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலும் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும் அமாவாசை, பெளர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்தநாளிலும் புணர்தல் ஆகாது.
தொல்காப்பியரின் அறிவியல்  சிந்தனை இன்றைய மருத்துவ அறிவியலோடு பொருந்தியுள்ளமையை, என் ”பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்,” நூலில் கண்டுகொள்க.

1 கருத்து:

  1. அதிகமான, நுட்பமான செய்திகளைக் கண்டேன் ஐயா. மிகவும் நுணுக்கமாக நம் முன்னோர்கள் எழுதிவைத்ததை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு