ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –98 : 32. குறும்பூழ்ப் போர்

தொல்தமிழர் அறிவியல் –98 : 32. குறும்பூழ்ப்  போர்
32. குறும்பூழ்ப்  போர்.
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம்கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூம்பொருட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலிஆர் வரகின் பறங்குபீள் ஒளிக்கும்
வன்புல வைப்பின்னதுவே .......
-உறையூர் மருத்துவன்  தாமோதரனார், புறநா.321 : 1-7
                      குறும்பூழ்ப் பறவை(கெளதாரி / சிவல்  Indian Partridge) போர்ப் பயிற்சி தந்து பழக்கப்படும் பறவையாகும்.முறத்தில் உலர வைக்கப்பட்டுள்ள வெள்ளிய எள்ளைத் தின்று எலியைப் பற்றுவதற்காக வரகுப் போரில் பதுங்கிக் கொண்டிருக்கும்.
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்கால்
கறை அணல் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
                         -கடியலூர் உருத்திரங் கண்ணனார். பெரும்பா. 202 – 205
                            மருதநில உழவர். பயிர் அறுக்கும் பருவம் வந்தக்கால் அவர்கள் எழுப்பும் ஆரவாரத்திற்கு அஞ்சி. அவ்விடத்தே உள்ள மரங்களில் கூடு கட்டி வாழும் குறிய காலையும் கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ்ப் பறவைகள். வெண்கடம்பின் நறிய மலரையொத்த பறக்கலாற்றாத தம் இளங்குஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய்க் காட்டிடத்தே தங்கும்.
மேலும் காண்க: பட்டினப் : 53 – 58.
தலைவன் :-
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் அனைத்தல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
                         -மருதன் இளநாகனார், கலித். 95 :5-7
             செறிந்து விளங்குகின்ற பல்லினை உடையாய், யாம் புதிதாக வேறு வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம் ; அதையன்றிப் பிறிது நான் ஏதும் அறிந்ததில்லை ; நீ வேறு ஏதோதோ நினைக்கின்றாயே.
                        நச்சினார்க்கினியர் உண்மையான குறும்பூழ்ப் போர், பரத்தையாகிய குறும்பூழ்ப் போர் என இரண்டாகக் கொண்டு இருவகையாக உரைவரைந்தனர்.---------தொடரும்......

1 கருத்து: