ஞாயிறு, 8 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 11

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 11
களவு – கற்பு
 நேர்இறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மணம் அயர்கம் சில்நாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என
ஈர நன்மொழி தீரக் கூறி
துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்
                                 கபிலர், குறிஞ்சிப் .  231 – 237
விளங்குகின்ற பூணினையுடையீர், நும்முடைய சுற்றத்தார் நும்முடைய நேரிய இறையையுடைய முன்கையைப் பிடித்து, எமக்குத் தர, நாட்டில் உள்ளார் யாவரும் அறியும் நன்றாகிய திருமணத்தைப் பின்பு நிகழ்த்துவோம். இக்களவொழுக்கத்தால் பெறும் பேரின்பத்தைப் பெறுவதற்காக யாம் சிறிது காலம் ஒழுகா (பழகி) நின்றோம், என்று நும் நெஞ்சு கலங்குதலைக் தவிர்ப்பீராக என்று அருளோடு கூடிய நல்ல சொற்களை இவள் நெஞ்சின் வருத்தம் தீரும்படி கூறினான், ஆவைப் புணர்ந்த ஏறு போல விடாமல் எம்முடன் தொடர்ந்து வந்து,  ஓசை ஒருகாலும் நீங்காத முழவினையுடைய பழைய நம் ஊர் வாயிலில் பலரும் நீர் உண்ணவரும் துறையின்கண் எம்மை நிறுத்தி நீங்கினான்.
 தலைவன், தலைவியின் முன்கையைப் பற்றி, நாடறி நன்மணம் சுற்றத்தார் சூழ நிகழ்த்துவம் என்றானாக. அவன் களவுப்புணர்ச்சியின் நிலை பேறின்மை தெரிந்து, மணமுடித்து எய்தும் கற்பு வாழ்வே நிலையானது என்பதை அறிவான்.
( இறை – கையில் வளையல் தங்குமிடம் ; ஈரம் – அன்பு ; உண் துறை – பலரும் நீர் உண்ணும் துறை,)
முற்றும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக