வெள்ளி, 4 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 31 - 33

நற்றிணை – அரிய செய்தி – 31 -  33
                                                  பழமொழி
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்கு
பாண்டியன் மாறன் வழுதி . நற். 97 : 1- 2
  ஆழமாக உண்டாகிய விழுப்புண்பட்டு நோயுற்ற மார்பின் கண் சீயும் நிணமும் தோன்ற ஆறாத அப்புண்ணின் வாயில் ; எஃகினால் இயன்ற வேலைப் பாய்ச்சினாற்போல……
( வெந்த புண்ணுல வேலப் பாச்சினாப்புல--- வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினாற் போல)


நற்றிணை – அரிய செய்தி – 32
பன்றியும் பல்லியும்
………………. ……….. வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பல்லி பட்டென ஆங்கே
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன்
கல்லளைப் பள்ளி வதியும் …………..
உக்கிரப்பெருவழுதியார். நற்.98 : 3  - 7
புன்செய்ப் பயிர்களை மேய சிறிய கண்களையுடைய பன்றி; புனவர் வைத்துள்ள பொறியினது சிறிய வாயிலின்கண் நுழையுங்கால்; விரைந்து பக்கத்தேயிருந்து பல்லி சொல்லிற்றாக – ஆங்கே பன்றி மெல்ல மெல்ல பின்னே வந்து தன் முழைஞ்சினுள் தங்கும்.( பல்லி சொல்லை விலங்கும் உணருமோ…? )
நற்றிணை – அரிய செய்தி – 33
கிளி விடுதூது
-------------------------- செவ்வாய்ப் பைங்கிளி
-------- ------------------- --------------- -----
அம்மனை கிழவோற்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.
செம்பியனார். நற்.102

 கிள்ளாய்! தினைகதிர்களை விரும்பிய மட்டும் உண் ;  தலைவன் மலைப் பக்கத்தே நின் உறவினரைக் காணச் செல்லும்போது – எம் தலைவரையும் கண்டு இம்மலைக் குறமகள் தினை புனக் காவலுக்கு மீண்டும் வந்தனள் எனச் சொல்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக