திங்கள், 7 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 40 - 41

நற்றிணை – அரிய செய்தி – 40 - 41
கள் மணக்கும்
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு …………….
உலோச்சனார். நற்.131 : 7-8
கள் உணவை உண்டால் மகிழ்ச்சி கொள்பவனும் நல்ல தேரை உடையவனுமாகிய  பெரியன் என்பானுடைய  கள் மணம் கழும் பொறையாறு.
நற்றிணை – அரிய செய்தி – 40 . அ.
இரவுக் காவலர்
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி
ஒன்றுஎறி பாணியின் இரட்டும்
……………………… நற்.132: 8 - 10
தலைவி மாளிகையில் இற்செறிக்கப்பட்டாள். காவலர் காத்தற்குரிய தலை. கடை வாயில்களைக் காப்பீராக ஓ – என்று குரலெடுப்பர். இத்தகைய இரவுக் காவலமைந்த வீரர்கள் எழுப்பும் ஒளி பொருந்திய மணியின் ஓசை – தாளத்திலொன்றியமையும் ஒலி போல மாறி மாறி ஒலிக்கும்.

நற்றிணை – அரிய செய்தி – 41
பூ – வேறுபாடு உணர்த்தியது
 நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே
கண்ணகாரன் கொற்றனார் . நற். 143 : 11

தலைவி உடன் போக்கு மேற்கொண்டனள். அன்னை வருந்திக் கூறினாள் ; மகளின் களவை அறிந்திருந்தும் அவளைக் காக்கத் தவறிவிட்டேனே ; களவும் ஓர் அறநெறியே என்றும் கருதினாள். தலைவன் வேற்றுப் புலத்தான்; அவன் தந்த பூவும் தம் நிலத்திற்கு உரியதன்று ; எனப் பூ வேறுபாட்டினைக் கொண்டு தலைவியின் களவை அறிந்திருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக