திங்கள், 23 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –92 : 29.அன்றில் பறவை


தொல்தமிழர் அறிவியல் –92 :  29.அன்றில் பறவை                   


தொன்றுஉறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்
துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
 உண்டுகொல் வாழி தோழி தெண்கடல்                   
                                  ஆலம்பேரிசாத்தனார்,நற். 303 : 4 – 9
                     
                   பண்டுதொட்டு உறைகின்ற , கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியை உடைய, ஊர்ப் பொதுவில் உள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின்கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற அன்றிலின் உயவுக் குரலை கேட்குந்தொறும், நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே, உடம்பு மெலிந்து நம்மீது வருத்தம் உடையவளாய் நிற்பாள்
           வடந்தை துவலை தூவக் குடம்பைப்

           பெடைபுணர் அன்றில் உயங்குகுரல் அளைஇக்

           கங்குலும் கையற வந்தன்று
           யாங்கு ஆகுவன்கொல் அளியென் யானே
                                ஆலம்பேரி, சாத்தனார், நற். 152 : 6 – 9
                            
                மெல்லென வாடைக் காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே, கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றில் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக் கொண்டு, இராப்பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது. கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலையை உடையை யான்,  இவ்வளவு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எங்ஙனம் உய்குவேனோ..?


ஒன்றில் காலை அன்றில் போலப்  

புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை 

யானும்ஆற் றேனது தானும்வந் தன்று 

நீங்கல் வாழியர் ஐய ஈங்கை 
                             மோசிகண்ணத்தனார், நற். 124 : 1 - 4

                              ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை;  யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; - அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; ……….. ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக!

376
பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.  
 ----நாலடியார், 376.
               நாம் பொருளுடையமாயிருந்தகாலத்தில், கோத்த நூலோடு பொருந்திய மணியும்சேர்க்கை பிரியாத அன்றிற் பறவைகளும்போலஎந்நாளும் நம்மைப் பிரியோம் என்று உறுதி கூறியபொன்னாற் செய்த வளையலையணிந்த பொது மகள்,இப்போது, போர்த்தொழில் செய்கின்ற ஆட்டுக்கடாவின் கொம்புபோல் மனம் முறுக்குண்டுவன்மையாய்ப் பின்வாங்கி விட்டாள்; - கவடற்றநெஞ்சமே! இனி நீ அவளிடமே நயந்து நிற்பாயோஅன்றி நன்னெறியில் திரும்பி வருவாயோ? 

வாழிடம்

ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அகமடல் அகவ
                                 கபிலர் , குறிஞ்சிப். 219,220
ஊது கொம்புபோல் வளைந்த வாயினையுடைய அன்றில் பறவைகள் உயர்ந்த பெரிய பனையின் உள் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும்,

                               அன்றில் பறவையின் இனத்தை ஒத்தது மகன்றில் பறவை : “அலர்ஞெமல் மன்றில் நன்னர்ப் புணர்ச்சி; புலரா மகிழ்…” (பரிபா. 8: 44) மலர்களில் திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற முதிராக் காதலோடு முடிவு பெறாத இன்ப நுகர்ச்சியினையும்) “ மகன்றில் பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி”. குறுந். 57. மகன்றில்நீர்ப் பறவை.]-------தொடரும்…..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக