புதன், 4 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 73 : 24. கூந்தல்கழித்தல்


தொல்தமிழர் அறிவியல் – 73 :  24. கூந்தல்கழித்தல்


கூந்தல் ஒப்பனை
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
 தைஇத் தண்கயம் போல
                     --ஓரம்போகியார், ஐங். 84: 3,4
நறுமணம் கொண்ட மலர்களை அணிந்து, ஐந்து வகையாகக் கோலம் செய்யத்தக்க கூந்தலை உடைய இளமகளிர் தைத் திங்களில் தவத்துக்குரிய நீராடுவதற்கு இடமான குளிர்ந்த நீரை உடைய குளம்.
 ஐம்பால் என்பதற்குக் கூந்தல் எனப் பொருள் கூற இடமிருப்பினும், ஐந்து வகையாக ஒப்பனை செய்தல் என்னும் பொருள் சிறப்புடையது. 1. முடி, 2. சுருள், 3. பனிச்சை, 4. குழல், 5. கொண்டை.

கார்விரை கமழும் கூந்தல்…” அகநா.198: 5.
மணப்பெண்
தகரம் நாறும் தண்நறுங் கதுப்பின் -- அகநா.141: 13.
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்” ----- அகநா.141: 16
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க -- அகநா.86: 16
பலவாகிய கரிய கூந்தல் ‘:குழல் . அளகம். கொண்டை. பனிச்சை. துஞ்சை.ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது.
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் …………….” --- அகநா.136: 28 - 29
ஆராய்ந்து எடுத்த மலர்களைச் சூடிய கரிய பலவாகிய கூந்தல்
 ( ஐம்பால் கூந்தல்)
நாறு ஐங் கூந்தல் கொம்மை வரிமுலை.” -- அகநா.62
கூந்தல் = பருவக் குறிப்பு
கூழையும் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகம் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் ............
                                --குடவாயிற் கீரத்தனார், அகநா. 315: 1 – 3
என் மகளின் தலைமயிரும் குறுகிய நெறிப்பையுடைய கூந்தலாயின முலைகளும் உச்சியில் மெல்லிய முகத்தோடு நன்கு
வளர்ந்து சிமிழ்கள் போலாயின இவள் பெண்மையை அடைந்துவிட்டாள்...... --தாய் கூற்று.
பொம்மல் ஓதி எம்மகள் மணன் என ---அகம்.221: 3.
                             கற்றையாக நெருங்கி வளர்ந்த பொலிவு பெற்ற 

கூந்தலையுடைய எம் மகளுக்குத் திருமணம் என்று கூறி......
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு.  அகநா.302: 13 - 14
பசலை படர்ந்த நெருங்கிப் பருத்த இள முலைகளும் தழைத்த கூந்தலையும்

காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல் கழல்குபு
தாதொடும் தளிரொடும் தண் அறல் தகை பெற.” ---கலித்.27: 5 - 6

புணர்ச்சிக் களிப்பிலேதிளைத்த மகளிரின் கூந்தலைப் போல; குளிர்ந்த அறுதியை உடைய மணல் -  கழன்று வீழ்ந்த தாதாலும் தளிர்களாலும் அழகு பெற்று விளங்கிற்று.

”………………. நன்மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே……”நற். 304: 4 - 5
தலைவன் வந்து புணர்ந்த பொழுதெல்லாம் எனக்கு நல்ல அழகு உண்டாகியது.

கூந்தலில் மலரணிதல்

தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை
அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி
பின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே
…………………………………………..
பொன்நேர் நுண்தாது நோக்கி
என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே!
--கருவூர்க் கண்ணம்பாளனார்.அகம். 180: 5-15
                 
  குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்று விட்டான்; இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப் பார்க்கலாயிற்று.
புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என் மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று! என்று தலைவி நொந்து போகின்றாள். -------------தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக